நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 24 ஆகஸ்ட், 2013

SRI KRISHNA VIJAYAM (GOKULASHTAMI ((28/8/2013) SPECIAL POST)....ஸ்ரீ கிருஷ்ண விஜயம்.


 பீதாம்பரம் கரவிராஜித சங்க சக்ர கௌ மோதகீ ஸரஸிஜம் கருணாஸமுத்ரம்
ராதாஸஹாயமதி ஸுந்தர மந்தஹாஸம் வாதாலயேச மநிசம் ஹருதி பாவயாமி
சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீக்ஷிதர்

குட்டிக் குட்டியாக பாதங்கள் வரைந்து,பட்டுப்பாதங்கள் பதிய, நம் இல்லத்திற்கு வர வேண்டுமென‌, கண்ணனை வரவேற்கும் கோகுலாஷ்டமித் திருநாள் வரும் புதன் கிழமை (28/8/2013) வருகிறது. ஒவ்வொரு வருடமும், ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை கோகுலாஷ்டமியாகக் கொண்டாடுகிறோம். கண்ணன் அவதரித்த ரோகிணி நக்ஷத்திர நன்னாளை ஸ்ரீஜெயந்தியாக வைணவப் பெருமக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

கோகுலாஷ்டமி கொண்டாடப்படுவதன்  மகிமை குறித்தும், கொண்டாடும் முறை குறித்தும்,  'தேவகி பரமானந்தம்...கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் (சொடுக்கவும்) பதிவில் விளக்கியிருக்கிறேன். 

ஸ்ரீகிருஷ்ணாவதாரம்:

ஸாத்வத குலத்தில் பிறந்த ஆஹூகன் என்னும் மன்னனுக்கு, தேவகன், உக்ரஸேனன் என்னும் இரு புதல்வர்கள். இவர்களில் தேவகனின் திருமகளே, எம்பெருமானைத் திருவயிறு வாய்த்த பெருமையுடைய தேவகி. தேவகியின் ஒன்று விட்ட சகோதரனே கம்ஸன்.  
கம்சனின் கொடுமையிலிருந்து, உலகோரைக் காக்க திருவுளம் கொண்ட பரமாத்மா, தேவகியின் எட்டாவது கர்ப்பத்தில் பிரவேசித்தருளினார். சச்சிதானந்த ஸ்வரூபமாகிய பரமாத்மா அவ்விதம் பிரவேசித்த போது, தேவர்கள் யாவரும் மகிழ்ந்து துதித்தனர்

தேவர்களின் கர்ப்ப ஸ்துதி:

ஸ‌த்யவ்ரதம் ஸ‌த்யபரம் த்ரிஸத்யம்
ஸத்யஸ்யயோனிம் நிஹிதஞ்ச ஸத்யே |
ஸத்யஸ்ய ஸத்யம் ருத ஸத்ய நேத்ரம்
ஸ‌த்யாத்மகம் த்வாம் சரணம் ப்ரபன்னா: ||

அரவுப் படுக்கையில் அறிதுயில் கொள்ளும் மாதவன், ஆவணி (மாதம்), ரோகிணி (நக்ஷத்திரம்) , அஷ்டமி(திதி)யில் அர்த்த ஜாம நேரத்தில் (நள்ளிரவில்) யாரும் அறியாவண்ணம்,   அவதரித்தருளினார்.

பரமாத்மா அவதரித்தருளிய போது, சாதாரண மானிடக் குழந்தையாக இல்லாமல், தாம் யார் என்பதை தெளிவாக விளங்கச் செய்யும் வண்ணம், சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவை தாங்கிய நான்கு திருக்கரங்களுடன், ஒளிவீசும் கிரீடம், கங்கணம், தோள்வளை, ஹாரம் ஆகியவற்றுடனும் நீல மேக வண்ணத் திருமேனியுடன் அவதரித்தார்.

பரந்தாமன் அவதரித்ததும், அவரது திருவுருவை, வசுதேவர், கேசாதி பாதம் தரிசித்து  மகிழ்ந்தார். அவ்வாறு அவர் தரிசிக்கும் போது, திருமாலின் திருமார்பில் அகலாது வீற்றிருந்தருளும் திருமகள், சற்றே நாணத்துடன் முகம் திருப்பிக் கொண்டாளாம். இப்பிறவியில் வாசுதேவனில் தந்தையல்லவா வசுதேவர்!!!. ஆகையால், திருமகளுக்கு நாணம் வந்ததாம். அதன் பின், லக்ஷ்மி தேவி, சிறைச்சாலையில் இருக்கும் அலக்ஷ்மீகரத்தை, அதாவது, தூசி முதலியவற்றை, தன் பார்வையாலேயே துடைத்தெறிந்தாளாம்!!. திருமகள் கொலுவிருக்கும் இடத்தில்  சுத்தம் இருப்பதே முறை இல்லையா?. மேலும் தன் நாதன் அவதரிக்கும் இடம் மங்களகரமாக இருக்க வேண்டும் என்பதே தேவியின் நோக்கம்.

அதன் பின், வசுதேவர், பரந்தாமனின் திருவுளப்படி, அவரை ஒரு கூடையில் வைத்து எடுத்துப் போய், கோகுலத்தில், நந்தகோபனின் திருமாளிகையில் சேர்ப்பித்தார். அங்கிருந்த யசோதையின் பெண் குழந்தையை (யோகமாயையை) கம்சனின் சிறைச்சாலைக்குக் கொண்டுவந்தார். பரமாத்மாவைக் கையில் எடுத்த போது, உடைந்து விழுந்த விலங்குகள், திறந்த சிறைக்கதவுகள், யோகமாயை வந்ததும் தாமே பூட்டிக் கொண்டன. மாயையினாலேயே உலகச் சிறையில் விழுந்து, பந்த விலங்குகளைப் பூட்டிக் கொள்கிறோம் இல்லையா?

கோகுலானந்தம்:
யசோதைக்குத் திருமகன் பிறந்த செய்தி, கோகுல வாசிகளை எத்தகையதோர் ஆனந்தத்தில் ஆழ்த்தியது என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. கோகுலமே விழாக்கோலம் பூண்டது. அன்று மட்டுமல்லாது, ஒவ்வொரு நாளும் திருநாள் போல விளங்கியது.

தினே தினேsத ப்ரதிவ்ருத்த லக்ஷ்மி-
ரக்ஷீண- மங்ல்ய தோ வ்ரஜோsயம்
பவந் நிவாஸாதயி வாஸூதேவ‌
ப்ரமோஸாந்த்ர; பரிதோ விரேஜே (ஸ்ரீமந் நாராயணீயம்)

ஹே கிருஷ்ணா!! நீ வாசம் செய்வதால், கோகுலம் முழுவதும், ஒவ்வொரு நாளும் குறைவில்லாமல் வளருகின்றன் லக்ஷ்மி கடாக்ஷத்தைக் கொண்டு, பல வளங்களையும், மங்களங்களையும் உடையதாகி ஆனந்தம் நிறைந்து விளங்கியது.
ஆனந்த ரூபமான பரமாத்மாவைப் பார்க்க பார்க்க மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றனர் கோபியர்கள். குறும்பின் திருவடிவோ, தன் சிறுவாய் திறந்து, முறுவல் செய்து அவர்களை பேரின்பத்தில் ஆழ்த்தியது. ஒரு கோபிகையின் கைகளில் இருந்து கொண்டு மற்றொரு கோபிகையை நோக்கும் குழந்தை. உடனே அவள், 'என்னைத் தான் பார்க்கிறான் குழந்தை, கொடு' என்று வாங்குவாள். அவளிடம் சென்று, பின் அருகிருக்கும் மற்றொரு கோபிகையை நோக்குவான் விஷமக்காரக் கண்ணன். இவ்வாறு, கைக்குக் கை மாற்றப்பட்ட குழந்தை, சிவந்த தாமரை மலர்களால் ஆன மாலையில் மொய்க்கும் வண்டைப் போல் விளங்கியது.

நாமகரணம்:
ஆயிரம் திருநாமங்களால் அர்ச்சிக்கப்படும் தெய்வக் குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா. வேதங்களின் மறைபொருளான வேதநாயகன் என்பதாலோ என்னவோ பெயர் சூட்டு விழாவும் யாரும் அறியாமலேயே நிகழ்ந்தது. கம்சன், பிறந்த குழந்தைகள் அனைத்தையும் கொன்று குவிக்க உத்தரவிட்ட செய்தி, சிறைச்சாலையில் இருந்த வசுதேவருக்கு எட்டியது. அவர், தம் குலகுருவான கர்க முனிவரை அழைத்து, கோகுலத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு(வசுதேவரின் மூத்த மனைவி ரோகிணியும் அவள் குழந்தையும் அச்சமயம் நந்தகோபரின் பாதுகாப்பில் இருந்தனர்) ரகசியமாக நாமகரணம் செய்யுமாறு வேண்டுகின்றார்.
கர்கமுனிவர், கிடைத்தற்கரிய பெரும்பேறு தமக்கு வாய்த்ததை எண்ணி மகிழ்ந்தவராக, கோகுலம் சென்றார்.

நந்தகோபரிடம் விவரம் தெரிவித்த கர்கமுனிவர், குழந்தைகளை எடுத்து வர வேண்டுகிறார். மனம் மகிழ்ந்த நந்தகோபரும் அவ்வாறே செய்கிறார்.

குழந்தையைப் பார்த்ததும் மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது கர்க முனிவருக்கு. 'பிரபுவே, ஆயிரம் திருநாமங்களையும் அதற்கும் மேற்பட்ட அளவிலாத திருநாமங்களையும் உடைய தங்களுக்கு நான் எவ்விதம் நாமகரணம் செய்வேன்?!!' என்று அதிசயித்த முனிவர், பின், 'கிருஷி' என்ற தாதுவையும், 'ண' என்ற எழுத்தையும் சேர்த்து, 'ஸத்' என்ற ஸ்வரூபத்தையோ அல்லது உலக மக்களின் பாவங்களைக் கவரும் தன்மையையோ கூறும் 'க்ருஷ்ணன்' என்ற திருநாமத்தைச் சூட்டுகின்றார்.

மேலும் ' முன்னொரு  காலத்தில் இவன் வசுதேவருக்குப் புதல்வனாகப் பிறந்திருந்ததால் வாசுதேவன்,  இவனுக்கு மேலும் பல பெயர்களும் பெருமைகளும் ஏற்படும்' என்று கூறிய முனிவர், ரோகிணியின் குழந்தைக்கு, ராமன் என்றும் யாதவர்களை ஒன்றுகூட்டப் போவதாலும், இரண்டு கர்ப்பங்களில் வாசம் செய்ததாலும் சங்கர்ஷணன் என்றும், பலம் மிகுந்தவனாதலால் பலராமன் என்றும் திருநாமங்களைச் சூட்டி, 'இவர்கள் இருவரும் மிகுந்த மகிமை உடையவர்கள்' என்று தெரிவிக்கிறார்.

இவ்வாறு, ஸ்ரீகிருஷ்ணரின் திருஅவதார வைபவம், ஸ்ரீமத் பாகவதத்தில் விளக்கப்படுகின்றது.

ஸ்ரீ கிருஷ்ண பகவானின் ஜாதகம்:

ஸ்ரீ கிருஷ்ணரின் ஜாதகம் மிகவும் மகிமை பொருந்தியது. ஜாதகத்தில், சந்திரன், புதன், செவ்வாய், சனி, ராகு ஆகிய ஐந்து கிரகங்கள் உச்சபலத்துடனும், குரு, சுக்கிரன், சூரியன் ஆகிய மூன்று கிரகங்கள் ஆட்சி பலத்துடனும் இருக்கின்றன. கேது பகவான் நீசமாக அமர்ந்திருக்கிறார். ஒன்பதில் எட்டு கிரகங்கள் மிக வலிமையுடன் இருக்கின்றன.

ஸ்ரீராமரின் ஜாதகத்தினைப் போலவே, ஸ்ரீகிருஷ்ணரின் ஜாதகத்தையும் பூஜையில் வைக்கலாம். வியாபாரத் தலங்களில் வைக்க, மறைமுக எதிர்ப்புகள் வீழும். செல்வம் செழிக்கும்.

பிரம்ம வைவர்த்த புராணம், ஸ்ரீகிருஷ்ணரை பரப்பிரம்மமாகத் துதிக்கிறது. ஸ்ரீகிருஷ்ணரின் வசிப்பிடம் 'கோலோகம்' என்று அறியப்படுகின்றது. பிரளய காலத்திலும் அழியாத சிறப்புடையதாய் அது விளங்குகிறது. கோலோகத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ராதா தேவியுடன் அருளாட்சி புரிகின்றார். கண்ணனின் சக்தி அம்சமே ராதாதேவி. கிருஷ்ணரின் இடப்பாகத்திலிருந்து ராதை தோன்றினாள் என்கிறது பிரம்ம வைவர்த்த புராணம்.

பத்மபுராணத்தின்படி, விருஷபானு என்ற முனிவருக்கு  நிலத்தில் கிடைத்த பெண்குழந்தையே ராதா தேவியாவாள். தேவி பாகவதம், ஸ்ரீதாமன் என்னும் ஒரு கோபாலனின் சாபத்தால், பூமியில் விருஷபானு, கலாவதி தம்பதியருக்கு மகளாக வந்துதித்தாள் ராதை எனப் பேசுகிறது. ருக்மணி, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ரவித்தை, சத்யவதி, பத்ரா, லக்ஷ்மணா என எட்டு பட்ட மகிஷிகள் உட்பட எண்ணற்ற மனைவியர் கண்ணனுக்கு. இருப்பினும், 'ராதே ஷ்யாம்' என்ற கோஷமே கண்ணன் மனத்துக்குகந்தது. ராஸலீலையின் போது ராதையின் மகத்துவம் நன்கு வெளிப்படுகிறது. அச்சமயம், அங்கு வந்த அனைத்து தேவர்களும் ராதாதேவியைத் துதிக்க, சிவபெருமான், தம் திருவாக்கினால் 'ராதிகா சஹஸ்ரநாமத்தை' அருளினார். 

ஸ்ரீகிருஷ்ணர் உபமன்யு முனிவரால் சிவ தீக்ஷை பெற்ற சிவபக்தர் என்று பாகவதம் குறிக்கின்றது.

பூர்ணாவதாரமான கிருஷ்ணாவதாரமே அனைவராலும் விரும்பப்படுவது. ஸ்ரீகிருஷ்ணபகவான் அவதரித்த நன்னாளில், கண்ணனைப் போற்றித் தொழுது, 

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

VARAMAHALAKSHMI VRATHAM...(16/8/2013)..வரமஹாலக்ஷ்மி வருக... ..(வரலக்ஷ்மி விரதம்..16/8/2013)


அழகியலோடு சேர்ந்த நம் கலாசார, பண்பாட்டுக் கண்ணாடியாகத் திகழும் வரலக்ஷ்மி விரதம் வந்தே விட்டது. வரும் வெள்ளிக்கிழமை(16/8/2013) அன்று வரலக்ஷ்மி, வரங்களை அள்ளி வழங்க, நம் இல்லங்கள் தேடி வருகிறாள்.

வரலக்ஷ்மி விரதம் குறித்தும், அன்று செய்ய வேண்டியவை, அதற்கு முன் தினம் செய்ய வேண்டியவை  குறித்தும் நான் சென்ற வருடப் பதிவுகளில் எழுதியிருப்பதன் சுட்டிகள் கொடுத்திருக்கிறேன். கிட்டத்தட்ட முழுமையான 'கைடு' போல அவை இருக்கும் என்பது என் நம்பிக்கை. சுட்டிகளுக்கு, கீழே சொடுக்கவும்


2.வளம் பெருக... வரம் தருக... வரலக்ஷ்மி (இரண்டாம் பகுதி)

நல்லவை அனைத்திற்கும், சிறந்தவை அனைத்திற்கும், தூயவை அனைத்திற்கும், ஸ்ரீலக்ஷ்மியைத் தொடர்புபடுத்திப் பாராட்டுவது நம் மரபு.

'லக்ஷ்மீகரமாக இருக்கிறது' என்னும் ஒற்றைச் சொல்லில் தான் எத்தனை வித அர்த்தங்கள்!!. ஸ்ரீமஹாலக்ஷ்மியே, அஷ்ட லக்ஷ்மியாகவும் ஷோடச லக்ஷ்மியாகவும் விரிவடைந்து, எல்லா விதங்களிலும் நம் நல்வாழ்வு சிறக்க, பேரருள் மழை பொழிகின்றாள்.

திருமகள் அவதரித்தாள்:

திருமகள் திருப்பாற்கடலில் அவதரித்த தினம் 'அக்ஷய திருதியை' என்று சொல்லப்பட்டாலும், ஆவணி மாத பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை என்றும் ஒரு கூற்று இருக்கிறது. ஆகவே, அன்றைய தினமும் திருமகளின் அவதார தினமாகக் கருதப்பட்டு, பல காலமாக, லக்ஷ்மி வழிபாடு நடைபெறுகிறது. திருமகளே வரங்களை அள்ளி அருளும் அருட்பிரவாகம். அன்றைய தினத்தில், அவளை வரங்களை அருளும் வரலக்ஷ்மியாக தியானித்து பூஜித்தனர் நம் முன்னோர்.

திருமகளின் அவதாரங்கள்;

திருமாலின் அவதாரங்கள் தெரியும். திருமகளின் அவதாரங்கள் தெரியுமா?.

ஒவ்வொரு மன்வந்திரத்திலும் திருமகள் திருமால் மனம் மகிழ, திரிபுவனங்களும் நலம் பெற அவதரிக்கின்றாள்.

  1. ஸ்வாயம்புவ மன்வந்திரத்தில் பிருகு மஹரிஷியின் புதல்வியாகவும்
  2. ஸ்வாரோசிஷ மன்வந்திரத்தில், அக்னியிலும்
  3. ஔத்தம மன்வந்திரத்தில், நீரிலிருந்தும்
  4. தாமஸ மன்வந்திரத்தில் பூமியிலிருந்தும்
  5. ரைவத மன்வந்திரத்தில், வில்வமரத்தில் இருந்தும்
  6. சாக்ஷூஸ மன்வந்திரத்தில், தாமரைப்பூவில் இருந்தும்
  7. வைவஸ்வத மன்வந்திரத்தில் திருப்பாற்கடலில் இருந்தும் ஸ்ரீதேவி அவதரித்தாள்.

ஆக, வரலக்ஷ்மி அவதரித்த தினமாகவே கருதி, ஆவணி பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி விரதம் செய்கின்றோம்.

வரலக்ஷ்மி விரதம் குறித்த புராணக் கதை:

ஒவ்வொரு புராணத்திலும் இது வெவ்வேறு விதமாக உள்ளது. இருப்பினும் பொதுவாக, கீழ்க்கண்ட புராணக் கதையே வழங்கப்படுகின்றது.

சியாமபாலாவின் சரிதம்:

பத்ரச்ரவஸ் என்ற மன்னன் பெரும் விஷ்ணு பக்தன். சுரசந்த்ரிகா என்னும் பட்டத்தரசியுடன், தன் நாட்டை நலமுற ஆண்டு வந்தான். அவனது செல்வத் திருமகளாக உதித்தவளே சியாமபாலா. சியாமாவை, மாலாதரன் என்னும் சக்கரவர்த்திக்கு மணம் செய்து தந்தார்கள்.

'விதி சதி செய்தது' என்னும் வார்த்தை பட்டத்தரசிக்குப் பலிக்கும் காலம் வந்தது. 'தெய்வம் மனுஷ ரூபேண' என்பது பலருக்குப் புரிவதில்லை. தேவதைகள், எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் தோன்றுவார்கள். ஆகவே யாராக இருந்தாலும் சரியான மரியாதை கொடுக்க வேண்டும். ஏளனமாக எவரையும் எண்ணக் கூடாது என்பது பெரியோர்கள் வாக்கு.

தான் பெற்ற திருமகளை மணமகளாக்கி புகுந்த வீடு அனுப்பிய பின்,பட்டத்தரசி ஒரு நாள்,  ஓய்வாக அமர்ந்திருந்தாள்.அப்போது ஸ்ரீலக்ஷ்மி தேவி, அவளைச் சோதிக்க எண்ணம் கொண்டாள். ஒரு முதிய சுமங்கலி வடிவில் தோன்றி, சுரசந்த்ரிகாவிடம், வரலக்ஷ்மி விரதம் பற்றிய குறிப்புகளை விரிவாக எடுத்துரைத்தாள். ஆனால், சுரசந்த்ரிகாவோ, அம்மையை, 'யாரோ யாசகம் கேட்க வந்தவள்' என்று நினைத்து கன்னத்தில் அடித்து அவமானப்படுத்தி, அவளை வெளியே விரட்டிவிட்டாள். வெகுண்டு, கோபம் மிகக் கொண்டு வெளியேறிய லக்ஷ்மி தேவியை, அச்சமயம், தாயைக் காண பிறந்தகம் வந்து கொண்டிருந்த சியாமா, வாயிலருகில் சந்தித்தாள். கிழவியின் முகம் கண்டு துணுக்குற்றாள். மிகப் பணிவுடன்,முதியவளைச் சமாதானப்படுத்தி, அவளிடம் இருந்து விரத முறைகளைக் கேட்டறிந்தாள். தன் தாய் செய்த செயலுக்காக மன்னிப்பும் கோரினாள்.

அதன் பின், ஒவ்வொரு வருடமும், வரலக்ஷ்மி விரதம் இருந்து, முறை தவறாமல் சிரத்தையுடன் பூஜித்து வந்தாள் சியாமபாலா.அதன் பலனாக எல்லா செல்வ வளங்களும் அவள் இல்லம் தேடி வந்தன.

இப்படியிருக்க, பத்ரச்ரவஸ்ஸின் அரண்மனையில் காட்சிகள் மாறின. அவனது எதிரிகள், அவன் மீது படையெடுத்து, நாட்டைக் கைப்பற்றினர். மன்னனும், பட்டத்தரசியும் தப்பியோடி கானகத்தில் தஞ்சம் புகுந்தனர். உண்ண உணவும் இல்லாது வருந்தினர்.

சியாமா, பெற்றோர்களின் நிலை அறிந்து துயரம் மிகக் கொண்டாள். தகுந்தவர்கள் மூலம் விசாரித்து, பெற்றோர்கள் வசிக்கும் இடம் அறிந்தாள். தன் இருப்பிடம் அழைத்து வைத்துக் கொண்டு பராமரித்து வந்தாள். ஆனால், எத்தனை நாள் மருமகன் இல்லத்தில் மாமனார் வாசம் செய்ய இயலும்?. எனவே, ஒரு குடம் நிறைய தங்கக் காசுகள் எடுத்து பெற்றோரிடம் கொடுத்து, 'இதை வைத்து பிழைத்துக் கொள்ளுங்கள்' என்றாள் சியாமா. ஆனால், திருமகள் வாசம் செய்யும் செம்பொன், தீவினையாளாரிடம் சேர்ந்ததும் கரித்துண்டுகளாக மாறியது.  இதைப் பார்த்து அதிர்ந்த சுரசந்திரிகாவுக்கு, வரலக்ஷ்மி விரதம் குறித்து உபதேசித்த மூதாட்டியின் நினைவு வந்தது.

'அவள் சாதாரண மானிடப் பெண் அல்ல' என்பதை உணர்ந்தாள். தன் மகளிடம் வரலக்ஷ்மி விரதத்தை உபதேசிக்கும்படி கேட்டுக் கொண்டு, முறைப்படி விரதம் செய்து வந்தாள்.

கருணைக் கடலான வரலக்ஷ்மியின் அருட்பிரவாகத்தின் பலனாக, பத்ரச்ரவஸ்ஸிற்கு தைரிய லக்ஷ்மியின் அனுக்கிரகம் நிரம்பியது. தீரத்துடன் படை திரட்டி, போர் புரிந்து, இழந்த நாட்டை வென்றான். தான் இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றனர் பத்ரச்ரவஸ்ஸூம் சுரசந்த்ரிகாவும்.

மற்றொரு புராணக் கதை:

சித்திர நேமி என்ற அப்சரஸ்(தேவ குலப் பெண்), அவளது உயர் குணம் மற்றும் கல்வியறிவின் காரணமாக மிக மதிக்கப்பட்டு வந்தாள். தேவர்களிடையே எழும் சிறிய சச்சரவுகளை எல்லாம், தன் சீரிய மதிநுட்பத்தால் நீதிபதியைப் போன்று, நடுநிலை தவறாமல் தீர்ப்பளித்து, தீர்த்து வைத்தாள். ஒரு முறை அவள் நடுநிலை தவறியதால், பாதிக்கப்பட்டவர் அன்னை உமையிடம் முறையிட்டனர். உமாதேவி, சித்திரநேமிக்கு, தொழுநோய் பீடிக்கும்படி சாபமிட்டாள்.

சித்திரநேமி, பதறி, தன்னை மன்னிக்கும்படியும் சாப விமோசனமளிக்கும்படியும் அன்னையை வேண்ட, அன்னையும், 'கங்கை நதிக்கரையில் வரலக்ஷ்மி விரதத்தை அனுசரித்தால் சாப விமோசனம் கிட்டும்' என அருளினாள்.

அவ்வாறே விரதம் அனுஷ்டித்து, சாப விமோசனம் அடைந்தாள் சித்திரநேமி. மேலும் 'இது போல், நதிக்கரைகளில் வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டிப்பவர்கள் பன்மடங்கு பலனை அடைய வேண்டும்' என்று ஸ்ரீலக்ஷ்மி தேவியிடம் வேண்டி, வரம் பெற்றாள். ஆகவே, இவ்விரதத்தை, நதிகளில் நீராடி, பின் நதிக்கரைகளில் செய்வது சிறப்பு.

இதே புராணக் கதை, சித்திரநேமி என்பவனை சிவனாரின் கணங்களில் ஒருவனாகச் சித்தரித்தும் வழங்கப்படுகின்றது. ஒரு முறை, சிவனாரும் உமையம்மையும் சொக்கட்டான் விளையாடியபோது, நடுவராக இருந்த சித்திரநேமி, பாரபட்சமாகத் தீர்ப்பளித்ததாகக் கருதிக் கொண்டு, உமை அவனுக்கு குஷ்டரோகம் வருமாறு சாபமிட்டுவிட்டார். பின்னர், காட்டுப் பகுதியில் அலைந்த அவன், ஒரு தடாகத்தில், தேவலோக மாதர்கள், வரலக்ஷ்மி விரதம் அனுசரிப்பதைப் பார்த்தான். அந்தப் பூஜையின் நெய்தீப வாசனையும், பூஜையைப் பார்த்த பலனும் அவன் நோயை விரட்டி விட்டன. அகமகிழ்ந்த சித்திரநேமி, தேவலோக மாதர்களிடம் பூஜை விவரங்களை அறிந்து கொண்டு, விரதம் அனுஷ்டிக்கத் தொடங்கி, அதன் பலனாக, விரைவில் தேவலோகம் சென்றான்.

இத்தகைய சிறப்பு மிக்க விரதத்தை நாம் செய்தால், அம்பிகையின் அருளால் அனைத்து நலன்களையும் பெறலாம்.

இனி, கொஞ்சம் பொதுவான குறிப்புகள்.

விரத பூஜையில் கவனத்தில் கொள்ள வேண்டியவை.(முக்கியமாக வேலைக்குப் போகும் பெண்களுக்கு)

1.திட்டமிடல் எந்த வேலையையும் எளிதாக்கும். ஒரு மணி நேரம் ஒதுக்கி, ஆர அமர யோசித்து, செய்ய வேண்டிய வேலைகளையும் அழைக்க வேண்டிய நபர்களையும் குறித்து வைத்து கொள்ளுங்கள்.பூஜைக்குத் தேவையானவற்றை முதலிலேயே திட்டமிட்டு வாங்கி வைத்துக் கொள்ளவும் (விவரம் மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளில் இருக்கின்றது)

2. இம்முறை வியாழன் விடுமுறை தினம் என்பதால் அன்றே அனைத்தையும் சேர்த்து வைத்து கொள்ள வேண்டாம். என்ன சமையல், என்ன நிவேதனம் என்பதையும்,  தாம்பூலத்தில் என்ன தரவேண்டும் என்பதையும் ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு, நேரம் கிடைக்கும் போது வாங்க வேண்டியதை வாங்கினால், கடைசி நேர டென்ஷன் மிச்சம். முக்கியமாக, எழுதின விபரங்களை கண்களில் படும்படி ஒட்டி வைத்துக் கொள்ளவும்.  முடிந்தால் தெரிந்தவர்களுக்குப் போன் போட்டு, எழுதியவற்றைச் சொன்னால், நமக்கு மறந்து போனதை அவர்கள் நினைவுபடுத்துவார்கள்(இது என் சொந்த அனுபவம்).

3. பூஜைகளை சிடி அல்லது பூஜா விதானத்தின் துணை கொண்டு செய்வதாக இருந்தால், முதல் நாளே  பூஜா விதானத்தை எடுத்து வைக்கவும். சிடி ஓடுகிறதா என்று செக் செய்யவும்.

4.  மின்சார வசதிகள் குறைவாக இருக்கும் இடத்தில், எந்த நேரத்தில் மின்சாரம் இருக்கும் என்பதை பலமுறை நினைவுபடுத்திக் கொள்ளவும். அதற்கேற்றாற் போல், அரைப்பது முதலியவற்றை திட்டமிடவும். பூஜை நேரத்தில் மின்சாரம் இருக்காதெனில், பூஜா விதானம் புக்கை நம்புவது கைகொடுக்கும்.

5. அம்மனுக்குச் சாற்ற வேண்டிய ரவிக்கைத் துண்டு, நோன்புச் சரடுகள், கொழுக்கட்டை மாவு தயாரித்த பின் அதை மூடி வைக்கத் தேவையான துணி போன்ற சின்ன சின்ன விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தி, எடுத்து வைக்கவும். இது போன்ற விஷயங்களே டென்ஷனில் மறந்து போகும்.

6. எல்லா வேலைகளையும் நாமே செய்ய வேண்டும் என்று நினைக்காமல், இயன்ற‌ வேலைகளைப் பிரித்துக் கொடுங்கள். உதாரணமாக, தாம்பூலப் பொருட்களை கவரில் போடுவது முதலியவற்றை வீட்டில் உள்ள குழந்தைகளைச் செய்யச் சொல்லலாம். மறக்காமல், மறு நாள் தாம்பூலம் வாங்க வருபவர்களிடம்,  'தாம்பூலக் கவர் போட்டது'எங்க ரம்யா(அ) ரமேஷ் தான்' என்று சொல்வது குழந்தைகளை உற்சாகப்படுத்தும். அடுத்த முறை வேலை செய்ய  அழைக்காமலே ஓடி வருவார்கள்.

முக்கியமாக, பண்டிகை தினத்தில் பண்டிகை தின மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இன்றைய இறுக்கமான சூழலில், மனதை இலகுவாக்க இது போன்ற பண்டிகைகள் கட்டாயம் உதவும். ஒருமுகப்படுத்தப்பட்ட மனதோடு அம்பிகையை அலங்காரம் செய்து பாருங்கள்!!. அலங்காரம் அழகாக அமையும். மனம் மகிழ்ச்சியில் மிதக்கும். எனவே, வேண்டாத டென்ஷன்களை இரண்டு நாட்கள் ஒதுக்கி வையுங்கள். பூஜை முடிந்ததும் அவை போன இடம் தெரியாது!!.

இல்லம் சிறிதெனினும், அதை சுத்தப்படுத்தி, எளிமையாக, இருப்பவற்றக் கொண்டு அலங்கரித்து, முத்துப் போல் கோலமிட்டு விளக்கேற்றி வைத்து, உள்ளன்போடு அர்ச்சித்தால் ஜகன்மாதா கட்டாயம் அங்கு கொலுவிருப்பாள். ஆகவே, எதைச் செய்தாலும் அதை உள்ளன்போடு, உள்ளார்ந்த ஈடுபாட்டோடு செய்து அம்பிகையை ஆராதியுங்கள். அன்போடு வரம் பல தருவாள் வரலக்ஷ்மி!!. அம்பிகையை வரவேற்போம்!!. அவளருளால்..

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

AADI AMAVASAI,(6TH AUG 2013) BHEEMANA AMAVASYA VRATHA...ஆடி அமாவாசை (பீமன அமாவாசை விரதம்).


அன்பர்களுக்கு வணக்கம்.

சூரியனும், சந்திரனும் ஒரே  இராசியில், ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் தினமே அமாவாசை ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வந்தாலும், ஒரு வருடத்தில் வரும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை ஆகியன மிகுந்த முக்கியத்துவம் பொருந்திய தினங்களாக சிறப்பிக்கப்படுகின்றன.

அமாவாசை தினம், பித்ரு பூஜைக்கும், இறை வழிபாட்டுக்கும் உகந்த தினமாகும். இம்மண்ணுலகில் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களுக்குச் செய்யும் வழிபாடே பித்ரு பூஜை. இதன் முக்கியத்துவம் குறித்து, மஹாளய பட்சம் (சொடுக்கவும்) பதிவில் சொல்லியிருக்கிறேன்.

புண்ணிய நதிகளில் நீராடுவது ஏன்?
மனோகாரகனான சந்திர பகவானின் இராசி கடகம். கடகத்தில் சந்திரன், உடல்காரகனான சூரியனோடு சஞ்சரிக்கும் நேரத்தில் செய்யப்படும் புண்ணிய காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பான பலனைத் தரும் என்பது கண்கூடான உண்மை. அன்றைய தினம் புண்ணிய நதிகளில் நீராடுவது, உடல் மற்றும் மன நோய்களை நீக்கும். 

ஏனென்றால், அமாவாசை போன்ற புண்ணிய நாட்களில், ஏராளமான ரிஷிகள், முனிவர்கள், சூக்குமமாக மண்ணில் உலாவி வரும் சித்தர் பெருமக்கள் ஆகியோர் தம் தவத்திலிருந்து நீங்கி, புண்ணிய நதிகளில் நீராடி, அவர்களின் தவப்பலனை, இவ்வுலகில் வாழும் மக்கள் நலம் பெறும் பொருட்டு, அந்த நதி நீருக்குத் தருகின்றனர். ஆகவே, அந்த நல்ல நாட்களில் புண்ணிய நதிகளில் நீராடும் போது, நம் பிணிகள் யாவும் குணமடைகின்றன.

புண்ணிய நதிகள், கடல் ஆகியவற்றில் நீராடி, பின் அவற்றின் கரையில் செய்யப்படும் பித்ரு பூஜைகள், நாட்பட்ட துன்பங்கள், சோகங்களிலிருந்து விடுவித்து நன்மை அளிக்கும் சக்தி உடையன. ஆகவே ஆடி அமாவாசை தினத்தில், இராமேஸ்வரம், பவானி கூடுதுறை முதலான திருத்தலங்களில் நீராடி, பித்ரு கடன் நிறைவேற்றுவதை பெரும்பாலானோர் கடைபிடிக்கிறார்கள்.

அமாவாசை தினம் இறைவழிபாட்டுக்கும் உகந்த  தினமாகும். முற்காலத்தில், தெய்வ நம்பிக்கை மிகுந்திருந்ததால், பல்வேறு விரதங்களும் பூஜைகளும் அமாவாசை தினத்தில் கடைபிடிக்கப்பட்டன.பௌர்ணமி, அம்பிகை பூஜைக்கு உகந்த தினமாக அமைவது போல், அமாவாசை சிவபூஜைக்கு உகந்த தினம். சித்தர்களுக்கு எல்லாம் சித்தனான முக்தியளிக்கும் எம்பிரான் வழிபாடு, அமாவாசை தினத்தில் நடைபெற்றால் ஆன்ம விடுதலைக்கு வழி பிறக்கும்.

சிவனார் வழிபாடு மட்டுமல்லாமல், இன்னமும் பல கிராமப்புறங்களில், காவல் தெய்வங்களுக்கு அமாவாசை தினத்திலேயே சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. உக்ர தேவதைகள் என்று அறியப்படும், ஸ்ரீ முனீஸ்வர ஸ்வாமி, ஸ்ரீ கருப்பண்ண சுவாமி முதலான தெய்வங்களுக்கு, அமாவாசை தினத்தன்று சிறப்பு பூஜைகள் உண்டு. அதிலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் பெருவாரியான மக்கள் கூடி, விழா எடுப்பித்து, அன்னதானம் முதலானவற்றை நடத்துகிறார்கள்.

இந்தப் பதிவில், ஆடி அமாவாசையன்று,சிவனாரைக் குறித்துச் செய்யப்படும் மகிமை பொருந்திய ஒரு விரதத்தையும், விரதக் கதையையும் காணலாம்.

பீமன அமாவாசை விரதம், ஜ்யோதிர் பீமேஸ்வர விரதம், பதிசஞ்சீவினி விரதம் முதலான பெயர்களால் அழைக்கப்படும் இந்த விரதம், சிவபெருமானையும் பார்வதி தேவியையும் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதம் பற்றி, மிகப் பெரிய புராணமான ஸ்காந்த புராணத்தில் மிக அழகுற விவரிக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் அனைவராலும் கடைபிடிக்கப்பட்ட இந்த விரதமானது, காலப்போக்கில் மாற்றமடைந்து, இப்போது, கர்நாடக, ஆந்திர பிரதேச மக்களால் மட்டுமே பெருவாரியாகக் கடைபிடிக்கப்படுகின்றது. கர்நாடகாவில் ஆஷாட(ஆடி)அமாவாசை 'பீமன அமாவாசை' என்றே அழைக்கபடுகின்றது. இங்கு சந்திரமானன பஞ்சாங்கத்தைப் பின்பற்றும் வழக்கம் உள்ளதால், இது ஆஷாட மாதத்தின் நிறைவு தினமாகும். மறு நாள் பிரதமையிலிருந்து, சிராவண(ஆவணி) மாதம் துவங்குகின்றது.

இந்த விரதம் பெண்களுக்கானது. திருமணம் ஆன பெண்கள் மற்றும் கன்னிப் பெண்கள், தம் கணவர் மற்றும் உடன் பிறந்தோர் நலன் வேண்டி இந்த விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். குடும்பத்தில் இருக்கும் ஆண்களின் நலன் வேண்டுவதே இந்த விரதத்தின் முக்கிய நோக்கம்.

திருமணமான பெண்கள், சுமார் ஒன்பது வருடங்கள் வரையில் இந்த விரதம் செய்கின்றனர்.

விரதக் கதை:
முன்னொரு காலத்தில், சௌராஷ்டிர தேசத்தில், தேவசர்மா என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார். அவருக்கு கங்கா என்ற பெயரில், அழகான ஒரு மகள் இருந்தாள். வயது முதிர்ந்த அந்த அந்தணர், காசி யாத்திரை செய்யத் தீர்மானித்தார். அக்காலத்தில் காசி யாத்திரை சென்று வர பல காலம் ஆகும். திரும்பி வருவது என்பதும் இறையருள் இருந்தால் தான் நடக்கும். இப்படியிருக்க, தம் இளவயது மகளை தம்முடன் அழைத்துச் செல்வது இயலாது என்பதால், திருமணம் முடிந்து தனியே வசிக்கும் தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு, காசி  செல்லத் தீர்மானித்தார்.

அவ்வாறே, தம் மகளை, மகனிடம் ஒப்படைக்கும் போது, சிறிது பணமும் நகைகளும், உடைமைகளும் கொடுத்து, ஒரு வேளை தான் திரும்ப வராவிட்டால், அவற்றை, அந்தப் பெண்ணின் திருமணத்திற்கு உபயோகிக்குமாறு கூறிச் சென்றார்.

அவர் சென்று ஒரு வருடமாகியும் திரும்ப வராததால், அவரது மகனும் மருமகளும் கவலை கொண்டனர். அந்தணர் வராதது குறித்த கவலையில்லை அது. தங்கைக்கு தக்க இடம் பார்த்து மணம் செய்ய வேண்டுமே என்பதே அந்தக் கவலை. 

மகனுக்கு, தந்தை கொடுத்துச் என்ற பணத்தையும் பிற உடைமைகளையும் தானே எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் மீறியது. இந்த நிலையில், அவன் விநோதமான ஒரு அறிவிப்பைக் கேட்க நேர்ந்தது. அந்த நாட்டின் அரசனின் மகன்(இளவரசன்) திடீரென இறந்து விட்டதால், அவனை மணந்து, அவனோடு உடன்கட்டை ஏறுவதற்காக, ஒரு பெண் வேண்டுமெனக் கேட்டு அறிவிப்புச் செய்திருந்தான் அந்நாட்டு மன்னன். அக்கால வழக்கப்படி, மனைவி உடன்கட்டை ஏறினால், கணவன் சொர்க்கத்திற்குச் செல்வான் என்பது நம்பிக்கை.

யாரும் தங்கள் மகளை இந்தக் கொடூரத்திற்கு பலியிடத் துணியவில்லை. பேராசை பிடித்த அண்ணனும் அண்ணியும்  கங்காவை அழகாக அலங்கரித்து, அரசனிடம் ஒப்படைத்தனர். இந்தச் செயலுக்கு வெகுமானமாக  கங்காவின் எடைக்குச் சமமான  தங்கமும் அவனுக்குத் தரப்பட்டது.

கங்கா, தன் விதியை எண்ணி நொந்து அழுவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை. தன் தந்தையிருந்தால், இந்த நிலை தனக்கு வந்திருக்காது என்று எண்ணி மனம் புழுங்கினாள் அவள். கங்காவுக்கும் இறந்த இளவரசனுக்கும் திருமணம் நடைபெற்றது. உடன், இளவரசனின் உடலும் பாகீரதி நதிக்கரைக்கு அருகிலிருந்த‌ மயானத்திற்கு ஊர்வலமாகச் சென்றது. கங்காவும் உடன் அழைத்துச் செல்லப்பட்டாள்.

திடீரென்று பெருமழை பொழியத் துவங்கியது. வெகு நேரமாகியும் மழை விடாததால், அனைவரும், மயானத்திலிருந்து செல்லத் துவங்கினர். அரசனும், மறு நாள் வந்து எரியூட்டலாம் என்று தீர்மானித்து, கங்காவையும் தன்னுடன் வருமாறு அழைத்தான். ஆனால் கங்காவோ வர மறுத்து, தன் இறந்த கணவனின் சடலத்துடன் அங்கேயே இருக்கத் தீர்மானித்தாள். அரசனும் அவளை அங்கேயே விட்டுவிட்டு அரண்மனைக்குச் சென்றான்.

இரவு முழுவதும் கங்கா அங்கேயே இருந்தாள். மறுநாள் விடிகாலை, ஆடி அமாவாசை புண்ணிய தினம். அன்று தன் பெற்றோர்கள் அனுசரிக்கும் ஒரு விரதத்தைப் பற்றி கங்காவுக்கு நினைவு வந்தது. இக்கட்டான நிலையில் இறைவனைத் தவிர துணையேதுமில்லை என்று உணர்ந்த அவள், இந்த நிலையிலிருந்து மீள, தானும் அந்த விரதத்தைச் செய்து இறைவனை வேண்ட முடிவெடுத்தாள். உடனே அவள், அருகிருந்த பாகீரதி நதியில் நீராடி, நதிக்கரையிலிருந்த களிமண்ணை எடுத்து, இரு விளக்குகள் செய்தாள். அருகிலிருந்த, எண்ணையின் உதவியில்லாமல் எரியக்கூடிய ஒரு வித மரத்தின் வேரை எடுத்து வந்து, சிக்கிமுக்கிக் கல்லின் உதவியால் தீபமேற்றினாள்.

அந்த இரு தீபங்களிலும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் ஆவாஹனம் செய்து, தன் தாயார் அனுசரிக்கும் முறைப்படி பூஜை செய்தாள். நிவேதனம் செய்ய எதுவும் இல்லாத சூழலில், களிமண் உருண்டைகளையே கொழுக்கட்டை போல் செய்து நிவேதனம் செய்தாள்.

விரதத்தின் முக்கிய அங்கம், நிவேதனம் செய்யப்பட்ட கொழுக்கட்டைகளை, ஆண்கள் யாராவது, தம் முழங்கையினால் உடைக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு அங்கு யாரும் இல்லை. அப்போது ஒரு அழகிய இளம் தம்பதியர் அந்த இடத்திற்கு வந்தனர். மயானத்தில் தன்னந்தனியாக பூஜை செய்து கொண்டிருக்கும் கங்காவைக் கண்டு, அவள் கதையைக் கேட்டு, அவள் நிலையைக் கண்டு இரங்கினர்.

பிணமாகக் கணவன் கிடந்த நிலையிலும் இறை நம்பிக்கையை விடாது, 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்று உளமார வணங்கித் துதிக்கும் அவள் பக்தி, அந்த இளம் தம்பதியை உருக்கியது.

தம்பதியருள், அந்த இளம் கணவன், கங்கா தயாரித்திருந்த களிமண் உருண்டைகளை உடைக்க ஒப்புக் கொண்டான். அவ்வாறே செய்து, அவளை, 'தீர்க்க சுமங்கலி பவ' என்று வாயார வாழ்த்தினான்.

கங்கா, அவன் வாழ்த்தினைக் கேட்டு வியந்தாள்.  'இது எப்படி சாத்தியம்?' என்று கேட்டாள்.

அந்த இளம் தம்பதியர் அவளை நோக்கி, 'நீ உன் கணவனை ஏன் எழுப்பாமல் இருக்கிறாய்?, சென்று எழுப்புவாயாக'. என்று கூறினர்.

எதுவும் புரியாமல், கங்காவும், தன் கணவனை எழுப்பினாள். என்ன ஆச்சரியம்?!!. அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. இறந்த இளவரசன், தூக்கம் கலைந்து எழுபவனைப் போல் எழுந்தான். 

நடந்தவற்றை கங்காவின் மூலம் அறிந்த இளவரசன், தனக்கு உயிர் தந்த இளம் தம்பதியைத் தேடிய போது அவர்கள் அந்த இடத்தில் இல்லை.

எல்லாம் சிவனருளால் நிகழ்ந்ததென்று உணர்ந்து, தம்பதியர் மகிழ்ந்தனர். அப்போது அங்கு வந்த அரசனும் மகிழ்ந்து, இறையருளைப் போற்றி, தம்பதியரை, தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அன்று முதல், அந்நாட்டிலுள்ளோர் அனைவரும் இந்தப் புண்ணிய விரதத்தைச் செய்யலாயினர். 

கதையின் சாரம்:
யார் கைவிட்டாலும் இந்தப் பிரபஞ்சத்தின் காவலனான இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை. நம்மிடம் இருந்து, அன்பு, பக்தி மற்றும் நம்பிக்கையை மட்டுமே அவன் எதிர்பார்க்கிறான். எந்நிலையில் இருந்தாலும் மனமுருகி வேண்டினால், அவன் நமக்கு உதவக் காத்திருக்கிறான். இனி ஏதும் செய்ய இயலாது என்ற நிலையிலும் இறைவனால் எந்தச் சூழலையும் இனிதாக மாற்ற இயலும். பக்தியின் சக்திக்கு எல்லையே இல்லை.

விரதம் அனுசரிக்கும் முறை:
களிமண்ணால் செய்யப்பட்ட இரு விளக்குகள் அவசியம். இவற்றை வீட்டிலேயே தயாரிக்கலாம் அல்லது வாங்கலாம். தற்போது, ஜோடி பித்தளை அல்லது வெள்ளி விளக்குகள், சிவ பார்வதி திருவுருவப்படங்கள் அல்லது விக்ரகங்களை வைத்தும் பூஜிக்கிறார்கள்.

இவற்றுடன், பூஜைக்குத் தேவையான பூக்கள், பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், விரலி மஞ்சள், மஞ்சள் கயிறு(நோன்புச் சரடுக்காக), கஜ்ஜ வஸ்திரம் எனப்படும், பஞ்சினை, குங்குமம் தோய்த்து  உருவாக்கப்பட்ட மாலை (படம் பார்க்க. இரு விளக்குகளுக்கும் சேர்த்து அணிவிக்கப்பட்டிருப்பது). நிவேதனமாக, காசுகள் பொதித்து உருவாக்கப்பட்ட, கொழுக்கட்டைகள், மாவிளக்கு தீபங்கள்.

கொழுக்கட்டை பின்வருமாறு செய்யப்படுகின்றது. அரிசி அல்லது கோதுமை மாவில் நீர் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டி, மத்தியில் ஒரு காசு வைத்து, சுற்றிலும் ஊற வைத்த பருப்புகளை வைக்க வேண்டும். மற்றொரு உருண்டையால் அதனை மூடி ஐந்து நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். இந்தக் கொழுக்கட்டைகளை உண்பதில்லை. ஆகவே, இவை தவிர வேறு நிவேதனங்களும் செய்யலாம்.

ஆடி அமாவாசை தினத்தன்று, விடிகாலையில் நீராடி, வீடு, பூஜையறை முதலியவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும். மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். கொடுத்திருக்கும் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு பூஜைக்கு அமர வேண்டும்.

விளக்குகளை சந்தனம், குங்குமம், பூக்களால் அலங்கரிக்க வேண்டும். அம்பிகையை ஆவாஹனம் செய்யும் விளக்கில், ஒரு மஞ்சள் கயிற்றில் விரலி மஞ்சளைக் கோர்த்து அணிவிக்க வேண்டும்.

அரிசி அல்லது தானியங்கள் நிரம்பிய தட்டில், விளக்குகளை வைக்க வேண்டும். அம்பிகை விளக்கை வலப்புறம் வைக்கவும். ஒன்பது இழைகளாலான கஜவஸ்திரம் சாற்றி, நெய்யூற்றி திரி போடவும். விளக்குகளின் முன்பாக, சிவபெருமான், பார்வதி விக்ரகங்களோ, மங்கள கௌரி விக்ரகமோ வைக்கலாம். அவற்றுக்கும் பூச்சூட்டி அலங்கரிக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு, ஒன்பது முடிச்சுக்களிட்ட நோன்புச் சரடுகளைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். சரடுடன் ஒரு பூவையும் சேர்த்து முடிந்து வைக்கலாம். ஒன்பது வெற்றிலை, ஒன்பது, பாக்கு, இயன்றால் ஒன்பது வகைப் பழம் முதலியவற்றை, விளக்குகளின் வலது புறம் தயாராக எடுத்து வைக்கவும். நோன்புச் சரடுகளையும் ஒரு வெற்றிலையில் வைத்து, விளக்குகளின் வலப்புறம் வைக்கவும்.

பூஜை துவங்கு முன்பாக தீபமேற்ற வேண்டும். சிவனார், பார்வதி தேவி குறித்த துதிகளைக் கூறி அர்ச்சனை செய்யவும். மஞ்சள், குங்குமம், மலர்கள் முதலியவற்றை அர்ச்சனைக்குப் பயன்படுத்தலாம். கௌரி துதிகளும் சொல்லலாம்.

பூஜையின் முடிவில், தீபாராதனை செய்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்ய வேண்டும். நோன்புச் சரடுகளை, வீட்டில் உள்ள பெண்களில் வயதில் மூத்தவர், தான் கட்டிக் கொண்ட பின் மற்ற பெண்களுக்குக் கட்டி விட வேண்டும்.

மாவிளக்கு ஆரத்தி செய்வது இந்தப் பூஜையின் நியமங்களில் ஒன்று. பூஜை நிறைவில் கட்டாயம் செய்ய வேண்டும். குறைந்தது இரண்டு மாவிளக்குகள் செய்து ஆரத்தி செய்ய வேண்டும்.

அதன் பின், வீட்டில் ஆண் உறுப்பினர்கள், கொழுக்கட்டையை, வெற்றிலை பாக்கின் மேல் வைத்து, தமது முழங்கையால் நசுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது, உள்ளிருக்கும் காசு வெளிவரும். சிறுவர்கள், காசை எடுத்துக் கொண்டு ஆசி பெறுவர். வயதில் மூத்தவர்கள், சிறியவர்களுக்கு ஆசி வழங்குவர். இவ்வாறு கொழுக்கட்டையை உடைப்பதால், துரதிருஷ்டங்கள், பிரச்னைகள் முதலியவை நீங்கி, நீண்ட ஆயுள், சுகம் முதலியவை உண்டாகும் என்பது ஐதீகம். 

அதன் பின்  பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி, பிரசாதங்களை அனைவருக்கும் விநியோகிப்பர். அன்றைய தினம், வறுத்த, மற்றும் பொரித்த உணவுகளை உண்பதில்லை.

மறு நாள், புனர் பூஜை செய்து, இறைத் தம்பதியரை இருப்பிடம் எழுந்தருளச் செய்ய (யதாஸ்தானம்)வேண்டும். களிமண் விளக்குகளானால், துளசிச் செடியின் அடியில் அவற்றை வைத்து வணங்கி, ஒரு வாளியில் நீர் எடுத்து, அவற்றைக் கரைத்து, அந்த நீரை செடிகளுக்கு ஊற்ற வேண்டும். திருமணமான  பெண் அனுசரிக்கும் ஒன்பதாவது வருட விரதமானால், அந்த விளக்குகளை, புதிதாகத் திருமணமாகி, விரதம் அனுசரிக்கும் பெண்ணுக்குக் கொடுக்கலாம். சில வீடுகளில்,ஒன்பதாவது வருட விரத நிறைவின் போது,  ஒரு புதிய ஜோடி விளக்குகளை வாங்கி, சகோதரனுக்குக் கொடுக்கிறார்கள்.

ஒவ்வொரு விரதமும் பூஜையும் காரண காரியங்களால் உண்டானது. கர்மவினைகளில் அகப்பட்டு, உலக வாழ்க்கையில் அல்லலுற்று அரற்றும் ஒவ்வொரு ஜீவனுக்கும் நம்பிக்கையூட்டி, இறையருளால், பிறவிப் பெருங்கடலைக் கடக்கலாம் என்ற வலியுறுத்துவதே விரத பூஜைகளின் நோக்கம்.

ஆடி அமாவாசை தினத்தன்று, அம்மையப்பனைப் பணிந்து, இறையருளால்

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.(google pictures).