நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 18 ஏப்ரல், 2013

SRI RAMA NAVAMI (19/4/2013).... ஸ்ரீராம நவமி.

 மன்னு புகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர்
கன்னிநன் மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ
ஸ்ரீகுலசேகராழ்வார்
ஸ்ரீராமாவதாரம் நிகழ்ந்த திருநாளே ஸ்ரீராம நவமி. சூரிய குலத் தோன்றலாய், சக்கரவர்த்தித் திருமகனாய் அவதரித்து, சனகமாமன்னர் திருமகளை மணந்து, சகிக்கவொண்ணா கொடுமைகள் புரிந்த இராவணனை சம்ஹரித்து, சகம் புகழும் புண்ணியமூர்த்தியாய், தாரகமந்திரத்தின் ஸ்வரூபமாய் விளங்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அவதார நன்னாளை பெரும் உற்சவமாகவே கொண்டாடுவது வழக்கம்.

பெரும்பாலான இல்லங்களில் பூஜைகள் செய்து வணங்குவது வழக்கம். ஸ்ரீராமர் கோவில் கொண்டருளும் திருக்கோவில்களில் மட்டுமல்லாது, ஸ்ரீராமபக்த ஹனுமானின் திருக்கோவில்களிலும், ஸ்ரீராமாவதார  மஹோத்சவம், ஸ்ரீசீதாகல்யாண மஹோத்சவம் முதலியவை சிறப்புற நடைபெறுகின்றன.

மிகப் பெரிய அளவில், பூஜைகள், பஜனைகள் முதலியன செய்து வழிபட இயலாதோரும், எளியதொரு வழியில் இறையருளைப் பெறலாம். அதுவே 'நாம சங்கீர்த்தனம்' என்னும் எளிய ஆனால் மகத்தானதொரு சாதனம்.

கிருத யுகத்தில் தியானம் செய்வதாலும், த்ரேதா யுகத்தில் யாகங்கள் செய்வதாலும், த்வாபர யுகத்தில் விக்ரகங்களை பூஜித்து வழிபடுவதாலும்,  கிடைக்கும் பலன்  கலி யுகத்தில் நாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே எளிதில் கிடைக்கும்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, பகவத் கீதையில்,
யஜ்ஞானாம் ஜப யஜ்ஞோ'ஸ்மி (யக்ஞங்களில் நான் ஜப யக்ஞமாக இருக்கிறேன்)என்று அருளியிருக்கிறார்.

ஸ்ரீராம நவமியன்று, 'ராம, ராம' என்று ஜபித்தல், ஸ்ரீராமனது புகழைப் போற்றும் நாம சங்கீர்த்தனம், மனதுள் ராம நாமத்தை உச்சரித்தவாறே ஸ்ரீராமஜெயம் எழுதுதல் என ஸ்ரீராமனை பலவாறு வழிபடலாம்.

தாரக மந்திரம் எனப் போற்றப்படும் இராமநாமத்தின் பெருமை சொல்லில் அடங்காது. எட்டெழுத்து மந்திரத்தின் மகிமையனைத்தும் இந்த ஈரெழுத்து மந்திரத்திற்கும் உண்டு.

'ராம, ராம, ராம ' என்று மூன்று முறை உச்சரித்தால் அது எம்பெருமான் பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களுக்குச் சமம் என்று சாக்ஷாத் ஸ்ரீ ஈஸ்வரனே  அம்பிகையிடம் கூறுகிறார்..


ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே 
ஸஹஸ்ர நாம ததுல்யம் ராம நாம வரானனே!...

மும்மை சால் உலகுக்கு எல்லாம்
      மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்
      பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
      மருந்தினை, 'இராமன்' என்னும்
செம்மை சேர் நாமம்தன்னைக்
      கண்களின் தெரியக் கண்டான். எனக் கம்பர் பெருமான் தெரிவிக்கிறார்.

மூவுலகுக்கும் ஆதாரமாகப் பொருந்திய மந்திரம் ஸ்ரீராம நாமமே,  ஸ்ரீராமநாமத்தை ஜபித்து, தம்மை வழிபடுவோருக்கு இறைவன் தம்மையே தருகிறார் அதாவது சாயுஜ்ய நிலையைத் தந்தருளுகிறார். அப்பேர்ப்பட்ட உயர்வுமிக்க திருநாமம் ஸ்ரீராமநாமமே. இப்பிறவி மற்றும் எழுகின்ற ஒவ்வொரு பிறவியாகிய நோய்க்கு மருந்தாக விளங்குவது ஸ்ரீராம நாமமே என்கிறார் கம்பர்பிரான்.

காசி க்ஷேத்திரத்தில், தம் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்போரின் காதுகளில், ஸ்ரீஈஸ்வரனே, 'ராம ராம' என்னும் தாரக மந்திரத்தை உச்சரித்து பிறவிப் பெருங்கடலில் இருந்து அவர்களைக்  கரையேற்றுவதாக ஐதீகம்.

வேடனாக இருந்த ஒருவர், நாரத முனிவரிடமிருந்து, ராம நாம உபதேசம் பெற்று, பின் அதை விடாது ஜபம் செய்தே வால்மீகி முனிவரானார், இராம காதையையும் இயற்றி அருளினார்.

இராம காதையில் பெருமானின் திருநாம மகிமை பற்பல இடங்களில்  பரக்கப் பேசப்படுகிறது.

அஞ்சனை மைந்தன், அரும்பெரும் வீரன், அன்புமிக்கதோர் ஸ்ரீராமபக்தன், 'எந்தையும் தாயும் நீயே' எனச் சிந்தையில் ராமனை வைத்துச் சிறந்த ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி, ஸ்ரீராம நாமத்தை உச்சரித்தே கடலைத் தாண்டி இலங்கை சேர்ந்தார். சுந்தரனான அனுமனின் பிரபாவம் கூறும் சுந்தரகாண்டம், ஸ்ரீராம நாமத்தின் மகிமையால்  ஹனுமான் செய்த அரும்பெரும் சாதனைகளை விளக்குகிறது.

தம்மைச் சூழ்ந்திருந்த வானரர்களை ஸ்ரீராம நாமத்தை உச்சரிக்கச் சொல்லி, தாமும் உச்சரித்தே, சம்பாதி தன் சிறகுகளைப் பெற்றார்.
எல்லீரும் அவ் இராம நாமமே
சொல்லீர்; சொல்ல, எனக்கு ஓர் சோர்வு இலா
நல் ஈரப் பயன் நண்ணும்; - நல்ல சொல்
வல்லீர்! வாய்மை வளர்க்கும் மாண்பினீர்!'

இக்கலியுகத்திலும், ஸ்ரீ துளசி தாசர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகய்யர் பெருமான் போன்ற எத்தனையோ மகான்கள், இந்த தாரக மந்திரத்தின் துணை கொண்டு அரும் பெரும் சாதனைகளைச் செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீராம நவமியன்று சொல்ல வேண்டிய துதிகள்:
இராமாயணம் முழுவதும் பாராயணம் செய்வது சிறப்பு. இயலாதவர்கள், நாம இராமாயணம், திவ்யப் பிரபந்த பாசுர இராமாயணம் முதலியவை பாராயணம் செய்யலாம். சுந்தர காண்டம் பாராயணம் செய்வது மிகச் சிறந்த நற்பலன்களை அளிக்கும்.

ஸ்ரீராம நவமியன்று, கம்ப இராமாயணத்தில், ஸ்ரீராமரது திருஅவதாரப்படலத்தில் உள்ள கீழ்க்கண்ட பாடலைப் பாராயணம் செய்யலாம். இதை, ஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளும், தம் 'தெய்வத்தின் குரலில்' அருளியிருக்கிறார்.

ஆயிடைப் பருவம் வந்து அடைந்த எல்லையின்
மா இரும் புவி மகள் மகிழ்வின் ஓங்கிட
வேய் புனர்பூசமும் விண் உேளார் புகழ்
தூய கர்க்கடகமும் எழுந்து துள்ளவே.
சித்தரும் இயக்கரும் தரெிவைமார்களும்
வித்தக முனிவரும் விண் உேளார்களும்
நித்தரும் முறை முறை நெருங்கி ஆர்ப்பு உறத்
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.

ஒரு பகல் உலகு எலாம்
    உதரத்து உள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும்
    அவனை, அஞ்சனக்
கரு முகில் கொழுந்து எழில்
    காட்டும் சோதியைத்,
திரு உறப், பயந்தனள்
    திறம் கொள் கோசலை.(கம்ப ராமாயணம் : பாலகாண்டம் - திரு அவதாரப் படலம்)

இல்லங்களில்,ஸ்ரீராம நவமி பூஜையின் போது செய்ய வேண்டிய நிவேதனங்கள் குறித்தும், ஸ்ரீ ராமபக்த ஹனுமானின் பெருமைகளைக் குறித்தும் அறிய இங்கு சொடுக்கவும்.

வால்மீகி இராமாயணத்தை, ஸ்ரீ குலசேகராழ்வார் பைந்தமிழ் பாசுரங்களாகப் பாடி அருளியிருக்கிறார். அவை, 'குலசேகர இராமாயணம்', 'ஸ்ரீராமாயண சங்க்ரஹம்' என்றே சிறப்பாகப் போற்றப்படுகின்றன. அதிலிருக்கும் கீழ்க்கண்ட பாசுரத்தைப் பாராயணம் செய்யலாம்.
அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும்
அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி
விண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை,
செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்,
எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை
என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே!
(இறையருளால், சித்ரகூடம் திருத்தலத்தை தரிசிக்கும்  பாக்கியம் கிடைக்கப்பெற்றேன். அது உங்களுக்கும் கிடைக்க, அங்கு எடுத்த புகைப்படத்தைக் கீழே கொடுத்திருக்கிறேன்).
'தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்றார் தமிழ் மூதாட்டி. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் பூஜிப்பதோடு, ஸ்ரீராம பக்தசிரோன்மணியும் வாயு மைந்தனும், சிரஞ்சீவிகளுள் ஒருவருமான, ஸ்ரீஹனுமானது பிரபாவங்களைப் பாடிப் போற்றுவது, ஸ்ரீராமரது அருட்பிரவாகத்தை எளிதில் நமக்குக் கிடைக்கச் செய்யும். ஸ்ரீதுளசிதாசர் போன்ற மகான்கள், ஸ்ரீஹனுமானது அருட்கடாட்சம் பெற்று, அதன் மூலமே ஸ்ரீராம தரிசனம் பெற்றார்கள்.

ஸ்ரீஹனுமானது துதிகளில் குறிப்பிடத் தகுந்தது,ஸ்ரீஹனுமான் சாலீஸா. ஸ்ரீ துளசிதாசர் அருளிய இந்தத் துதியையும், இதன் மகிமை, பொருள், பாராயணம் செய்ய வேண்டிய முறை ஆகியவற்றைப் பற்றி, மிக அருமையான முறையில் தன் வலைப்பூவில் பதிவிட்டிருக்கிறார் என் சக வலைப்பதிவரும் சகோதரருமான உயர்திரு.ஸ்ரீகணேஷ்.  அந்தச் சுட்டிகளைக் கீழே கொடுத்திருக்கிறேன். அன்பர்கள் முறையாக இதனைப் பாராயணம் செய்து இறையருளைப் பெறக் கோருகிறேன்.
இக்கலியுகத்தில், சொல்ல முடியாத துன்பங்களால் அலைக்கழிக்கப்பட்டு அவதியுறுவோர் அனைவரும், பாராயணம் செய்ய வேண்டிய மகா காவியம் ஸ்ரீமத் இராமயணம். சீதைக்கும்,ஸ்ரீராமருக்கும் நேர்ந்த துன்பங்கள் எத்தனை... எத்தனை... அத்தனை சோதனைகளையும் வென்று புறங்கண்டு, தர்மம் தவறாது வாழ்ந்த சத்தியச் செம்மலையும், சீதாதேவியையும்  நினைத்தாலும் போதும் நாம் வென்று விடலாம்.

ஸ்ரீராம நவமியன்று, நம் உள்ளத்திலும், இல்லத்திலும், இவ்வுலகனைத்திலும், தர்மநெறி தழைத்தோங்க வேண்டுவதே நம் முதல், முக்கிய வேண்டுதலாக இருக்கட்டும். சக்கரவர்த்தித் திருமகன், அந்த வேண்டுதலை நிச்சயம் நிறைவேற்றி வைப்பான்.

ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெயராம!!!

இறையருளால்
வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

6 கருத்துகள்:

  1. Nice explanation. Thank you for giving the links along with the article.

    பதிலளிநீக்கு
  2. ராம நவமி வாழ்த்துக்கள். அருமையான பதிவு.
    ராமர் படம் தத்ரூபமாக எதிரில் நிற்பது போன்று தோன்றுகிறது.
    எனது ஹனுமான் சாலீஸா தொகுப்பு பதிவுகளின் லிங்க் ராம நவமி பதிவில் கொடுத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துக்களுக்கும் பாராட்டுதல்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றி.
      ஸ்ரீராம தூதனைப் பற்றிய சிறப்பான பதிவு தாங்கள் தந்தது. தங்களுக்கே நான் நன்றி சொல்ல வேண்டும்.

      நீக்கு
  3. ராம நவமி வாழ்த்துக்கள். அருமையான பதிவு.
    ராமர் படம் தத்ரூபமாக எதிரில் நிற்பது போன்று தோன்றுகிறது.
    ஹனுமான் சாலீஸா பதிவுகளின் தொகுப்பு லிங்க் ராம நவமி பதிவில் கொடுத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. தற்கொலைகள் பற்றிய
    தகவல்கள் இருந்தும்

    அதனை அதுவாக சொல்லாமை
    உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது.. ஆனாலும்

    மக்கள் அறிந்து கொள்வதற்காக
    மன்றத்தில் சொல்லித்தான் ஆகவேண்டும்

    உங்களுக்காக (மட்டும்) வந்து
    உள்ளபடியே வருகை பதிவு செய்கிறோம்

    அடுத்த தொரு நல் பதிவில்
    அடுக்கிய வாழ்த்துக்களுடன் வருகிறோம்

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..