நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 8 நவம்பர், 2012

NANDINI VIRATHAM ..(11/11/2012)..நந்தினி விரதம் (கோவத்ஸ பூஜை)


ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப 
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் 
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் 
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் 
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் 
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண் 
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே 
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
(ஸ்ரீ ஆண்டாள், திருப்பாவை)
'கோமாதா' என்று தாய்க்குச் சமமாகப் போற்றப்படும் பசுக்களின் சிறப்பு வார்த்தைகளில் அடங்குவதில்லை. சாத்வீகத் தன்மைக்கு உதாரணமாகப் போற்றப்படும் பசு, மனிதர் பெறவேண்டிய செல்வங்களுள் முக்கியமான ஒன்று. அக்காலத்தில், அதிகப் பசுக்களை வைத்திருப்பவர், பெரும் செல்வந்தராகக் கருதப்பட்டார். 'மாடு' என்றாலே செல்வம் என்றும் பொருள். வேள்விகள், ஹோமங்கள் நடக்கும் முன்பாக, கோபூஜை செய்து துவங்குவது நம் சம்பிரதாயம். திருக்கோவில்களில், விடியலில், திருவனந்தல் தரிசனத்தின் போது, இறைவனின் திருமுன், பசுவையும் கன்றையும் அழைத்து வந்து தரிசனம் செய்வித்த பின்பே, சேவார்த்திகள் இறைவனை  தரிசிக்கின்றனர். இறைவனே, கோமாதாவின் திருமுகத்தில் விழிப்பதாக ஐதீகம்.

கன்றோடு சேர்ந்த பசு, சுபசகுனங்களில் ஒன்று. கோசாலை, ஆலயத்திற்கு சமமான பெருமை வாய்ந்தது. கோசாலையில் செய்யப்படும் யாகங்கள், ஹோமங்கள், ஜபங்கள் ஆகியவற்றுக்கு அபரிமிதமான பலன்கள் உண்டு. பசுவை, யார் ஆராதிக்கிறார்களோ, அவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளையும் பெறுகிறார்கள். பசுவிற்கு 'அக்னிஹோத்ரி' என்றும் பெயர் உண்டு. அக்னி ஹோத்ரம் செய்பவர்கள், அக்னியை எப்படி, சிறிதும் சோர்வின்றி ரட்சிக்க வேண்டுமோ, அப்படியே, பசுவையும் ரட்சிக்க வேண்டும்.

பசுவிற்கு ஒரு பிடி அகத்திக்கீரை தருபவன், எண்ணற்ற யாகங்களைச் செய்த புண்ணியப் பலனை அடைகிறான் என்று தர்ம சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. பசுவுக்கு தினமும் ஒரு பிடி புல் தருபவர், மரணத்திற்குப் பின் கட்டாயம் சொர்க்க வாசம் அடைகிறார். தாய்ப்பால் கிடைக்க இயலாத குழந்தைகளுக்கு, பசுவின் பாலே தரப்படுகின்றது. பஞ்சகவ்யம் எனப் போற்றப்படும், பசுஞ்சாணம், பால், தயிர், நெய், கோமியம் ஆகியவை தெளித்தே, யாகசாலைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. பசுவின் சாணமும், கோமியமும், சிறந்த கிருமி நாசினிகள். கிருச்ச விரதம் முதலான விரதங்கள் எடுக்கும் முன்பாக, பஞ்சகவ்யம் கட்டாயம் அருந்த வேண்டும்.

பசுஞ்சாணத்தில் ஸ்ரீலக்ஷ்மியும், கோமியத்தில் கங்கையும் வாசம் செய்வதாக ஐதீகம். ஆகவே, அக்காலத்தில், விடியலில், சாணம் கரைத்த நீரைத் தெளித்து வீடு வாசலை மெழுகித் தூய்மை செய்தார்கள். சாணம் கிருமிநாசினியாதலால், பூச்சிகள் வீட்டினுள் சேராமல் தடுக்கும். பசுஞ்சாணத்தால் தட்டிய வரட்டிகளையே, ஹோமங்களில் உபயோகிப்பது வழக்கம். மிக நுண்ணிய மந்திர ஒலிகளை ஈர்த்துக்கொள்ளும் தன்மையுடையது பசுவரட்டி.

பசுவின் உடலில், எண்ணற்ற தேவதைகள் வாசம் செய்கின்றனர். பசுவின், முகத்தின் மத்தியில் சிவனாரும், வல, இடக் கண்களில் முறையே சூரிய சந்திரரும், வலப்புற நாசியில், முருகனும், இடப்புற நாசியில், கணபதியும், காதுகளில் அஸ்வினி தேவர்களும், கழுத்தின் மேல்புறம் ராகுவும், கீழ்ப்புறம் கேதுவும், கொண்டைப்பகுதியில் பிரம்மாவும், முன்கால்கள் மேல்புறம் சரஸ்வதியும் விஷ்ணுவும், முன்வலக்காலில் பைரவரும், முன் இடக்காலில், ஹனுமனும், பின்கால்களில் முறையே, பராசரர், விஸ்வாமித்திரரும், பின்கால்களின் மேற்புறம், நாரதரும் வசிஷ்டரும், பிருஷ்ட பாகத்தின் கீழ்ப்புறம் கங்கையும், மேற்புறம் ஸ்ரீலக்ஷ்மியும், முதுகுப்புறம், குபேரர், வருணன், அக்னி, பரத்வாஜர் ஆகியோரும், வயிற்றுப் பகுதியில் சனகாதியரும் பூமாதேவியும், வாலின் மேல், கீழ்ப்பகுதியில் முறையே, நாகராஜரும், ஸ்ரீமானாரும், வல, இடக் கொம்புகளில், வீமன், இந்திரனும், நான்கு குளம்புகளிலும், விந்திய மலை, இமயமலை, மந்திர மலை, த்ரோணமலை முதலியவையும், பால்மடியில், அமுதக்கடலும் வாசம் செய்கின்றன.

ஆகவே, பசுவை வணங்கினால், எல்லாத் தேவர்களையும் தொழுத பலன் கிடைக்கும்.  தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்த போது, நந்தா, சுரபி(காமதேனு), பத்திரை, சுசீலை, சுமனை ஆகிய ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன். இவற்றின் சந்ததியரே, இப்பூவுலகில் நாம் காணும் பசுக்கள் என்று புராணம் கூறுகிறது. இவை, இன்றளவும் கோலோகத்தில் வாசம் செய்வதாக ஐதீகம். தானங்களில் கோதானம் மிக முக்கிய இடம் பெறுகிறது. மகாபாபிகளும், பஞ்சகவியம் அருந்தி ஒரு வேளை உபவாசமிருந்தால், அவர் செய்த பாவம் நசியும் என்று அக்னி புராணம் கூறுகிறது.

பசுவின் கால் தூசியில், மஹாலக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம். மாடுகள், மேய்ச்சல் முடிந்து திரும்பும் சமயம்'கோதூளிகா வேளை' என்று போற்றப்படுகிறது. அந்தச் சமயமே, அனைத்து இல்லங்களுக்கும் தேவி எழுந்தருள்கிறாள். ஆகவே, அந்த நேரம் தவறாது விளக்கேற்ற வேண்டும். மாலை நேரத்தில் செய்ய வேண்டிய பூஜைகளை கோதூளிகா வேளையில் துவங்குவது சிறந்தது.
இத்தகைய மகிமை பொருந்திய பசுக்களை போற்றும் விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது, ஐப்பசி கிருஷ்ணபட்ச துவாதசியில் கடைப்பிடிக்கப்படும், நந்தினி விரதம் எனப்படும் கோவத்ஸ பூஜை. இம்மாதம், 11/11/2012ல் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்த விரதம் தோன்றக் காரணமான புராணக்கதையைச் சுருக்கமாகப் பார்க்கலாம். இது, விஷ்ணு புராணத்தில், பிருதுசக்கரவர்த்தியின் சரிதமாகக் கூறப்படுகின்றது.

வானத்தில் வழிகாட்டும் துருவ நட்சத்திரமாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் துருவ சக்கரவர்த்தியின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. தான் செய்த அருந்த்வத்தின் பயனால், ஸ்ரீமந் நாராயணினின் அருளைப் பெற்று, உத்தமமான பதவியை அடைந்த துருவன், சம்பு என்ற பெயருடைய மங்கையை திருமணம் செய்து கொண்டான். அவனுடைய சந்ததியில், அங்கன் என்ற ஒரு மன்னன் இருந்தான். அவனுக்கு வெகு காலமாக வாரிசு இல்லை. அவன் பட்டமகிஷி, மிருத்துவின் புதல்வியாகிய, சுருதை என்பவள். அங்கன், ரிஷிகளின் ஆலோசனைப்படி, புத்ர காமேஷ்டி யாகம் செய்தான். அதன் பலனாக, அவனுக்கு வேனன் என்ற ஒரு பிள்ளை பிறந்தான். அவன், தன் பாட்டனாராகிய மிருத்துவின் குண விசேஷத்தைக் கொண்டிருந்தான். கொடுங்கோலனாகவும், யாகங்கள், ஓமங்கள் முதலியவற்றைச் செய்வதைத் தடுப்பவனாகவும் இருந்தான். தானங்கள் கொடுப்பதையும் தடுத்து, 'தானே, யக்ஞங்களாலும், பிறவற்றாலும் தொழப்படவேண்டியவன்' என்று  நாடு முழுவதும் பறையறிவித்தான்.

ரிஷிகளும், முனிவர்களும், இவ்வாறெல்லாம் செய்வது தவறு, என்று எடுத்துக் கூறியும் அவன் கேட்கவில்லை. அவனது செய்கைகளால், கோபமே வராத முனிவர்களுக்கும் கோபம் வந்தது. அவர்கள், தங்கள் கையிலுள்ள, தர்ப்பைப் புல்லால் அவனை அடித்தார்கள். அவன் எரிந்து, இறந்து கீழே விழுந்தான். உடனே, எங்கும் தூசியும் தும்புமாக நாற்திசைகளிலும் பறந்து வியாபித்தது. இதைக் கண்ட ரிஷிகள், அங்கிருந்த மக்களிடம் வினவ, அவர்கள், "ரிஷிகளாகிய நீங்கள், உங்கள் சுபாவத்தைக் கைவிட்டதாலேயே இவ்வாறு நேர்ந்தது" என்று கூறினார்கள்.

இந்த பெரும் சங்கடத்தை நீக்க, ரிஷிகள் எல்லோரும் கலந்து ஆலோசித்து, உடனே ஒரு புத்திரனை வேனனுக்கு உண்டாகுமாறு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, அதற்காக, எரிந்த வேனனுடைய உடலின் தொடையைக் கடைந்தனர். அப்போது, அவன் பாவ குணங்களெல்லாம் உருவெடுத்து, கறுப்பாக, விகாரமாக‌ ஒரு உருவம் தோன்றியது. அவனே 'பகுகா' என்ற பெயருடைய வேனனின் புதல்வன். அவனை, ரிஷிகள், 'நீஷீத' (அமர்) என்று சொன்னார்கள். அதனால், 'நிஷாதன்' என்பதும் அவன் பெயாராயிற்று. அவன் குலம் நாட்டுக்கு வெளியே, மலை, வனாந்தரங்களில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர். அவன் சந்ததியினரே, நிஷாத இனத்தவரான, விந்திய மலை வேடர்கள்.

அதன் பிறகு, ஒரு நற்புத்திரனை உண்டாக்கும் விதமாக, வேனனுடைய, வலது கையைக் கடைந்தனர் ரிஷிகள். அதிலிருந்து, தேஜோமயமாக, அக்னியைப் போன்று ஜொலிக்கும் ரூபத்துடன், பிருது மாமன்னன் தோன்றினான். அவன் தோன்றிய உடனேயே, வானத்திலிருந்து, அசகவம் என்ற வில்லும் திவ்யமான பாணங்களும் அவன் கையில் சேர்ந்தன. எல்லா புனித நதிகளும், சமுத்திரங்களும், தத்தம் புனித நீரினால், பிருதுமன்னனை அபிஷேகித்து, திவ்ய ரத்தினங்களைக் கொடுத்து வணங்கி நின்றன. பிருது மன்னனின், வலக்கரத்தில் சக்ர ரேகை இருந்ததால், அவர், ஸ்ரீமந் நாராயணனின் அம்சம் என்று அனைவரும் மகிழ்ந்தனர்.

அப்போது வேனனுடைய இடது கரத்திலிருந்து, தீப்பிழம்பாக, ஸ்ரீலக்ஷ்மியின் அம்சத்துடன், ஒரு பெண் தோன்றினாள்.  அவளுக்கு 'அர்ச்சி' என்று பெயரிடப்பட்டது.
பிருது மன்னன், நாட்டில் நல்லாட்சி நடத்தினாலும் அவன் தகப்பனின் செயல்களின் விளைவாக, கடும் வறட்சி ஏற்பட்டது. இதற்கெல்லாம், காரணம், பூமியே என்று வெகுண்டெழுந்த பிருது மன்னன், பூமியின் மீது அம்பை எய்யத் துணிந்தபோது, பூமாதேவி, ஒரு பசுவின் உருக்கொண்டு, தப்பியோடினாள்.

பிருது மன்னன், பசுவைத் துரத்தி, அதைக் கொல்லத் துணிந்தபோது, பசுவின்உருவில் இருந்த பூமாதேவி, 'மன்னனே, என்னைக் கொல்வதால், எல்லா உயிர்களும் அழியுமே!!. எல்லா செல்வங்களும், என்னுள் அமிழ்ந்து, மக்கி விட்டன.

அவற்றை, நான் பால் ரூபமாக சொரிகிறேன். ஒரு கன்றை உருவாக்கிக் கொடுப்பாயாக, அப்போது நான் பாலைப் பொழிவேன். நான் கொடுக்கும் செல்வங்களனைத்தும், பூமியில் தங்கு தடையில்லாமல், பரவும் பொருட்டு, பூமியை சமமாக நிரவுவாயாக' என்றாள். அக்காலத்தில், மலைகள் அனைத்தும், மிக நெருக்கமாக, பரவியிருந்தன. உடனே, பிருது மன்னன், தன் அம்பால் நிலத்தைக் கீறி, நிலத்தைச் சமன் செய்தான். அவனது இந்தச் செயலாலேயே, பயிர்த்தொழிலும்,வாணிபமும் சிறந்து, குடியிருப்புகளும் தோன்றின.

பிருது மன்னன், சுவயாம்புவ மனுவைக் கன்றாக்கி, தன் கைகளையே பாத்திரமாக்கி, சகல செல்வங்களையும் பால் ரூபமாகக் கறந்து கொண்டான். மகரிஷிகள், பிரகஸ்பதியைக் கன்றாக்கி, இந்திரியங்களைப் பாத்திரமாக்கி, வேதமயமான, ஞானத்தைப் பாலாகக் கறந்துகொண்டனர்.

தேவர்கள், இந்திரனைக் கன்றாக்கி, ஸ்வர்ண பாத்திரத்தில், அமிர்தத்தைப் பெற்றனர். அசுரர்கள், பிரகலாதனைக் கன்றாக்கி, இரும்புப் பாத்திரத்தில், மதுவைக் கறந்தனர். இப்படியாக, அனைவரும் அவரவர்க்கு வேண்டியவற்றைக் கறந்து கொண்டு அதற்கேற்ற பலனை அடைந்து அனுபவிக்கலாயினர்.

இதனால், பிருதுவின்  பத்தினி, பூமாதேவி என்று கூறுகிறது மனுஸ்மிருதி. பூமிக்கு இதனாலேயே, பிருத்வி என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த நிகழ்வை ஒட்டியே, கோவத்ஸபூஜை நடத்தப்படுகிறது.

பூஜை செய்யும் முறை:
இதை முக்கியமாக, வடஇந்தியர்கள், குஜராத்தியர் செய்கிறார்கள். குழந்தைகள் சுகமாக இருக்கவும், சந்ததி பெருகவும், இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், முழு உபவாசமிருந்து, கன்றுடன் கூடிய பசுவை நீராட்டி, அலங்கரிக்கிறார்கள்.

அதற்கு, பூஜை செய்து, பயத்தம் பருப்பினால் செய்யப்பட்ட பண்டங்கள், முளைவிட்ட பாசிப்பயறு முதலியவை அளிக்கிறார்கள். பின், தம் குலம் தழைக்க வேண்டுதல் செய்து, பசுவை வலம் வந்து நமஸ்கரிக்கிறார்கள். அன்று முழுவதும், பால், தயிர், நெய் முதலிய பால் பொருட்களை உண்பதைத் தவிர்க்கிறார்கள்.

கோபூஜையின் போது சொல்ல வேண்டிய, வேண்டுவனவற்றை எல்லாம் தரும், காமதேனுவாகிய சுரபியைத் துதிக்கும், கவாஷ்டகத்திற்கு இங்கு சொடுக்கவும். இதை சாதாரண நாட்களிலும் பாராயணம் செய்யலாம்.

நாமும், ஐப்பசி கிருஷ்ண பக்ஷ  துவாதசியன்று, கன்றுடன் கூடிய கோமாதாவைப் பூஜித்து, விருப்பங்கள் நிறைவேறப்பெற்று,

வெற்றி பெறுவோம்!!!!!!
படங்கள் நன்றி:கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..