நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

ARUTPERUNJOTHI THANIPERUNKARUNAI....அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே
குருவே அயன்அரி ஆதியர் போற்றக் குறைதவிர்ப்பான்
வருவேல் பிடித்து மகிழ்வள்ள லேகுண மாமலையே
தருவே தணிகைத் தயாநிதி யேதுன்பச் சாகரமாம்
கருவேர் அறுத்திக் கடையனைக் காக்கக் கடன்உனக்கே


திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
திறலோங்கு செல்வம்ஓங்கச்
செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
வளர்கருணை மயம்ஓங்கிஓர்
வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
வடிவாகி ஓங்கிஞான
உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
உய்கின்ற நாள்எந்தநாள்
தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே
(வள்ளலார் பெருமான்.)
இன்றைய தினம் தைப்பூசம். உலகெங்கிலுமுள்ள முருகபக்தர்களால் மிகச் சிறப்புடன் கொண்டாடப்படும் விழாவாக தைப்பூசம் திகழ்கிறது. சூரியன் சிவாம்சம் உடையவரென்றும், அவரது ஒளி சக்தி அம்சமுடையது என்றும், சூரியனது வெப்பமே முருகன் என்றும் கூறுவதுண்டு. சூரியனது தேர் அச்சு வடக்கு நோக்கித் திரும்பும் உத்தராயணப் புண்யகாலத்தில், வரும் தைப்பூச தினம் முருகப் பெருமானுக்கு உகந்ததாகச் சிறப்பிக்கப்படுகிறது.உமையம்மையிடமிருந்து, முருகனார், சக்தி வேல் வாங்கிய திருநாளே தைப்பூசம். ஆகவே, முருக பக்தர்கள், காவடி சுமந்தும், பால்குடங்கள் தாங்கியும், முருகப்பெருமான் அருளாட்சி புரியும் தலங்கள் தோறும் வந்து தரிசிக்கின்றனர்.

பெரும்பாலான முருகன் ஆலயங்களில் தெப்பத் திருவிழாக்களும், தேர்த்திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

முருகபக்தர்கள், தைப்பூச தினத்தில், உபவாசமிருந்து,  கந்தபுராணம் என்னும் கடலையே தன்னுள் அடக்கிய மஹாமந்திரமாக பாம்பன் சுவாமிகள் சிறப்பிக்கும் 'வேலுமயிலும்' என்ற மந்திரத்தை, அன்றைய தினம் முழுவதும் ஒருமைப்பட்ட மனத்துடன் உச்சரித்து, ஆலய தரிசனத்துடன் விரதத்தை நிறைவு செய்வது முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுத் தரும்.


வடலூரில் சத்திய ஞான சபையில், ஜோதி தரிசன விழாவாக, தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. திருவருட்பா அருளிய மகான் இராமலிங்க அடிகளார், வடலூரில் சத்திய ஞான சபையை 1872ம் ஆண்டு நிறுவினார். இது எண்கோண அமைப்பை உடையது. ஆண்டு தோறும், தைப்பூச தினத்த்தில், ஏழு திரைகளை விலக்கி, ஜோதி தரிசனம் செய்யும் விழா வடலூரில் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு திரையும் வெவ்வேறு வர்ணமுடையது.

தை மாதம் பூச நட்சத்திர தினத்தன்று, பௌர்ணமி திதி வருவதால், அன்றைய தினம் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன. ஆகவே, அன்றைய தினம் அவ்விருவருக்கும் ஆதாரமான, அக்னி ரூபமான ஜோதி தரிசனம் செய்யும் முறையை வள்ளலார் பெருமான் ஏற்படுத்தினார். ஏழு வித வர்ணத் திரைகளும், நம் ஆன்மாவை மூடியுள்ள கர்ம வினைகளைக் குறிக்கும்.

வள்ளலார் பெருமான், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை ஜோதி வடிவமாக வழிபட்ட பெருமகனார். பரம்பொருளை 'அருட்பெருஞ்சோதி ஆண்டவர்' என்றே குறிக்கிறார். அளவிட முடியாத பேரொளி மயமான கருணைப் பெருங்கடலே அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்
அருட்பெரும் தலத்து மேனிலையில்
அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்
அருட்பெரும் திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரும் நிதியே
அருட்பெருஞ் சித்தி என் அமுதே
அருட்பெருங் களிப்பே அருட்பெரும் சுகமே
அருட்பெருஞ் ஜோதி என்னரசே !

என்று அருட்பெருஞ்சோதி ஆண்டவரைப் போற்றுகிறார் வள்ளலார் பெருமான்.

ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்

என்றும்,
வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி

என்றும் எங்கும் நிறைந்து அளவிலாக்கருணை புரியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை, ஒன்றாய் இருந்து பலவாய் விரிந்து அருள்மழை பொழியும் பரம்பொருளைப் பாடுகிறார் வள்ளலார் பெருமான்.

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இலார் குணங்கள்
ஏதும் இலார் தத்துவங்கள் ஏதும் இலார் மற்றோர்
செயற்கை இல்லார் பிறப்பு இல்லார் இறப்பு இல்லார் யாதும்
திரிபு இல்லார் களங்கம் இல்லார் தீமை ஒன்றும் இல்லார்
வியப்புறு வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்
உயத்தருமோர் சுத்த சிவானந்த சபைதனிலே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

என்று ஒரே ஒரு ஒளியாய் விளங்கும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை, நிர்க்குண  நிராகார பரம்பொருளை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.

சாதி சமய பேதமில்லா சுத்த சன்மார்க்க நெறியை உலகுக்குத் தந்த மகான் வள்ளலார் பெருமான்.

தைப்பூசத்தன்று வடலூரில், சத்தியஞானசபையில், அதிகாலை ஆறு மணியளவில், சூரிய சந்திரர்கள் இருவரும் நேர்க்கோட்டில் அமைவதைத் தரிசிக்கின்ற வேளையில், ஜோதி தரிசன விழா  நடைபெறுகிறது.ஜோதி தரிசனம், புறத்தில் மட்டுமல்லாது,  நம் அகத்தின் கண் அமைந்துள்ள ஆன்ம ஜோதியைத் தரிசனம் செய்வதையும் குறிக்கும். “சத்ய ஞான சபையை என்னுள் கண்டனன்” என்று வள்ளல் பெருமான் உரைக்கிறார். இதன் பொருள், அனைவரும், தங்களுள் உறைந்திருக்கும் ஆன்ம ஜோதியைத் தரிசிக்க வேண்டும் என்பதே. 
நடராஜப்பெருமானின் திருநடனம், இவ்வுலக இயக்கத்தையே குறிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது குறித்து, அருணோதயத்தில் ஆருத்ரா தரிசனம் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். வள்ளலார் பெருமான், ஆடல் அரசனின் திருநடனத்தைக் குறித்து அருளியிருப்பதைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

ஒரு பிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையை
உன்ன முடியா அவற்றின்
ஓராயிரம் கோடி மாலண்டம் அரன்அண்டம்
உற்ற கோடா கோடியே
திருகலறு பலகோடி ஈசன் அண்டம் சதா
சிவன் அண்டம் எண்ணிறந்த
திகழ்கின்ற மற்றைப் பெருஞ் சத்தி சத்தர் தஞ்
சீரண்டம் என் புகலுவேன்
உருவுறு இவ் அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில்
உறு சிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடு நின்று நடனமிடும்
ஒரு பெருங் கருணை அரசே
மருவி எனை யாட்கொண்டு மகனாக்கி அழியா
வரம் தந்த மெய்த் தந்தையே
மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம்
வல்ல நடராஜ பதியே !

என்று நடராஜப்பெருமானின் திருநடனத்தைப் போற்றுகிறார் வள்ளலார் பெருமான்.

உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி உவப்புறுவேதி நவப்பெருவாதி
அமைத்திடுபூதி அகத்திடும்ஆதி அருட்சிவஜோதி அருட்சிவஜோதி


பரமநடம்சிவ சிதம்பரநடமே பதிநடம்சிவ சபாபதிநடமே
திருநடனம்பர குருநடமே சிவநடம்அம்பர நவநடமே


என்றும்  வள்ளலார் பெருமான் அருளியிருக்கிறார். இவ்விதம் நடராஜப்பெருமான், தில்லையில் தம் திருநடனத்தை அருளிய தினம் தைப்பூசம்.

தைப்பூசத்தன்று, தேவாரம், திருவாசகம் முதலிய நூல்களைப் பக்தியுடன் பாராயணம் செய்து, மூன்று வேளைகளிலும் பால், பழம் மட்டும் உண்டு, வீட்டில் சிவபூஜை செய்து, மாலையில் கோவிலில் சிவதரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்வது,  பிறவாப்பெருநிலையை அளிக்கும்.

மன்னிய நின்அரு ளாரமு தம்தந்து வாழ்வித்துநான்
உன்னிய உன்னிய எல்லாம் உதவிஎன் உள்ளத்திலே
தன்னியல் ஆகிக் கலந்தித் தருணம் தயவுசெய்தாய்
துன்னிய நின்னருள் வாழ்க அருட்பெருஞ் சோதியனே

இறையருளால்,

வெற்றி பெறுவோம்!!!!
படங்கள் உதவி: கூகுள் படங்கள்.

சனி, 26 ஜனவரி, 2013

THIRUVILAKKU POOJAI.....திருவிளக்கு பூஜை


மங்கலப் பொருளாம் விளக்கிதுவே
மாதர் ஏற்றும் விளக்கிதுவே
விளக்கில் ஏற்றும் ஜோதியினால்
விளங்காப் பொருளும் துலங்கிடுமே
விளக்கில் விளங்கும் ஜோதிதனை
விமலை என்றே உணர்ந்திடுவோம்.
புற இருளை மட்டும் அல்லாது அக இருளையும் நீக்க வல்லது திருவிளக்கு வழிபாடு. தினந்தோறும் காலை மாலை இருவேளையும் தீபமேற்றி வழிபடுவது நம் சம்பிரதாயம். 

தை மற்றும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருக்கோவில்களில்  1008, 108, என்ற எண்ணிக்கையில் திருவிளக்கு பூஜைகள் செய்து கூட்டு வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது.

விளக்கினை ஏற்றி ஒளியை அறிமின், விளக்கின் முன்னே வேதனை மாறும் என்று திருமந்திரம் போற்றுகிறது. ஆலயங்களில் பலர் கூடிச் செய்யும் திருவிளக்கு வழிபாடு, மந்திர பூர்வமாகச் செய்யும் வேள்வி செய்வதற்குச் சமம்.

வெள்ளிக்கிழமைகள் மட்டுமல்லாது, சந்திரபகவான் தம் அம்ருத ஒளியைப் பிரவகிக்கச் செய்கிற பௌர்ணமி தினம், மற்றும், சந்திர சூரியர்கள் நேர்க்கோட்டில் சந்திக்கிற அமாவாசை தினம் ஆகியவற்றில் திருவிளக்கு வழிபாடு செய்வது விசேஷப் பலன்களைக் கொடுக்க வல்லது.
ஒவ்வொரு மாத பௌர்ணமி, அமாவாசை தினங்களில் திருவிளக்கு பூஜை செய்வதற்கான பலன்கள்.
  • சித்திரை பௌர்ணமி மற்றும் அமாவாசை -தான்ய விருத்தி ஏற்படும்.
  • வைகாசி பௌர்ணமி மற்றும் அமாவாசை -செல்வம் உண்டாகும்.
  • ஆனி பௌர்ணமி மற்றும் அமாவாசை  -திருமணத் தடை நீங்கும்.
  • ஆடி பௌர்ணமி மற்றும் அமாவாசை -ஆயுள்விருத்தி உண்டாகும்.
  • ஆவணி பௌர்ணமி மற்றும் அமாவாசை- புத்திரபாக்கியம் கிட்டும்.
  • புரட்டாசி பௌர்ணமி மற்றும் அமாவாசை -பசுக்கள் விருத்தியாகும்
  • ஐப்பசி பௌர்ணமி மற்றும் அமாவாசை -தீராத நோய் நீங்கும்.
  • கார்த்திகை பௌர்ணமி மற்றும் அமாவாசை -முக்தி கிட்டும்.
  • மார்கழி பௌர்ணமி மற்றும் அமாவாசை -ஆரோக்கியம் நிலைக்கும்.
  • தை பௌர்ணமி மற்றும் அமாவாசை- எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.
  • மாசி பௌர்ணமி மற்றும் அமாவாசை -துன்பம் நீங்கும்.
  • பங்குனி பௌர்ணமி மற்றும் அமாவாசை - தர்மசிந்தனை மேலோங்கும்.
கூட்டுப் பிரார்த்தனை செய்வதன் மூலம் மேற்கண்ட பலன்கள் பன்மடங்கு பெருகும் என்பது உறுதி.

நம் இல்லத்திலும் எங்கும் நிறைகிற இறையொளியை தீபத்தில் எழுந்தருளச் செய்து, பூஜித்து வழிபடலாம். தீபத்தில் எழுந்தருளுகிற சுடரை, தீபலெக்ஷ்மி என்றே வழிபடுவது நமது வழக்கம். தீபமேற்றும் வேளையில், நல்ல எண்ணங்களோடு, நமக்குத் தெரிந்த துதிகளைக் கூறிக் கொண்டே விளக்கேற்றுவது நல்லது. 
இல்லத்தில், திருவிளக்கு பூஜை செய்ய வேண்டுவோர், கீழ்க்காணும் விதிகளைத் தெரிந்து கொள்வது நல்லது.
  • நெய்யூற்றி விளக்கேற்றுவதால் சகல செல்வங்களும் பெறலாம். நல்லெண்ணை, ஆமணக்கெண்ணை முதலியவை உபயோகித்து விளக்கேற்றுவதால், துன்பங்கள் விலகி, சகல சுகங்களும் பெறலாம்.
  • குலதெய்வத்திற்கு முக்கூட்டு எண்ணை(வேப்பெண்ணை, இலுப்பை எண்ணை, பசுநெய் மூன்றும் கலந்தது) ஊற்றி விளக்கேற்றுவது சிறந்தது.
  • வாழைத்தண்டின் நாரினால் திரி திரித்து விளக்கேற்ற பித்ரு தோஷம் நீங்கும். பஞ்சுத் திரி நலமெல்லாம் நல்கும். தாமரைத் தண்டுத் திரி செல்வம் பெருக்கும். வெள்ளை எருக்கம் இலைப்பட்டையைத் திரியாகப் பயன்படுத்த, நிறைந்த செல்வம் ஏற்படும். புது, மஞ்சள் துணியைக் கத்தரித்து, திரியாகப் பயன்படுத்த அம்பிகையின் அருட்பிரவாகத்தை உணரலாம். அதே போல், சிவப்பு நிறத் துணியைத் திரியாகப் பயன்படுத்த, திருமணத் தடங்கல் நீங்கும்.
  • வெள்ளைத் துணியின் மீது பன்னீர் ஊற்றிக் காய வைத்து, அதைத் திரியாகக் கத்தரித்து உபயோகிக்க, வேண்டும் விருப்பம் அனைத்தும் ஈடேறக் காணலாம்.
  • தெற்குத் திசை தவிர மற்றத் திசை நோக்கி விளக்கேற்றலாம்.
  • ஒரு முகம் தீபமேற்ற மத்திமப்பலன் கிட்டும். இருமுகம், குடும்ப ஒற்றுமையைப் பெருக்கும், மூன்று முகம் விளக்கேற்ற புத்திரபாக்கியம் கிடைக்கும். நான்கு முகம் ஏற்ற, நிலம், செல்வம் முதலியவை கிட்டும்.
  • ஐந்து முக தீபம், கருவறையிலிருக்கும் தெய்வ சாந்நித்யத்தைக் கொண்டு வரும் ஆகவே, விளக்கு பூஜை செய்ய ஐந்து முக தீபமேற்றி அதில் அம்பிகையை ஆவாஹனம் செய்வதே சிறந்தது.
  • விளக்கை ஆண்கள் ஏற்றலாம். ஆனால் அதை வளர்த்து விடும் (தீபத்தை அணைக்க என்று சொல்லக் கூடாது) உரிமை பெண்களுக்கே. கையால் வீசியும், காற்றை வாயால் ஊதியும் தீபத்தை வளர்த்துவிடக் கூடாது. பூவால் ஜோதியை ஒற்றி வளர்த்துவிட வேண்டும். திரியை உள்ளிழுத்தும் செய்யலாம்.
  • திரியைக் கையால் தூண்டி விடக் கூடாது.
  • எவர்சில்வர் விளக்குகள், உடைந்த, ஒட்ட வைத்த விளக்குகள் தவிர்க்கவும்.
  • விளக்கு ஏற்றி, பூஜை ஆரம்பித்த பிறகு, நடுநடுவே எண்ணை ஊற்றுவதைத் தவிர்ப்பது நலம். ஆகவே அதற்கேற்றபடி, நடுவில் கொஞ்சம் குழிவாக,  எண்ணை பிடிக்கும்படியான விளக்குகள் சிறந்தது.
  • குத்துவிளக்கை பூஜைக்கு உபயோகப்படுத்துவதே சிறந்தது.
பூஜை ஆரம்பிக்கும் முன்:
  • பூஜைக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு, நிவேதனங்களைத் தயார் செய்து கொண்ட பின்பே பூஜைக்கு அமரவும்.
  • சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வது நல்லது. வேண்டும் பிற நிவேதனங்களும் செய்யலாம்.
  • திருவிளக்கு பூஜைக்கு, விளக்கை கிழக்கு முகமாக ஏற்றுவதே சிறந்தது. பூஜிப்பவர், வடக்கு நோக்கி அமர்ந்து பூஜிக்கவும்.
  • வாழை இலையில் அரிசியை சதுரமாகப் பரப்பி அதன் மேல் திருவிளக்கை இட்டு பூஜிப்பது சிறந்தது. இலையின் நுனி, விளக்குக்கு இடப்புறம், வடக்கு நோக்கி இருக்க வேண்டும். சிறிய தாம்பாளத்தட்டிலும் அரிசியைப் பரப்பி அதன் மேல் விளக்கை இட்டு பூஜிக்கலாம். திருவிளக்கின் கீழிருக்கும் அரிசியை, மறுநாள்  வீட்டுக்கு உபயோகிக்கலாம்.
  • மாக்கோலமிட்டு அதன் மேல் வாழை இலையை வைப்பது சிறந்தது.
  • பூஜிப்பவர், சிறு மணை அல்லது விரிப்பில் அமர்ந்து தான் பூஜை செய்ய வேண்டும்.
  • பூஜிக்கும் விளக்கிற்கு அருகில் ஒரு சிறு விளக்கை ஏற்றி வைக்கவும். அதிலிருந்து தான், ஊதுபத்தி,கற்பூரம் முதலியவை ஏற்ற வேண்டும். பூஜை செய்யும் விளக்கை அதற்கு உபயோகிக்கக் கூடாது.
  • பூஜை செய்யும் போது நடுவில் எழுந்திருக்கக்கூடாது.
  • பூஜை செய்யும் விளக்கைச் சுத்தம் செய்து, பொட்டு வைத்து, தண்டுப்பாகத்தில், பூ சூட்டி பூஜையில் வைக்கவும். விளக்கின் அடிப்பகுதியில், அம்பிகையின் பாதங்களைக் குறிக்கும் விதமாக, இரண்டு பொட்டுக்கள் வைக்கவும்.
  • எண்ணை ஊற்றி அதன் பின்பே திரியைப் போடவேண்டும்.
  • பூஜைக்குப் புதுத் திரிகளையே உபயோகிக்க வேண்டும். தினந்தோறும் விளக்கேற்றும் போதும், புதுத் திரிகளை உபயோகிப்பதே சிறந்தது.
  • குங்குமம், அட்சதை, மலர்கள் ஆகியவற்றால் அர்ச்சிக்கலாம்.
  • பூஜை முடியும் வரை, விளக்கு ஆடக் கூடாது. ஆகவே, சற்று தாராளமாக அரிசி போட்டு, விளக்கை சரியாக வைக்கவும். சற்று கெட்டித் திரியாகப் போட்டால், பூஜை முடியும் வரை சுடர்கள் அலைபாயாமல் இருக்கும்.
பூஜைக்குத் தேவையான பொருட்களைச் சேகரிக்கும் நேரத்திலிருந்து, பூஜை முடியும் வரை இறை நாமங்களை ஜெபித்தபடி இருப்பது, பூஜையில் மனம் ஒன்றிச் செய்ய உதவும்.

மஞ்சள் பிள்ளையாரை, ஒரு சிறு வெற்றிலையில் அல்லது தட்டில் பிடித்து வைத்துக் கொள்ளவும்.

தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழத்தை ஒரு தாம்பாளத் தட்டில் வைக்கவும். பிள்ளையாருக்கு நிவேதனம் செய்யத் தேவையான வெற்றிலை, பாக்கு, பழத்தைத் தனியாக வைக்கவும்.

பூஜைக்குத் தேவையான,மலர்கள், அட்சதை முதலியவற்றைத் தனித் தனி தட்டுக்களில் வைக்கவும். சந்தனம், குங்குமம், உள்ளிட்ட பூஜைப் பொருட்களை கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டு, திருவிளக்கை நமஸ்கரித்து, பூஜைக்கு அமரவும்.

முதலில், பிரதான விளக்கிற்கு அருகிலிருக்கும் சிறு விளக்கை ஏற்றவும். பின், பிரதான விளக்கை, அந்த சிறு விளக்கைக் கொண்டோ, தீபக்காலைக் கொண்டோ ஏற்றவும். விளக்கு ஏற்றும் போது,'ஒளிவளர் விளக்கே போற்றி' என்று சொல்லிக் கொண்டே ஏற்றவும்.

மஞ்சள் பிள்ளையாரில், ஸ்ரீ விக்னேஸ்வரரை எழுந்தருளப் பிரார்த்தித்து, பூஜை எவ்வித விக்னமும் இன்றி நிறைவேற விக்னேஸ்வர பூஜையைச் செய்யவும். பிள்ளையாருக்கு, வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்யவும்.

பின், பிரதான விளக்கில், அம்பிகையை எழுந்தருளப் பிரார்த்திக்கவும். நம் உள்ளத்திலும் இல்லத்திலும் திருவிளக்கிலும் அம்பிகை எழுந்தருளி, நம் வாழ்வில் ஒளியேற்றப் பிரார்த்திக்கவும். பின், அம்பிகைக்கு உபசார பூஜைகள் செய்து, லக்ஷ்மி அஷ்டோத்திரம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், திருவிளக்கு போற்றிகள் முதலியவற்றை, நேரம்,சௌகரியத்திற்கு தகுந்தபடி கூறி, குங்குமம், அட்சதை மற்றும் மலர்களால் அர்ச்சிக்கவும்.
பூஜை செய்வதற்கு, ஸ்ரீ லலிதா அஷ்டோத்திர சத நாமாவளிக்கு இங்கு சொடுக்கவும்.
ஊதுபத்தி ஏற்றிக் காட்டவும். ஒரு முக தீபத்தை(தீபக்கால்) ஏற்றிக் காட்டவும். பின்பு நிவேதனங்களை பக்தியுடன் சமர்ப்பிக்கவும். நிவேதனம் செய்யும் போது, எவ்வித நிவேதனமாக இருந்தாலும் 'அம்ருதமயமான இந்த நிவேதனத்தை உனக்குச் சமர்ப்பிக்கிறேன்(சர்வம் அம்ருதமயம் நிவேதயாமி)' என்று கூறி சமர்ப்பிக்கவும். தேங்காய் உடைத்து, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் நிவேதனம் செய்யவும். கற்பூரம் ஏற்றிக் காட்டவும். தூபம் முதலானவை காட்டும் பொழுது, எழுந்து நின்று உபசார பூஜைகளைச் செய்வது சிறந்தது.

முடிந்தால், திருவிளக்கைச் சுற்றி வந்து நமஸ்கரிக்கவும். இல்லையெனில், ஆத்மபிரதக்ஷிணமாக(தன்னைத் தானே சுற்றுதல்) செய்து திருவிளக்கை நமஸ்கரிக்கவும். கை நிறைய புஷ்பங்களை எடுத்து அம்பிகையின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்து நமஸ்கரிக்கவும்.

ஒரு தட்டில், மஞ்சள் குங்குமம் கலந்த நீரில், இரு சிறு நெய்தீபங்களை ஏற்றி வைத்து, திருவிளக்கிற்குக் காட்டவும். இந்த ஆரத்தி நீரை பூஜை முடிந்த பின் செடிகளுக்கு ஊற்றவும்.
பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்காக அம்பிகையிடம் மானசீகமாக மன்னிப்புக் கோரவும். நமஸ்கரிக்கும் போது, தீபச்சுடரில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையுடன், மனமொழி மெய்யை இணைத்து, 'நீயே அனைத்தும்' என்று மானசீகமான சரணாகதியடைந்து நமஸ்கரிக்கவும். 'நீங்காத பக்தியை அருள்வாய்' என்று அம்பிகையிடம் மனமுருகி வேண்டவும்.

பூஜை முடிந்ததும், பூ, அக்ஷதையை திருவிளக்கின் பாதத்தில் இட்டு, தீபத்திலிருக்கும் அம்பிகையை தம் இடம் சேரப் பிரார்த்திக்கவும். பின் திருவிளக்கை, கிழக்காக நகர்த்தவும். பூஜைப் பிரசாதங்களை சிறிது உண்டுவிட்டு, மற்றவர்களுக்கும் விநியோகிக்கவும். சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் அளிப்பது சிறந்தது.

குத்துவிளக்கின் முத்துச் சுடரொளியில் அம்பிகை குடியிருக்கிறாள். நம்மைச் சுற்றிலும் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள், சக்திகளை அகற்ற வல்ல வலிமை தீப வழிபாட்டிற்கு உண்டு. இதை உணர்ந்து, உள்ளன்போடு தீப வழிபாடு செய்யச்செய்ய, வாழ்வில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்கூடாகக் காணலாம்.

தீப வழிபாடு செய்து,அம்பிகையின் அருளால்
வெற்றி பெறுவோம்!!!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

THAI KRUTHIGAI SPECIAL POST (21/1/2013).....அறுவர் வளர்த்த ஆரமுது.....(தை கிருத்திகை சிறப்புப் பதிவு)

முத்தைத்தரு பத்தித் திருநகை 
அத்திக்கிறை சத்திச் சரவண 
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் 
முக்கட்பர மற்குச் சுருதியின் 
முற்பட்டது கற்பித் திருவரும் 
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் 
பத்துத்தலை தத்தக் கணைதொடு 
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு 
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் 
பத்தற்கிர தத்தைக் கடவிய 
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் 
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே 
தித்தித்தெய ஒத்தப் பரிபுர 
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி 
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத் 
திக்குப்பரி அட்டப் பயிரவர் 
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு 
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக் 
கொத்துப்பறை கொட்டக் களமிசை 
குக்குக்குகு குக்குக் குகுகுகு 
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை 
கோட்புற்றெழ நட்பற் றவுணரை 
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி 
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே. 
(ஸ்ரீஅருணகிரிநாதர், திருப்புகழ்)

தை மாதத்தில் வரும் விசேஷ தினங்களில் முக்கியமான ஒன்று தை கிருத்திகை. ஞானஸ்வரூபமான எம்பெருமான் முருகனின் திருஅவதாரம் நிகழ்ந்தபொழுது, முருகப்பெருமானைப் போற்றி வளர்த்த ரிஷி பத்தினிகள் அறுவரே கார்த்திகைப் பெண்கள். அவர்கள் அறுவரும், முருகனருளால்  வானமண்டலத்தில், நட்சத்திரங்களாக அருளுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று, திருமுருகனை வழிபாடு செய்வோர், முருகனருளால், வேண்டியவை எல்லாம் கிடைக்கப்பெறுவது கண்கூடு.

இந்தப் பதிவில், திருமிகு கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணத்தில், கந்தப் பெருமானின் திருஅவதாரப்படலம் மற்றும் சரவணப்படல‌த்திலிருந்து சில செய்யுள்களை, அவற்றின் பொருளுடன் பார்க்கலாம்.
கந்த புராணம், திருஅவதாரப் படலம்.

வளஞ்செறி இனைய பாலால் வான்சர வணமாம் பொய்கைத்
தளஞ்செறி பதும மொன்றில் சராசரம் யாவுங் காப்பான்
உளஞ்செறி கருணை யெய்தி ஒப்பிலாக் குமர மூர்த்தி
இளஞ்சிறு மதலை போல இனிதுவீற் றிருந்தான் மன்னோ.

சரவணப்பொய்கையில் உள்ள மிகுந்த தளங்கள் (இதழ்கள்) உள்ள தாமரை மலர் ஒன்றில், இந்த உலகம் யாவையும் காக்கும் பரம்பொருளான முருகப்பெருமான்,  தமக்கு நிகரென்று எவருமில்லாத குமரமூர்த்தி, தம் உள்ளம் நிறைந்த‌  கருணையால், சிறு குழந்தையாகி இனிது வீற்றிருந்தார்.

தீர்த்திகைக் கங்ககை தன்னில் திகழ்சர  வணத்தில் வந்த
மூர்த்திகைக் குழவி யேபோல் முதற்புரி யாடல் நோக்கி
ஆர்த்தி யுறாத உள்ளத் தரிமுதல் அமரர் யாருங்
கார்த்திகைத் தெரிவை மாரை விளித்திவை கழற லுற்றார்.

நீர் நிரம்பித் திகழும் சரவணப்பொய்கையில், குழந்தையாகத் தோன்றித் தன் முதல் திருவிளையாடலை நிகழ்த்தியருளிய(இதன் பின் பற்பல திருவிளையாடல்களை முருகப்பெருமான் நிகழ்த்தி அருளப்போகிறார் என்பதால் இதை முதற்புரியாடல் என்று குறிக்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார் அவர்கள்) முருகப்பெருமானை கண்டதால் மகிழ்வுற்ற உள்ளத்துடன், திருமால் முதலான அமரர்கள் யாவரும், அவரை வளர்ப்பதற்காக, கார்த்திகைப் பெண்களை அழைத்தனர்.
சாற்றருஞ் சரவ ணத்தில் சண்முகத் தொருவ னாகி
வீற்றிருந் தருளு கின்ற விமலனோர் குழவி போலத்
தோற்றினன் அவனுக் குங்கள் துணைமுலை அமுத மூட்டிப்
போற்றுதிர் நாளு மென்ன நன்றெனப் புகன்று வந்தார்.

திருமால் முதலான அமரர்கள் யாவரும், கார்த்திகைப் பெண்களை நோக்கி, 'சரவணப்பொய்கையில், ஆறுமுகத்துடன் உதித்தருளிய சண்முகப்பெருமானை, பாலூட்டி சீராட்டி வளர்த்து வருவீர்களாக'! என்று கட்டளையிட்டனர்.

மறுவறும் ஆர லாகும் மாதர்மூ விருவர் தாமும்
நிறைதரு சவர ணத்தின் நிமலனை அடைந்து போற்ற
உறுநர்கள் தமக்கு வேண்டிற் றுதவுகோன் ஆத லாலே
அறுமுக வொருவன் வேறாய் அறுசிறார் உருவங் கொண்டான்.

கார்த்திகைப் பெண்கள் அறுவரும், சரவணப் பொய்கையை அடைந்து, சண்முகப்பெருமானை வேண்ட, அடியவர்களுக்கு வேண்டுவனவற்றை அருளும் முருகப்பெருமான் அவர்களுக்கு உதவும் பொருட்டு ஆறு சிறு குழந்தைகளாக உருக்கொண்டார்.
ஆறுரு வாத லோடும் அறுவரும் மகிழ்ந்து வேறு
வேறுதா மெடுத்துத் தத்தம் வியத்தகு துணைமென் கொங்கை
ஊறுபா லமுதம் அன்னோற் குதவலும் முறுவல் செய்து
மாறிலா அருளால் ஆற்ற வருந்தினன் போல வுண்டான்.

ஆறு கார்த்திகைப் பெண்களும் ஆறு சிறு குழந்தைகளாக உருக்கொண்ட ஆறுமுகப்பெருமானை ஆளுக்கொருவராக எடுத்து, வாரியணைத்து மகிழ்ந்து, பாலூட்டினர்.  முருகப்பெருமானும், தம் மாறாத அருட்திறனால், முறுவல் செய்து, பாலுக்காக வருந்தி அழும் குழந்தை போல், பாலருந்தினார்.

அழலெனும் மீன வர்க்கத் தறுவருங் குமரன் ஆடல்
முழுவது நோக்கி நோக்கி முதிருமற் புதநீ ரெய்திக்
குழவிக ளென்றே உள்ளங் கோடல்விட் டகலா தஞ்சி
வழிபடு கடவு ளோரில் போற்றினர் மனங்கொள் அன்பால்.

கார்த்திகைப் பெண்கள் அறுவரும், குமரப்பெருமான் குழந்தையாகப் புரிந்த திருவிளையாடல்களை, முழுவதும் பார்த்து பார்த்து, ஆனந்தித்து, அந்த அற்புதங்களில் திளைத்து, ஆறு உருக்கொண்ட பெருமானை குழந்தைகளென்று சீராட்டி வளர்த்தாராயினும், மனத்துள், பயபக்தியுடன் வழிபடத்தகுந்த பரம்பொருள் என்று உணர்ந்து அன்பால் போற்றினர்.

சரவணப்படலம்.

சரவ ணந்தனில் தனதுசேய் ஆறுருத் தனையும்
இருக ரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித்
திருமு கங்களோ ராறுபன் னிருபுயஞ் சேர்ந்த
உருவம் ஒன்றெனச் செய்தனள் உலகமீன் றுடையாள்.

சரவணப் பொய்கையில், தனது குழந்தையான முருகப்பெருமானின் ஆறு உருவங்களையும், தம் இருகரங்களால் உமாதேவியார் அன்புடன் எடுத்து சேர்த்து அணைத்தார்.  அவ்வாறு செய்து, திருமுகங்கள் ஆறும் பன்னிரு தோள்களும் சேர்ந்த ஒரு உருவமாக, கந்தப்பெருமானாக‌,  ஒருங்கு செய்தருளினார்.

கந்தன்றனை நீர்போற்றிய கடனால்இவன் உங்கள்
மைந்தன்எனும் பெயராகுக மகிழ்வால்எவ ரேனும்
நுந்தம்பக லிடைஇன்னவன் நோன்றாள்வழி படுவோர்
தந்தங்குறை முடித்தேபரந் தனைநல்குவம் என்றான்.

சிவனாரும் உமாதேவியாரும் கார்த்திகைப் பெண்களை நோக்கி, 'கந்தனை  நீங்கள் போற்றி வளர்த்த காரணத்தால், முருகப்பெருமானுக்கு, கார்த்திகேயன் என்னும் திருநாமம் ஏற்படும்' என்று மகிழ்ந்து அருளினர். மேலும், சிவனார் கார்த்திகைப் பெண்களுக்கு நட்சத்திரப் பதவி அளித்து, 'உங்கள் நட்சத்திரம் வரும் நன்னாளில், விரதமிருந்து, முருகப்பெருமானை வேண்டி வழிபடுவோருக்கு வேண்டும் வரமெல்லாம் வழங்கி முக்தியும் அருளுவோம்' என்று ஆசி கூறினார்.

இத்துணை சிறப்புமிக்க கார்த்திகை நட்சத்திர தின‌த்தில், முருகபக்தர்கள் யாவரும், முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுகின்றனர். கிருத்திகை நட்சத்திர தினங்களில் ஆடி கிருத்திகை, தை கிருத்திகை ஆகிய இரண்டும் சிறப்பு மிக்கவை. தக்ஷிணாயனத் துவக்கமான, ஆடி மாதத்தில் வருவதால், ஆடி கிருத்திகையும், உத்தராயணத் துவக்கமான தை மாதத்தில் வருவதால் தை கிருத்திகையும் சிறப்புப் பெறுகின்றன. ஒரு வருடத்தில், ஆடி கிருத்திகை துவங்கி, தை கிருத்திகை வரை மாதந்தோறும் கிருத்திகை விரதமிருந்து வழிபடுவோருக்கு தீராத் துயர் தீரும் என்பது நம்பிக்கை.

விரதம் இருக்கும் முறை:
ஏகாதசி விரதம் இருக்கும் முறையிலேயே கார்த்திகை விரதமும் இருக்க வேண்டும். கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணி நட்சத்திர தினத்தன்று ஒரு வேளை உணவு மட்டும் உட்கொள்ள வேண்டும். பின், கார்த்திகை நட்சத்திர தினம் முழுவதும் உபவாசமிருந்து, மறு நாள் ரோகிணி நட்சத்திரத்தன்று அதிகாலையில் பாரணை செய்ய வேண்டும். இவ்வாறு முறைப்படி செய்ய இயலாதோர், கார்த்திகை நட்சத்திர தினத்தன்று, முழு உபவாசம் இருந்து, கந்தப்பெருமானின் துதிகளை பக்தியுடன் பாடி, பூஜை செய்து, மாலையில், திருக்கோவிலில் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு வந்து ஏதேனும் எளிய உணவு அருந்தலாம். உணவில் உப்பில்லாமல் இருப்பது சிறந்தது. அன்று முழுவதும் கோபப்படாமல், அதிகம் பேசாமல் உபவாசம் இருப்பது சிறந்தது.

கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானை வழிபட உதவும், ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய கராவலம்ப ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.

வேல் முருகன் கோலோச்சும் திருத்தலங்கள் தோறும் தை கிருத்திகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தெப்பத் திருவிழாக்கள், தேர்ப்பவனிகள் முதலியன சிறப்புற நடத்தப்படுகின்றன. பக்தர் கூட்டம் கொண்டாடிப் போற்றும் சிங்கார வேலன், அருள்மழை பொழிந்து, நம் எல்லோரையும் வாழ்வித்து வழி நடத்த வேண்டுவோம்.

கிருத்திகை விரதமிருந்து, எல்லாம் வல்ல கந்தப்பெருமானின் அருள் பெற்று,

வெற்றி பெறுவோம்!!!

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

PONGAL SPECIAL PART 2 (14/1/2013)....தமிழர் திருநாள்

ஸ்ரீமத் பாகவதத்தில், ஸ்ரீகிருஷ்ணரே, சூரிய பகவானின் பெருமைகளை, தன் புத்திரர்களுள் ஒருவனாகிய சாம்பனுக்கு உபதேசிக்கிறார். சூரியனை முழுமுதல் கடவுளாகப் போற்றும் பவிஷ்ய புராணத்திலும் இந்த நிகழ்வு காட்டப்படுகிறது.

பவிஷ்யபுராணத்தின்படி, துர்வாசமுனிவரால் சபிக்கப்பட்டு நோயால் பீடிக்கப்பட்ட சாம்பன், ஸ்ரீகிருஷ்ணரை அணுகி, யாரை வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்று கேட்ட பொழுது, சூரியனை வழிபடுமாறு கூறும் ஸ்ரீ கிருஷ்ணர் பின்வருமாறு கூறுகிறார்........

'சூரியனே அனைத்துத் தேவர்களுள்ளும் உயர்ந்தவர். அவரே உயிரினங்களின் எல்லா செயல்களுக்கும் சாட்சியாவார். எல்லா தேவதைகளுக்கும் அதிபதி அவரே. இவ்வுலகின் ஆதாரம் அவரே. சூரிய தேவனே, பிரம்மாவாக சிருஷ்டியையும், விஷ்ணுவாக உலகைக் காத்தலையும், பரமசிவனாக பிரளய காலத்தில் ஒடுக்குதலையும் செய்கிறார். அனைத்து தேவர்களும், சித்தகணங்களும், யோகிகளும் அவரையே தியானிக்கிறார்கள். சூரியபகவானின், வலக்கண்ணாக விஷ்ணுவும் இடப்பக்கம் பிரம்மாவும், நெற்றியில் சிவனாரும் வாசம் செய்கிறார்கள். நான்கு வேதங்களும்  சுயரூபமெடுத்து அவரையே  துதிக்கின்றன.

சூரியனாலேயே மழை பொழிகிறது. அவராலேயே, காலச்சக்கரம், பகல், இரவு, நாள், மாதம், வருடம் எனச் சுழல்கிறது. அவராலேயே பருவகாலங்கள் ஏற்படுகின்றன. வாயுவை எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பது போல், சூரிய பகவானும் எல்லா இடத்திலும் வியாபித்துள்ளார்.

இவ்வாறு சூரிய பகவானின் பெருமைகளை சாம்பனுக்கு விரித்துரைக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

நிர்க்குணப் பரப்பிரம்மமான சூரிய பகவானே, 'த்வாதச (பன்னிரெண்டு) ஆதித்யர்க'ளாக, பன்னிரெண்டு வடிவங்களை எடுத்துக் கொண்டு, பன்னிரெண்டு வகையான செயல்களைப் புரிகிறார். த்வாதச ஆதித்யர்கள் பின்வருமாறு.

1. தேவர்களைக் காக்கும் இந்திரன். மேகத்தைக் கட்டுப்படுத்துபவர் சூரியபகவான். சிம்ம மாதமாகிய ஆவணி மாதச் சூரியனின் திருநாமமே இந்திரன்.
2. படைக்கும் தொழிலைச் செய்யும் தாதா. இந்த திருநாமம் கொண்ட சூரியன், உயிர்களின் தோற்றத்திற்குக் காரணமான வெம்மையைத் தருபவர். மாதங்களில், இவர் சித்திரை மாதத்திற்கு உரியவராகக் கருதப்படுகிறார்.
3. உலகத்தில் மழையைப் பொழிவிக்கும் பர்ஜன்யன். நீர் நிலைகளில் இருக்கும் நீரை அமுதமென அள்ளி மேகமாக்கித் தருபவர் இவரே!. இவர் பங்குனி மாதத்துக்கு உரியவராகக் கருதப்படுகிறார்.
4. உணவுப்பொருள்களை விளைவித்து அருளும் பூஷா.விதைத்த விதைகள், பூமியில் முளைக்கத் தேவையான அளவு வெப்பத்தை அளிப்பவர் பூஷா. மாசிமாதச் சூரியனே பூஷா.
5. மூலிகைகளின் சக்தியாக இருந்து நோய்களைப் போக்கும் துவஷ்டா. இவர் ஐப்பசி மாதத்திற்கு உரியவராகக் கருதப்படுகிறார். அடைமழை மாதமான ஐப்பசியில், நோய் நொடிகள் அண்டாதிருக்க அருளுபவர் இவரே.
6. மூச்சுக்காற்றை அளித்து உயிர்களை இயங்கச் செய்யும் அர்யமான். 'வைகாசி வாய் திறக்கும்' என்று தொடங்கி, வீசும் காற்றின் அளவைக் குறித்துச் சொல்லப்படும் பழமொழிகளை நாம் அறிவோம். மிதமான காற்றுக்குத் தலைவன் அர்யமான். வைகாசி மாதச் சூரியனின் திருநாமம் இதுவே.
7. உயிர்களுக்கு நலம் வழங்கும் பகன். உயிரினங்களின் உடலில் உயிர் தங்கியிருக்க வெம்மை தேவைப்படுகிறது. இந்த வெம்மை இல்லாவிட்டால் உடல் குளிர்ந்துவிடும். அத்தகைய வெம்மையைத் தரும் பகலவனின் திருநாமமே இது. மாதங்களில் இவர் தைமாதச் சூரியனாக அறியப்படுகிறார்.
8. உயிர்களிடத்தில் ஜடராக்னி ரூபத்தில் இருந்து, உண்ணும் உணவின் ஜீரண சக்திக்கும், உடல் வெப்பம் சீராக இருக்கவும் உதவும் விவஸ்வான். எல்லா வகையான அக்னிக்கும் ஆதாரம் இவரே. மாதங்களில் இவர் புரட்டாசி மாதத்துக்குரியவராகக் கருதப்படுகிறார். 
9. தீய எண்ணங்களையும் தீய சக்திகளையும் அழிக்கும் விஷ்ணு. பரம்பொருளின் எங்கும் நிறைத் தன்மையே விஷ்ணு. பகலவனின் பிரகாசம் போல் தீப ஒளி நிறையும் கார்த்திகை மாதத்திற்கான‌ சூரியனே விஷ்ணு என்று அறியப்படுகிறார்.
10. வாயுக்களின் வடிவிலிருந்து உயிர்களுக்கு உதவும் அம்சுமான். இதமான வெப்பம் தருபவரே அம்சுமான். பனி நிறைந்த மார்கழி மாதத்திற்கான சூரியனே அம்சுமான்.
11. நீர் வடிவிலிருந்து உயிர்களுக்கு உதவும் வருணன். ஆடியில் வீசும் பெருங்காற்றுக்கு அதிபதி இவரே. ஆகவே ஆடி மாதச் சூரியனே வருணன் என்று அறியப்படுகிறார்.
12. உயிர்களின் நலனுக்காக, சந்திரபாகா நதிக்கரையில் தவமியற்றும் மித்திரன். கடலரசனின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தி உயிர்களுக்கு உற்ற தோழனாக விளங்குபவர். சந்திரபகவான் இவராலேயே ஒளி பெறுகிறார். மாதங்களில், ஆனி மாதச் சூரியனே மித்ரன் என்று புகழப்படுகிறார்.

பாரசீகத்தைச் சேர்ந்த பார்சி வகுப்பினர் சௌரமதத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். காலப்போக்கில், இம்மதம், சைவ, வைணவத்தில் கலந்து விட்டது. எனினும், சூரிய வழிபாடு இன்றளவும் உள்ளது. ஸ்ரீ சூரிய பகவான், தம்மை விடிய‌ற் காலையில் வணங்கி  வழிபடுவோருக்கு, ஆரோக்கியம், நினைவாற்றல், வெற்றி, புகழ் யாவும் வழங்கி வாழ்வாங்கு வாழவைக்கிறார் என்பது கண்கூடான உண்மை.

இத்தகைய மகிமை பொருந்திய சூரிய பகவானைத் தொழும் நாளே தைத்திங்கள் முதல் நாள். தமிழர் திருநாள். 'பொங்கலோ பொங்கல்' என்று வானதிரக் கூவி, உணவும் வாழ்வும் வழங்கிடும் பகலவனுக்கு நன்றி சொல்லும் பொன்னாள் இன்னாள்.  உழவர் பெருமக்களுக்கு நன்னாள்.

தை மாதப் பிறப்புக்கு முதல் நாள் போகிப்பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. வீட்டைச் சுத்தம் செய்து, பழையன கழிக்கும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதக் கடைசி நாளான  அன்று, வெண்பொங்கல் செய்து நிவேதித்தல் வழக்கம்.
தை மாதம் முதல் நாளே பொங்கல் திருநாள். அதிகாலை, வீட்டுக்கு வெளியே வண்ண வண்ணக் கோலமிட்டு, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பால் காய்ச்சி,  பால் பொங்கி வரும்போது, வாழ்வில் மங்கலம் நிறைந்து பால் போல் பொங்கி வழிய பகலவனை பிரார்த்தித்தல் நம் வழக்கம்.பின், புது அரிசியால் சர்க்கரைப் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு நிவேதனம் செய்து வழிபடுவார்கள். சில ஊர்களில், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் இரண்டும் செய்து நிவேதனம் செய்வார்கள். எல்லா வகையான காய்கறிகள், பழங்கள் அனைத்தும் சூரியபகவானுக்கு படைக்கப்படும்.

கரும்பு, மஞ்சள் கொத்து முதலியவை கட்டாயம் பூஜையில் இடம் பெறும். முதலில் பால் பொங்கிய  பின்னரே அரிசி சேர்ப்பது கட்டாயம். மார்கழி மாதம் முழுவதும், வாசல் கோலத்தின் நடுவில், பூசணிப் பூவை செருகி வைக்கப் பயன்படுத்திய சாண உருண்டையை வரட்டியாகத் தட்டிக் காய வைத்து, அதையே  பொங்கலிட பயன்படுத்துவது வழக்கம். சில ஊர்களில் இந்த வரட்டிகளைப் பயன்படுத்தி, காணும் பொங்கலன்றோ அல்லது தை மாதம் வளர்பிறை தொடங்கும் தினத்தன்றோ கன்னிப் பெண்களும் குழந்தைகளும் கூடி, ஊர் நலனுக்காக வேண்டி 'சிறு வீட்டுப் பொங்கல்' செய்வார்கள்.

ஆடி தொடங்கி ஆறு மாத காலம் தக்ஷிணாயனம் எனவும், தை முதல் நாள் தொடங்கி ஆறு மாத காலம் உத்தராயணம் எனவும் வழங்கப்படுகிறது. தேவர்களின் பகல் பொழுதான இந்த ஆறு மாத காலத்திலேயே திருமணம் முதலான மங்கல நிகழ்வுகள் நடத்துவது பழங்கால மரபு. அறுவடை முடிந்து, நெல் விற்பனையின் மூலம் உழவர்களின் பணப்புழக்கம் அதிகரிக்கும் காலமாதலால், மங்கல நிகழ்வுகள் நடத்த வழி பிறக்கும்.அதனால் தான், 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற சொல்வழக்கு ஏற்பட்டது.

பொங்கல் திருநாளன்று உத்தராயணப் புண்யகாலம் துவங்குவதை ஒட்டி ஏக(ஒரு) சக்கரத் தேர்க்கோலம் போட்டு அதன் மேல், பொங்கல் பானையை வைத்து நிவேதனம் செய்வார்கள்.

பொங்கலுக்கு மறுநாள், கால்நடைகளுக்கு நன்றி கூறும் மாட்டுப்பொங்கல் திருநாள். உழவுக்கு உதவும் மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அலங்கரிப்பார்கள். அன்றைய தினமும் பொங்கல் வைத்து மாடுகளை சாப்பிடவைப்பார்கள். ஜல்லிக்கட்டு தமிழரகளின் வீர விளையாட்டுக்களில் ஒன்று.

அன்றைய தினம் கனுப்பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. பொங்கலன்று மிகுதியான சாதத்தில், குங்குமம், மஞ்சள், தயிர்  ஆகியன சேர்த்து பல நிற சாதமாகப் பிசைந்து, சர்க்கரைப் பொங்கலுடன் மஞ்சள் இலையில் சின்ன சின்ன உருண்டைகளாக, கனுப்பிடி வைத்து, காகங்களை கூவி அழைத்து உண்ண வேண்டி, பின் 'காக்காக்கூட்டம் கலைஞ்சாலும் என் கூட்டம் கலையாமலிருக்க வேண்டும்' என்று  பிறந்த வீட்டு நலனை வேண்டுவார்கள் பெண்கள். இதற்காக, பிறந்த வீட்டிலிருந்து, பெண்களுக்கு கனுச்சீர் தருவது வழக்கம்.

அடுத்த நாள் காணும் பொங்கல் திருநாள். உற்றார் உறவினர்களைச் சந்தித்தல், வெளியிடங்களுக்கு சுற்றுலாவாகச் செல்லுதல் என்று விழாக்கோலம் பூணுகிறது தமிழகம்.

திருமணமான முதல் வருடம், இரண்டு பொங்கல் பானைகள், அரிசி, வெல்லம், மஞ்சள் கொத்து, புத்தாடைகள்,கரும்புக்கட்டு என பெண்களுக்கு சீர்வரிசைகள் தருவார்கள். அதன் பின் ஒவ்வொரு வருடமும், பணமாகவோ, பொங்கல் பொருட்களாகவோ சீர்வரிசைகள் தொடருவது நம் கலாசாரத்தில் அழகு மிகுந்த வழக்கம். தம் வீட்டில் பிறந்த பெண்கள், நல்ல விதமாகப் புகுந்த இடத்திலும் பண்டிகை கொண்டாடவேண்டும் என்ற அக்கறையும் இந்த நல்ல வழக்கத்தின் பின்னால் இருக்கிறது. பெற்றோர்கள், அதன் பின் உடன்பிறந்தோர் என்று வீட்டில் பிறந்த பெண்ணிற்கு சீர் வரிசை தரும் ந்ல்ல வழக்கம் தொட்டுத் தொடரும் பாரம்பரியம் நம்முடையது.

தை மாதம் முதல் நாள் தைப்பொங்கல் நாளாக தமிழ்நாட்டிலும், மகர சங்கராந்தி என்று பிற மாநிலங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து, மகர ராசிக்கு பிரவேசிக்கும் நாளாதலால் 'மகரசங்கராந்தி' என்று சிறப்பிக்கப்படுகிறது.கர்நாடகாவில் வெல்லம், கொப்பரைத் துண்டுகள், கடலை, வெள்ளை எள் மற்றும் இனிப்பு மிட்டாய்கள் கலந்த கலவையை, பெரியோர்களுக்கு அளித்து ஆசி பெறுதல் முக்கிய நிகழ்வு.

சபரிமலை வாசன் சுவாமி ஐயப்பன் மகர சங்கராந்தித் திருநாளன்றே தன் பக்தர்களுக்கு காந்தமலை மேல் ஜோதி ஸ்வரூபனாக அருட்காட்சி அருளுகிறார்.


தமிழர் திருநாளான தைத்திங்கள் முதல் நாளில், நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும், பால் பொங்குவதைப் போல் மகிழ்ச்சியும் இன்பமும் பொங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் என் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இறையருளால்

வெற்றி பெறுவோம்!!!!

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

வியாழன், 10 ஜனவரி, 2013

PONGAL SPECIAL. PART 1...ஞாயிறே நலமே வாழ்க! பகுதி 1........


இறையருளால் நான் எழுதி, உயர்திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் 'வகுப்பறை, மாணவர் மலரில் வெளிவந்த, க்ஷண்மதங்களில் ஒன்றான 'சௌரம்' பற்றிய கட்டுரையை   தைப்பொங்கல் பதிவுகளுக்காக, சற்று விரிவுபடுத்தி, இரண்டு பகுதிகளாக உங்கள் பார்வைக்குத் தருவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.  
உயர்திரு. SP.VR. சுப்பையா வாத்தியார்  
அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

பேர் ஆழி உலகு அனைத்தும் பிறங்க வளர் இருள் நீங்க‌
ஓர் ஆழி தனை நடத்தும் ஒண்சுடரைப் பரவுதுமே 
(கலிங்கத்துப்பரணி, செயங்கொண்டார்.)

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான் 
(இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், மங்கலவாழ்த்துப்பாடல்)

நமது இந்து தர்மம், வழிபடும் கடவுள்களை முதலாகக் கொண்டு ஆறு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. காணபத்யத்தை அடுத்து, சூரிய பகவானை முழுமுதற் கடவுளாக வணங்கும் 'சௌரம்' பற்றி நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

'லோக கர்த்தா' என வேதங்கள் புகழும் சூரிய பகவான், பிரத்யக்ஷமாக, நம் கண்முன் தோன்றி அருள் புரிபவர். அங்கிங்கெனாதபடி எங்கும் தன் அமுத கிரணங்களை வீசி உலகை வழிநடத்துபவர். உலகில் எவ்வுயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளின்றி, தூரத்தே நெருப்பை வைத்துச்  சாரத்தைத் தரும் தேவதேவன்.

அவரது ஒளிக்கற்றைகளில் பேதமில்லை.நம் எல்லோருக்கும் மேல், வானத்தில் பிரகாசித்து, எல்லா உயிர்கள், பொருட்கள் மீதும் தன் ஒளிக்கிரணங்களை பாரபட்சமின்றிப் பொழிபவர். பேதமில்லாமல் யாவரையும் சமமாக நோக்கும் நெறியை நமக்குச் சொல்லாமல் சொல்பவர். தன்னை உதிக்கக் கூடாதென்று தன் கற்பின் சக்தியால் சாபமிட்ட நளாயினி, மறுபிறவியில் திரௌபதியாகப் பிறந்த போது அவளது பக்திக்கு இரங்கி, அக்ஷய பாத்திரம் அளித்த கருணைப் பெருங்கடல் சூரியபகவான்.

சூரிய வழிபாடு, மிகப் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகக் காலத்துக் கல்வெட்டுக்களில், இவ்வழிபாடு இருந்த குறிப்புகள் இருக்கிறது. ‘முன் தோன்றிய மூத்த குடி’ என்று புகழப்படும் பழந்தமிழர் நாகரிகத்திலும் சூரிய வழிபாடே பிரதானமாக இருந்தது. உழவுத் தொழிலின் மேன்மைக்கு உதவும் சூரிய பகவானை பண்டைக்காலம் தொட்டே வழிபட்டு வந்துள்ளனர். தமிழர் திருநாளாம் தைத் திங்கள் முதல் நாள், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியா மட்டுமல்லாது, உலகெங்கிலும், குறிப்பாக ரோமானிய நாகரிகத்தில் சூரிய வழிபாடு இருந்ததற்குச் சான்றுகள் உண்டு. பாரசீகத்தின் 'மித்திரன்' என்ற பெயரிலும்,கிரேக்கத்தில் 'அப்பல்லோ' என்ற பெயரிலும், ரோமதேசத்தில் 'சால் இன்விக்டஸ் (Sol Invictus) என்ற பெயரிலும், எகிப்தில் ரா(Ra), என்றும், மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் லிசா (Liza) என்றும், வழங்கப்படுவதிலிருந்து, உலகெங்கிலும் சூரிய வழிபாடு வியாபித்திருந்ததை அறியலாம். ஜப்பான் முதலிய சில நாடுகளில் சூரியன் பெண் தெய்வமாக வழிபடப்படுகிறார்.(http://ancienthistory.about.com/od/sungodsgoddesses/a/070809sungods.htm)

சௌரம்' என்ற சொல் 'நான்கு' என்ற பொருளில் நான்முகனான பிரம்மாவைக் குறிப்பது என்றாலும் மிகப்பெரும்பாலான நூல்களில் சூரியனை குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ரிக் வேத‌ம் 'அக்னியின் முதல்வன்' என்றும், யஜூர் வேதம், 'சகல உலகத்தையும் காப்பவன்' என்றும், சாமவேதம் 'உயிரினங்களைத் தீவினைகளிலிருந்து மீட்பவன் என்றும் சூரிய பகவானைப் போற்றுகின்றன.

சூரிய பகவான், சிவாகமங்களில் 'சிவ சூரியன்' என்றும் ஸ்ரீ வைணவத்தில், 'சூரிய நாராயணன்' என்றும், புகழப்படுகிறார்.
சூரிய பகவானாலேயே உலக இயக்கங்கள் நடைபெறுவது கண்கூடு. ஒரு நாளின் துவக்கமும் முடிவும் சூரியோதயத்திலிருந்தும், அஸ்தமனத்தி லிருந்துமே கணக்கிடப்படுகின்றன. ஒரு ஆண்டின் இரு பிரிவுகளான‌, உத்தராயண, தக்ஷிணாயனங்கள் சூரிய பகவானின் சஞ்சாரத்திலிருந்தே தீர்மானிக்கப்படுகின்றன. தமிழ் மாதங்களின் முதல் நாள், சூரியன் பன்னிரெண்டு ராசிகளில்,ஒவ்வொரு ராசியிலும் பிரவேசிக்கும் தினத்தை வைத்தே கணக்கிடப்படுகிறது.

பஞ்சாங்கங்களில், வருடம், மாதம் கணக்கிடப்படும் முறையில், சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது 'சௌரமானம்' எனப்படும். தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஹரியானா, ஒரிஸ்ஸா, வங்காளம், அஸ்ஸாம் மாநிலங்களில் இம்முறையே கடைபிடிக்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிர குஜராத் முதலிய மாநிலங்களில் ‘சந்திரமானம்’ (சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுதல்) நடைமுறையில் உள்ளது.

சூரியபகவானின் ஒளிக்கற்றைகளின் வெம்மை சுட்டாலும், உயிரினங்களின் வாழ்வாதாரமான மழை பொழிவதற்கும் சூரிய பகவானின் கிரணங்களே காரணம். கடல் நீர் சூரிய வெப்பத்தால், ஆவியாகி, பின் மேகமாக மாறி மழையாகப் பொழிந்து உலகை காத்தலை அனைவரும் அறிவோம்.

மந்திரங்களில் மிக உயர்ந்ததாகப் போற்றப்படுகிற 'காயத்ரி மந்திரம்' சூரிய பகவானைப் போற்றுவதாகும். இம்மந்திரம், “யார் நம் அறிவைத் தூண்டி நம்மை வழிநடத்துகிறாரோ, அந்த சுடர்க் கடவுளின் மேலான, பிரகாசமான‌ ஒளியை தியானிப்போமாக'' ' என்று பிரார்த்திக்கிறது. காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும், இம்மந்திரத்தைக் கூறி, சூரிய பகவானைப் பிரார்த்தித்து அர்க்யம் விடுவது (சூரிய பகவானை நோக்கி, இருகரங்களிலும் நீரை ஏந்தி அருவி போல் பொழிந்து சமர்ப்பிக்கும் பூஜை முறை) இந்து தர்மத்தில், எந்த தெய்வத்தை வழிபட்டாலும் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும்.
எல்லா இறை மூர்த்தங்களிலும், வலது கண், சூரிய பகவான் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கண் சம்பந்தமான நோய்கள் நீங்க, ஞாயிற்றுக் கிழமைகளில், சிவபெருமானை சந்தனத்தால் அபிஷேகம் செய்து, சிவப்பு வஸ்திரம் சாற்றி, வெள்ளெருக்கு சமித்தால் சூரியனுக்கு ஹோமம் செய்து, வழிபாடு செய்வது சிறப்பு.

சிவபெருமான் அபிஷேகப்பிரியர் என்பது போல், சூரிய பகவான் 'நமஸ்காரப் பிரியர்'.

யோகாசனங்களில், பன்னிரெண்டு நிலைகளை உள்ளடக்கிய, 'சூரிய நமஸ்காரம்',செய்வதால், முதுகுத்தண்டு, வயிறு சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, நினைவாற்றல் அதிகரிக்கும். இரத்த ஓட்டம் சீராகும். விடியற்காலை வேளையில் இதைச் செய்வது மிக, மிக நல்லது.

'தேஹகர்த்தா, ப்ரஸாந்தாத்மா விஸ்வாத்மா, விஸ்வ தோமுக|
சராசராத்மா ஸூக்ஷ்மாத்மா, மைத்ரேய: கருணான்வித:||'
(சூரிய பகவான் உடல் காரகர், மகிழ்ச்சியளிப்பவர், உலகத்தின் மூலம், அண்ட சராசரங்களிலெல்லாம் ஒளிர்பவர். கருணையே வடிவானவர்).

பகவத் கீதையில், ‘ஒளிரும் பொருட்களில் நான் சூரியன்' என்கின்றார் ஸ்ரீ கிருஷ்ண பகவான்.

"ஆதி³த்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸு²மாந் |
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸ²ஸீ² || 
"(கீதை, பத்தாவது அத்தியாயம், விபூதி யோகம்).

முதல் முதலில் கீதை உபதேசிக்கப்பட்டது சூரிய பகவானுக்கே. அவர் இதை மனிதகுலத் தந்தையான மனுவுக்கும், மனு இக்ஷ்வாகுவுக்கும் உபதேசித்தனர். இக்ஷ்வாகு மன்னர், ஸ்ரீ ராம பிரானின் குல முன்னோர்களில் ஒருவர். காலப்போக்கில், அதன் கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டதாலும், சில கருத்துக்கள் சிதைவுண்டதாலும், மீண்டும் இதை அர்ஜூனனுக்கு உபதேசிப்பதாக ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவே கூறுகிறார்.

"இமம் விஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்
விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இஷ்வாகுவே அப்ரவீத்"

இதில் விவஸ்வான் என்பது சூரிய பகவானின் ஒரு திருநாமம். சூரிய பகவானுக்கு, கங்க வம்சத்து அரசன் முதலாம் நரசிம்மன் எடுப்பித்த 'கொனார்க்' சூரியனார் கோவில் சிற்ப களஞ்சியங்களில் ஒன்று.

தமிழ்நாட்டில், சோழமன்னன், முதல் குலோத்துங்கனால் கட்டப்பட்ட, தஞ்சை மாவட்டம், திருமங்கலக்குடிக்கு அரை கிலோ மீட்டர் தூரத்திலுள்ள‌ 'சூரியனார் கோவில்' சூரிய பகவானுக்கான நவக்கிரக க்ஷேத்திரமாகத் திகழ்கிறது.

சூரிய பகவானின் தோற்றம் குறித்துப் பல்வேறு விதமாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. திருமாலின் ஆணைப்படி, பிரம்ம தேவன் உலகைப் படைக்கத் தொடங்கிய போது, அவ்வுலகங்களிலிருந்த இருள் நீங்க, பிரம்மா, ஓங்காரமாகிய பேரொலியை உண்டாக்கினார். அதிலிருந்து பிரகாசமான ஒளியுடன் சூரிய தேவன் தோன்றினார் என்பது ஒரு புராணக் கதை.

சூரியபுராணத்தின்படி, காஸ்யப முனிவருக்கும் அதிதிக்கும் மகனாகப் பிறந்தவரே சூரிய பகவான். நவக்கிரக மண்டலத்தின் தலைவர் இவரே. இவர் க்ஷத்திரிய இனத்தைச் சேர்ந்தவராகக் கொள்ளப்படுகிறார். ஆகவே, இவர் ஆதிபத்தியம் பெற்ற சிம்ம இராசி, சிம்ம  லக்கினத்தைச் சேர்ந்தவர்கள், இயல்பாகவே, தலைமைப் பொறுப்புகளுக்கு உரிய ஆளுமைக் குணம், தன்னைச் சேர்ந்தவர்களைப் பாதுக்காத்து வழி நடத்துதல் போன்ற குணங்களைக் கொண்டு இருக்கிறார்கள்.

சூரிய பகவான், ஒற்றைச் சக்கரத் தேரில், வேதத்தின் ஏழு சந்தஸ்களை ஏழு குதிரைகளாகப் பூட்டி, அருணன் சாரதியாக இருக்க, மேருமலையைப் பவனி வருகிறார் என்கின்றன புராணங்கள். வாரத்தின் ஏழு தினங்களே ஏழு குதிரைகள் என்றொரு கூற்றும் உண்டு. ஒற்றை சக்கரமானது, நாம் விண்ணில் சூரியனைக் காணும் பரிதி (வட்ட) வடிவத்தைக்குறிக்கும். சூரிய பகவான் இரு கரங்களிலும் சங்கு சக்கரத்தை ஏந்தியுள்ளார். இதில், .சங்கு பிரபஞ்சம் யாவும் அவனிடமிருந்து வந்தவை என்பதையும் சக்கரமானது உலகம், சூரியபகவானின் ஆணையால் ஒழுங்குமுறையுடன் இயங்குகிறது என்பதையும் குறிக்கிறது.

சூரிய பகவானுக்கு, உஷா, ப்ரத்யுஷா என்ற இரு மனைவியரும், வைவஸ்தமனு, யமன், அசுவினிதேவர்கள், பிரதவன், ரைவவஸ்தன் என்ற மகன்களும், யமுனை என்ற மகளும் இருக்கின்றனர். கொடை வள்ளல் கர்ணன், சுக்ரீவன், வால்மீகி முனிவர், அகத்தியர், வசிஷ்ட மஹரிஷி, பிருகு முனிவர் ஆகியோர் சூரிய பகவான் அருளால் பிறந்தவர்கள் என புராணங்கள் கூறுகின்றன.

அக்னி புராணம், சூரிய புராணம், விஷ்ணு புராணம் முதலிய அநேக புராணங்களில் சூரிய பகவான் போற்றப்படுகிறார். ஸ்ரீ ராமபிரான் அவதரித்த சூரிய குல முதல்வன் சூரிய பகவானே. 'நவ வியாகரணப் பண்டிதர்' என்று புகழப்படுபவர் சூரியன். விநாயகப் பெருமான் சூரியனை வலம் வந்தும், ஆஞ்சநேயர் சூரிய பகவானுக்கு எதிர்முகமாக‌ சஞ்சரித்தும் அவரிடமிருந்து கல்வி கற்றனர்.
சூரிய பகவானைக் குறித்துப் பல துதிகள் இருந்தாலும், அவரை நிர்க்குணப்பரப்பிரம்மமாகப் போற்றும் 'ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதயம்' சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீராம ராவண யுத்த சமயத்தில், அகத்திய மாமுனிவரால், ஸ்ரீராமபிரானுக்கு உபதேசிக்கப்பட்டது. இது. இதன், முதலிரு ஸ்லோகங்கள், இது சொல்லப்பட்ட சூழ்நிலையையும், மூன்றாவது ஸ்லோகம், அகத்தியர்,ஸ்ரீராமபிரானை நோக்கிக் கூறுவதாகவும், நான்கு முதல் முப்பதாவது ஸ்லோகங்கள் வரை சூரியனைப் போற்றுவதாகவும், முப்பத்தி ஒன்றாம் ஸ்லோகம், சூரியபகவான், ஸ்ரீராமபிரானை வாழ்த்துவதாகவும் அமைந்திருக்கிறது. அதில் சில ஸ்லோகங்களையும் அவற்றின் பொருளையும் காணலாம்.

ஏச ப்ரஹ்மாச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தனத: காலோ யம: ஸோமோ ஹ்யபாம்பதி: "

சூரிய பகவானே, பிரம்மா, விஷ்ணு, சிவன், கந்தன், மக்களின் தலைவனாகிய‌ ப்ரஜாபதி, இந்திரன், தன(பொருட் செல்வ)த்தை அருளும் குபேரன், காலம், யமதர்மராஜன், சந்திரன், மற்றும் வருணனுமாவார்.(அபாம்பதி -வருணன்).

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போ அதிதேபுத்ர: சங்க: சிசிரநாசன:

உலகத் தோற்றம்,ஹிரண்யகர்ப்பம் என்ற பொன்முட்டையிலிருந்து நிகழ்ந்ததாகச் சொல்வதுண்டு. அது இங்கே பொன்னாலான கருப்பையாகச் சொல்லப்படுகிறது.அந்தப் (உயிர்களின் தோற்றத்திற்குக் காரணமான) பொன்மயமான கருப்பையை உடையவர் சூரிய பகவான்.. குறைந்த வெப்பத்தால் உண்டாகும் குளிரையும் நடுக்கத்தையும் தருபவர். எல்லாவற்றையும் உருவாக்குபவர். ஒளிவீசச் செய்பவர். அக்னியைத் தன் உடலாகக் கொண்ட அதிதியின் மகனான சூரிய பகவான், தன் வெப்பத்தால் குளிரைப் போக்குபவர்.

'நக்ஷத்ர க்ரஹ தாரானாம் அதிபோ விஷ்வ பாவன:
தேஜசாம் அபி தேஜஸ்வி த்வாதசாத்மன் நமோஸ்துதே'

சூரியபகவான், விண்மீன்களுக்கெல்லாம் தலைவர்.அண்டத்தின் பிறப்பிடமானவர். ஒளி வீசுபவர்க்கெல்லாம் ஒளியாகத் திகழ்பவர். (சந்திரன் முதலிய விண்மீன்கள், சூரியனிடமிருந்தே ஒளி பெறுகின்றன). பன்னிரு வடிவங்களைத் தாங்கியவர்.


இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்.

வெற்றி பெறுவோம்!!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

புதன், 9 ஜனவரி, 2013

KOODARAVALLI (11/1/2013).....கூடாரவல்லி


ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தக யோக த்ருச்யாம்!
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்யசரண: சரணம் ப்ரபத்யே!! 
ஸ்ரீ விஷ்ணுசித்தராகிய பெரியாழ்வாரின் குலத்தில் உதித்த, கேட்டதை எல்லாம் தரும் கற்பகக் கொடி போன்றவள் கோதை.  அடியவருக்கு வேண்டுவனதரும் சந்தனமரமான ஸ்ரீ ரங்கராஜரைச் சுற்றிப் படர்ந்திருக்கும் கற்பகக் கொடியே கோதை நாச்சியார். பூமிதேவியே கோதையாக அவதரித்தாளோ அல்லது ஸ்ரீலக்ஷ்மியே கோதையாக வடிவெடுத்தாளோ, வேறு புகலற்ற நான், கோதை நாச்சியாரைச் சரணடைகிறேன் .(கோதா ஸ்துதி, ஸ்வாமி ஸ்ரீ தேசிகர்).

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், பூமிப்பிராட்டியின் திருஅவதாரமாகவே போற்றப்படுகிறார். கலியுகத்தில், பக்தர்களை உய்விக்க வேண்டி, எம்பெருமானின் கட்டளையை ஏற்று, திருவில்லிப்புத்தூரில், பெரியாழ்வாரின் திருமகளாக, திருத்துழாய்(துளசி) செடியருகில் அவதரித்தார் கோதை நாச்சியார். திருப்பாவை, வேத வேதாந்த உபநிஷதங்களின் சாரமே. மார்கழி மாதம் முதல் நாள் தொடங்கி, தினம் ஒரு பாசுரமாக முப்பது நாளும் பாராயணம் செய்வது வழக்கம். மார்கழி 27ம் நாள், 27வது பாசுரமான, 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என்று தொடங்கும் பாசுரம் பாராயணம் செய்யும் நன்னாளே 'கூடாரவல்லி' என்று சிறப்பிக்கப்படுகிறது.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

பாட்டின் முதலடியே திருநாளின் பெயராக அமைந்து விட்டது. அதுவே மருவி கூடாரவல்லி ஆகிவிட்டது.

திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரமும், பாவை நோன்பு, அதன் அதன் விதிகள், தோழியரை பாவை நோன்பு  நோற்க எழுப்புதல் என்று தொடர்கிறது. கோதை நாச்சியார், தாம் வாழும் வில்லிப்புத்தூரையே கோகுலமாகவும், வடபத்ரசாயிப்பெருமானின் திருக்கோவிலையே கண்ணன் வாழும் திருமாளிகையாகவும் உருவகிக்கிறார். தன்னையும் தன் தோழியரையும் கோபிகைகளாகப் பாவிக்கிறாள்.

வெளிப்படையான பொருளின்படி பார்த்தால் தோழிகள், பின், கண்ணனது திருமாளிகையின் வாயிற்காப்போன், யசோதை, நந்தகோபர், பலராமன் கண்ணன் என அனைவரையும் துயிலெழுப்பி, கண்ணபிரானைத் தன் சிங்காதனத்தில் அமர்ந்து தம் கோரிக்கையை ஆராய்ந்து நிறைவேற்றித் தரப் பிரார்த்திக்கிறாள். ஸ்ரீ கிருஷ்ணர் எழுந்தருளிவிட்டார். பின் என்ன?, அவரைப் பூஜிக்க வேண்டியது தானே!!. 'அன்று இவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி' என்று  போற்றிகளை தொடுத்து பாமாலையாக்கித் தன் உள்ளம் கவர்ந்த கண்ணனுக்கு அணிவிக்கிறாள்.

தூபம், தீபம் என்று உத்தராங்க பூஜை தொடர்கிறது. கண்ணனது பாஞ்சஜன்யம் என்ற திருச்சங்கு முழங்க, பல்லாண்டு பாடி, விளக்கு(தீபம்) கொடி, முதலியவை காட்டி வழிபடுகிறாள்.

(மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.)

நிவேதனமாக,  'பாற்சோறு மூடநெய் பெய்து'  படைக்கிறாள்.  பூஜையில் ஏதேனும் பிழைகள் இருந்தால் பொறுத்தருள வேண்டுகிறாள் (சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே). கண்ணனையன்றி வேறெதுவும் வேண்டாத நிலை வேண்டுகிறாள்(மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்), இந்தப் பாசுரத்தை, பூஜையின் பலனை கண்ணன் திருவடிகளுக்கு அர்ப்பணம் செய்வதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

(சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்)

நிறைவுப்பாசுரம், கண்ணனை வழிபடுவதன் பலனை விளக்கும் முகமாக அமைந்திருக்கிறது. 'எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்' என்பது இம்மை, மறுமை இரண்டிலும் கண்ணபிரானது திருவருள் பெறுவதைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

என்று இரண்டாவது பாசுரத்தில், பாவை நோன்பு விதிகளைச் சொல்லும் கோதை நாச்சியார், 27வது பாசுரத்தில்,  பாவை நோன்பை நல்லவிதமாக நிறைவு செய்து விட்டால் அதன் பலனாக‌, நல்ல ஆடை, அணிமணிகள் அணிவோம், நெய் நிரம்பிய பாற்சோறு உண்ணுவோம் என்று கூறுகிறாள். அதாவது எவற்றை எல்லாம் நோன்புக்காகத் தவிர்த்தோமோ அவற்றை மீண்டும் கைக்கொள்வோம் என்கிறாள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார். இதில் மிக நுட்பமாகக் கவனிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது.

நோன்பு விதிகளில், நல்ல அலங்காரங்கள், ருசியான உணவு வகைகளைத் தவிர்ப்பதோடு, 'செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்' அதாவது, செய்யக்கூடாதவற்றைச் செய்ய மாட்டோம், தீமையானவற்றை, பொய் சொல்லுதல், புறங்கூறுதல் முதலியவற்றைச் செய்யாது நல்லனவற்றையே பேசுவோம் என்று வருகிறது.

ஐம்புலன்கள் என்பவை, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை. இவற்றை அடக்குவதே தவத்தின் முதல் படி. எல்லா நோன்புகளின் முக்கிய நோக்கம் இதுவே. உடலுக்கு அழகு தரும், நல்ல ஆடை அணிமணிகளைத் தவிர்த்தல், கண்ணுக்கு அழகு தரும் மையிடாதிருத்தல், பால், நெய் சேர்த்த சுவையான உணவை உண்ணாதிருத்தல், மணம் தரும் நல்ல மலர்களை சூடாதிருத்தல்,  நல்ல வார்த்தைகளையே பேசுதல், இறைவன் புகழைக் கேட்டல்  இவற்றை நோன்பு காலத்தில் செய்வதன் மூலம், புலன்களின் பால் கவனம் செல்வது குறைந்து இறைவனிடம் மனம் ஒன்றுகிறது. நல்ல பசு நெய், பால் ஆகியவை சேர்த்த உணவு சுவை நிறைந்ததாகவே இருக்கும். ருசிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்துவதற்கு இவை சேர்ந்த உணவு வகைகளை நிறுத்துவது அவசியம். அதே சமயத்தில், இவை இரண்டும் சாத்வீக உணவு வகைகளைச் சேர்ந்தவை. அமைதி, வாய்மை, தவம், பக்தி, கருணை, மன்னிக்கும் மாண்பு, திருப்தி, புறங்கூறாதிருத்தல், நிலைத்த ஆனந்தம் ஆகியவை, தொடர்ந்து சாத்வீக உணவு வகைகளையே உண்போருக்கு இயல்பாகவே வாய்க்கும்(http://www.siththarkal.com/2012/03/blog-post_07.html). அதனாலேயே, நெய் நிறைந்த பால் சோறு உண்போம் என்கிறாள் ஆண்டாள். 
ஆகவே, சாத்வீக உணவு உண்பதன் மூலம் எப்போதுமே செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் என்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.

திருப்பாவையின் உட்பொருள் யோக ரகசியங்களையும் உள்ளடக்கியது. உதாரணமாக ஒன்று.  நம் உடலில் ஆறு ஆதாரச் சக்கரங்கள் இருப்பது நமக்குத் தெரியும். முதல் சக்கரமான மூலாதாரத்தில், குண்டலினி சக்தி, நாக உருவில் இருக்கிறது. (http://aalosanai.blogspot.in/2012/04/blog-post_06.html) முறையான யோகப் பயிற்சியின் மூலம் இதை எழுப்பி, நம் தலை உச்சியில் இருக்கும் சஹஸ்ராரச் சக்கரத்தை அடையச் செய்ய வேண்டும்.  திருப்பாவையின் 6வது பாசுரத்தில் வரும்,

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

என்று வரும் வரிகள், சக்கரங்களையும்(சகடம்), நாக உருவில் துயிலும் குண்டலினி சக்தியையும்(வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை) சூட்சுமமாகக் குறிப்பிடுகின்றன. கோதை நாச்சியார் திருவாய்மலர்ந்தருளிய திருப்பாவை ஒவ்வொன்றையும் விரிவாக ஆராயப் புகுவோமானால் இந்த ஒரு பிறவி போதாது.

கூடாரவல்லி தினத்தன்று, பாலில் அரிசியை வேக வைத்து, நெய், வெல்லம் சேர்த்து, சர்க்கரைப் பொங்கல் செய்து நிவேதனம் செய்து வழிபடுவது வழக்கம்.. முக்கியமாக, நிறைய தீபங்கள் ஏற்றி பூஜையறையில் வைக்க வேண்டும்.

பரம்பொருளாகிய அகண்ட ஜோதியில், நம் ஆத்ம ஜோதி ஐக்கியமடைய (கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்)வேண்டுவதே மனிதப் பிறவியின் நோக்கம். ஆகவே, அதை குறிக்கும் விதமாக தீபங்கள் ஏற்ற வேண்டும். 
முக்கியமாக‌ திருப்பாவை தந்த கோதை நாச்சியார் காட்டிய வழியிலே, கிடைத்தற்கரிய மனிதப் பிறவியைப் பெற்றிருக்கும் நாம் அதைக் கடைத்தேற்ற முயற்சிக்க வேண்டும்.

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்!!!

வெற்றி பெறுவோம்!!!