நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 1 டிசம்பர், 2012

VIBHUTHI MAHIMAI........விபூதி மகிமை

காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

"நீறில்லா நெற்றி பாழ்" என்று பெரியவர்கள் பலர் சொல்லக் கேட்டிருக்கலாம் நாம். நெற்றியில், அவரவர் சம்பிரதாயத்தைப் பற்றி விபூதியோ, திருமண்ணோ இட்டுக் கொள்வது நம் இந்து தர்மத்தில் கட்டாயம். பெண்கள் கட்டாயம் திலகமிட்டுக் கொள்ள வேண்டும். சிவனாரை முழுமுதற்கடவுளாகக் கொண்டாடும் சைவர்கள் விபூதி பூச வேண்டியது மிகக் கட்டாயமான ஒன்று. இந்தப் பதிவில்,  திருநீறு, பஸ்மம் என்றெல்லாம் வழங்கப்படும் விபூதியின் மகிமையைப் பார்க்கலாம்.

புராணங்கள் பலவற்றிலும், விபூதியின் மகிமை விரிவாகப் பேசப்படுகிறது. அம்பிகையின் பிரபாவங்களை பேசும் தேவி பாகவதம், விபூதி அணிந்தவன், அம்பிகையின் திருவருளுக்குப் பாத்திரமாகி, பிறவிக்குக் காரணமான பாசம் நீங்கி, சிவலோகம் அடைவான் என்று போற்றுகிறது.

விபூதி, பசுவின் சாணத்தை, நெருப்பில் தகிப்பதால் உண்டாகும் பஸ்மமே ஆகும். விபூதி தரிப்பதையே சிரோ விரதம் என்று வேதங்கள் புகழ்கின்றன.

விபூதி பூசுவதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அப்படியே பூசுவது. இதை உத்தூளனம் என்பார்கள். இரண்டாவது திரிபுண்டரம். அதாவது, மூன்று கோடுகளாக அணிவது. நீரில் குழைத்து இவ்வாறு பூசுவார்கள்.

சைவத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று விபூதி தரித்தல். திருஞானசம்பந்தப் பெருமான், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் எரித்துச் சாம்பலாக்கிய பின் எஞ்சுவது நீறு என்று அருளியிருக்கிறார்.  மாசுகளற்ற  நிலைக்கு ஒரு குறியீடாக விபூதி கூறப்படுகிறது.

இன்னொரு விதமாகப் பார்த்தால், இந்த உடல் இறந்த பின் வெந்து சாம்பலாகப் போகிறது என்னும் வாழ்வின் நிலையாமைத் தத்துவத்தை எடுத்துச் சொல்லும் செயலாகவும் விபூதி பூசுதலைக் கொள்ளலாம். ஆணவமில்லாமல், இறைத் தத்துவத்தை ஏற்று நடத்தலை, நமக்குப் போதிப்பதே விபூதி பூசுதல்.

விஞ்ஞான ரீதியாகப் பார்க்கும் போது, நெற்றில் விபூதி பூசுவதால், தலையில் நீர் கோத்துக் கொள்ளும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுகிறோம்.

விபூதியின் மகிமையை விளக்கும் புராணக்கதைகளுள் ஒன்று:
ஒரு சமயம் துர்வாச முனிவர் பித்ருலோகத்துக்குச் சென்றிருந்தார். அங்கு வாசம் செய்து வந்த பித்ருக்கள் அவரை தக்க முறையில் வரவேற்று உபசரித்தனர். அவர்களுடன் துர்வாசர் உரையாடிக்கொண்டிருந்த போது, அருகில் எங்கோ ஓர் இடத்தில் இருந்து, 'ஐயோ தாங்க முடியவில்லையே, அடிக்கிறார்களே, துடிக்கிறோமே' என்பது போன்ற ஒலிகள் கேட்டன.

துர்வாசர், இதைக் கேட்டு, பித்ருக்களிடம் காரணம் கேட்ட போது, அவர்கள், 'சமீபத்தில் தான் கும்பீபாகம் என்னும் நரகம் இருக்க்கிறது. அங்கு பாவிகள் அனுபவிக்கும் வேதனைக்குரல்களே இவை. அங்கு பாவிகள் படும் கஷ்டங்கள் சொல்ல  முடியாது. சிவத்துரோகிகள், தெய்வங்களை நிந்திப்பவர்கள், குருவைக் கோபிப்பவர்கள், தாய், தகப்பனை மதியாதவர்கள், மோக வசப்பட்டு மனம் போன போக்கில் கட்டுப்பாடின்றி நடப்பவர்கள், புராணங்களையும், வேத சாஸ்திரங்களையும் நிந்தனை செய்பவர்கள் யாவரும் இந்த நரகத்திற்கு கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்  என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட துர்வாச முனிவர், அந்த நரகத்தைப் பார்க்க வேண்டுமென்று கருதி, அங்கு சென்றார். அதை எட்டிப் பார்த்தார். பின், திரும்ப வந்து பித்ருக்களிடம் விடைபெற்றுப் புறப்பட்டார்.

திடீரென்று, கும்பீபாகத்தில் கேட்டு வந்த கூக்குரல்கள் அடங்கிவிட்டன. அங்கு இருந்தவர்கள் பட்ட வேதனை இருந்த இடம் தெரியாது போயின. அங்கே தென்றல் வீசியது. இசையொலி எழுந்தது. அவர்கள், ஒருவரை ஒருவர், ஆனந்தத்தால் கட்டிக் கொண்டு ஆடிப்பாட ஆரம்பித்தனர். அங்கே ஆனந்தமே நிறைந்தது.

யம கிங்கரர்கள், இதைக் கண்டு திகைத்து, யம தர்மராஜாவுக்கு இதை அறிவித்தனர். அவரும் விரைந்து வந்து இந்த அதிசயத்தைக் கண்டார். அவரால், இதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே அவர், இதை இந்திராதி தேவர்களுக்கு அறிவித்தார். அவர்களாலும் இயலவில்லை. இதை தேவர்கள், விஷ்ணுவுக்கு அறிவிக்க, அவர், சகல தேவர்களுடன், திருக்கைலாயத்திற்கு சென்று, பரமேஸ்வரரை வணங்கி, இதற்குக் காரணம் கேட்டார்.

இறைவனான சிவபெருமான், அவர்களைப் பார்த்து,  'இதன் காரணம், என் பக்தனும் அம்சாவதராமும் ஆன துர்வாச முனிவர், அந்த நரகத்தை எட்டிப் பார்த்த போது, அவருடைய நெற்றியில் இருந்த விபூதி, காற்றில் பறந்து நரக குண்டத்தில் விழுந்தது.அதன் மகிமையால், அங்கு இருந்த  கொடுமைகள் நீங்கி, அது  சுவர்க்கத்தை விடவும் மேலானதாக ஆகிவிட்டது. இனி அந்த இடம்,  பித்ருக்களுக்கு ஒரு புண்ணிய தீர்த்தமாக, 'பித்ருதீர்த்தம்' என்ற பெயரில் விளங்கும். அங்கு சிவலிங்கத்தையும் தேவியின் திருவுருவத்தையும் பிரதிஷ்டை செய்து பித்ருலோகவாசிகள் பூஜிப்பார்கள்.  விபூதியின் மகிமையே இது'  என்றருளினார்.

அதைக் கேட்டு யமதர்மராஜர் மகிழ்ந்து, பித்ருக்களுடன் தானும் சேர்ந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். கும்பீபாக குண்டத்திலே தோன்றிய புண்ணிய தீர்த்தத்தில், அங்கு இருந்த பாவிகள் மூழ்கி, புண்ணியசாலிகளாய், மந்திரகணங்கள் என்ற பெயருடன் திருக்கைலாயத்தை அடைந்தனர். யம தர்மராஜர், புதிய கும்பீபாகத்தை வேறிடத்தில் நிறுவினார்.

திருநீற்றின் மகிமைகள் விளக்கும், திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருநீற்றுப்பதிகத்திற்கு இங்கு சொடுக்கவும்.

விபூதி பூசும் முறை:
விபூதியை கிழக்கு, வடக்கு முகமாகத்தான் நின்று அல்லது அமர்ந்து கொண்டு அணியவேண்டும். நடந்து  கொண்டோ படுத்துக் கொண்டோ பூசக் கூடாது. கீழே சிந்தக் கூடாது. சிவ சிவ என்னும் சிவமந்திரத்தை பக்தியுடன் உச்சரித்து, விபூதி இட்டுக் கொள்ள் வேண்டும். முறையாக மந்திர உபதேசம் பெற்றவர்கள், பிரசாத மந்திரத்தை உச்சரித்து, ஐந்து விரலால் சிரத்திலும், சிரோ மந்திரத்தை உச்சரித்து, மூன்று விரலால் நெற்றியிலும், சத்யோஜாத மந்திரத்தை உச்சரித்து, நடு விரலால் வலக் காதிலும், வாமதேவ மந்திரத்தை உச்சாடனம் செய்து, இடது காதிலும், அகோர மந்திரத்தை உச்சாடனம் செய்து, கழுத்திலும், இருதய மந்திரத்தை உச்சரித்து, மூன்று விரலால் இருதயத்திலும், சிகா மந்திரத்தை உச்சரித்து,  வலது கரத்திலும், கவச மந்திரத்தை உச்சரித்து இடது கரத்திலும், ஈசான மந்திரத்தை உச்சரித்து, நடு விரலால் நாபியிலும் விபூதி தரிக்க வேண்டும். விபூதி பூசும் அளவு, முறை இவை குறித்த மேலதிகத் தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்.

விபூதி பூசுவதன் மகத்துவம்;
விபூதி பூசாத தேகம் சுடுகாட்டுக்கு சமமாகும் என தேவி பாகவதம் கூறுகிறது.  விபூதியில்லாத தேகம், சிவாலயமில்லாத கிராமம், சிவார்ச்சனை இல்லாத பிறவி, சிவனை ஆச்ரயிக்காத வித்தை இவை யாவும் வீண் என்று வேதம் சொல்கிறது. விபூதியை பக்தியுடன் தரிப்பவன், தன் உடலில் சிவனையே தரிப்பவனாகிறான். விபூதியை நிந்திப்பதும், அலட்சியப்படுத்துவதும்,  சிவனையே  நிந்திப்பதற்குச் சமம்..  

நம் நெற்றியின் நடுவில் ஆஜ்ஞா சக்கரம் இருக்கிறது. முறைப்படி மந்திரங்கள் ஜபித்துக் கொண்டு விபூதி பூசுவதை, ஆக்ஞேய ஸ்நானம் என்று  கூறுகிறார்கள். விபூதி தரிப்பதால், சந்நியாசி ஞானத்தையும், இல்லற வாசிகள், இல்லற தர்மம் சிறத்தலையும், பிரம்மச்சாரிகள், வித்தையில் வெற்றி காணுதலையும், அடைகிறார்கள்.  மந்திரங்களில் சிறந்ததான காயத்ரி ஜபிக்கும் போது ஒருவர் கட்டாயம் விபூதி பூச வேண்டும். இல்லையேல்  அவருக்கு காயத்ரி ஜபிக்கும் தகுதி கிடையாது. விபூதி இல்லாமல் சந்தியாவந்தனம் செய்வது தோஷத்தைக் கொடுக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

முக்திக்கு வழியாக உள்ளவை, சிவலிங்க பூஜை, ருத்திராக்ஷம் அணிதல், ஐந்தெழுத்தை ஓதுதல், விபூதி தரித்தல் ஆகியவை ஆகும்.

சிவமந்திரத்தைக் காட்டிலும் மேலான மந்திரமில்லை. சிவ பரத்தைக் காட்டிலும் மேலான பரமில்லை. சிவார்ச்சனையின் புண்ணியத்தை விடப் பெரிய புண்ணியம் இல்லை. அது போல், விபூதி தரித்தலைக் காட்டிலும் மேலான புண்ணிய தீர்த்த ஸ்நானம் இல்லை. ஒருவர் நீராட இயலாத நிலையில் இருந்தாலும், அவர், தன் மேனியெங்கும், விபூதியைத் தெளித்துக் கொண்டு, முறைப்படி விபூதியிட்டுக் கொள்ளுதல் (விபூதி ஸ்நானம்) கட்டாயம் செய்ய வேண்டும்.

விபூதி தரிப்பதால், சகல துக்கங்களும் பாவங்களும் நீங்கும். மரணகாலத்தில், பஸ்மஸ்நானம் எனப்படும் விபூதி ஸ்நானத்தை ஒருவன் அடைந்தால், அவன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு சிவலோகத்தை அடைகிறான். விபூதி இருக்கும் இடத்தில் துர்சக்திகள் இருக்க முடியாது. விபூதியை ரக்ஷையாகவும் தரிக்கலாம். பயணங்கள் செல்லும் போது உடன், விபூதியைக் கொண்டு செல்வது ஒரு ரக்ஷை(பாதுகாப்பு) போல் ஆகும். விபூதியை வீசி எறிவதோ அல்லது தாண்டுவதோ பெரும் பாவம்.

நாம் தினமும் நீராடுவதை, பிரகிருதி என்றும் பந்தம் என்றும் கூறுவார்கள். இந்த பந்தம் நீங்குவதற்காகவே விபூதி ஸ்நானம் விதிக்கப்பட்டிருக்கிறது. நீராடுவது உடலின் வெளிப்புறத்தை மட்டும் தான் சுத்தம் செய்யும். ஆனால், விபூதி தரித்தலோ உடலின் உள்ளும் புறமும் சுத்தம் செய்ய வல்லது.

மனிதருக்கு விதிக்கப்பட்ட வைதீக காரியங்கள் செய்யும் வேளையில், ஒருவருக்கு இயற்கையின் உந்துதலால் இடையில் எழுந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அவர், கை கால்களை சுத்தம் செய்து, விபூதி தரித்துக் கொண்டு அதன் பின், காரியங்களைத் தொடர்ந்து செய்யலாம். விபூதியின்  மகிமையை விவரித்துக் கொண்டே போகலாம். பதிவின் நீளம் கருதியே நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது. 

இறையருளால்

வெற்றி பெறுவோம்!!!
படம் நன்றி: கூகுள் படங்கள்.

3 கருத்துகள்:

  1. திருநீறு பற்றி எழுத சொன்னால்
    தித்திக்கும் செய்திகளாக ஓராண்டிற்கு எழுதலாம் அத்தனை உள்ளது

    மேலும் சேர்க்க

    துயிலேறிய சோர்வும் கெடும் துயரம் கெடும் நடுவன்
    கையிலேறிய பாசம் துணிகண்டே முறித்திடுமால்
    குயிலேறிய பொழில் சூழ்திருக் குன்றேறி நடக்கும்
    மயிலேறிய மணியே என வளர் நீறணிந்திடிலே

    என்ற புண்ணிய நீற்று மான்மியத்தை தரும் திருஅருட்பாவினை உங்கள் அனுமதியுடன் சேர்த்துக் கொள்கிறோம்..

    முறையாக மந்திர உபதேசம் பெற்றவர்கள் எப்படி நீறு பூச வேண்டும் என குறிப்பிட்டதுடன்

    மற்றவர்கள் எப்படி பூச வேண்டும் என
    குறிப்பிட்டிருந்தால் நமது நோக்கம் எண்ணம் சரியாக அமையும்..

    வாழ்க..
    தொடர்கிறோம் நட்புடனே..

    பதிலளிநீக்கு
  2. இணையக் கோளாறு காரணமாகப் பதிலளிக்கத் தாமதமானதற்கு மன்னிக்கக் கோருகிறேன் ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..