நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 13 ஜனவரி, 2014

THIRUPPALLIYEZHUCHI...SONG..10..திருப்பள்ளியெழுச்சி..பாடல் 10

பாடல் 10

புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
  போக்குகின் றோம்அவ மேயிந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
  திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
  படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
  ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.


புவனியில் போய்ப் பிறவாமையின் – பூமியில் சென்று பிறவாமால்

நாம் அவமே நாள் போக்குகின்றோம் – யாம் வீணாகவே காலத்தைக் கழிக்கின்றோம்.

இந்தப் பூமி - இந்தப் பூமியானது.

சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கி - சிவபெருமான் நாம் உய்யும்படி அடிமை கொள்ளுகின்ற இடமென்று உணர்ந்து,

திருப்பெருந்துறையுறைவாய் - திருப்பெருந்துறையில் அருள்பவனே!

திருமாலாம் அவன் - திருமாலாகிய அவன்.

விருப்பு எய்தவும் - விரும்ப‌வும்.

மலரவன் ஆசைப்படவும் - பிரமன் ஆசைப்படவும்

நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் -  உனது  முழுமையான, உண்மையான திருவருட்சத்தியும், நீயுமாக.

அவனியில் புகுந்து - பூமியில் எழுந்தருளி வந்து.

எமை ஆட்கொள்ள வல்லாய் - எங்களை ஆட்கொள்ள வல்லவனே!

ஆரமுதே ‍ -- அமுதம் போன்றவனே!

பள்ளி எழுந்தருளாயே - திருப்பள்ளி எழுந்தருள்வாயாக!

இப்பாடலில் சொல்லப்பட்டிருக்கும் விளக்கங்கள் குறித்து,.....

புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
  போக்குகின் றோம்அவ மேயிந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்===

'புவனி' என்பது, இங்கு 'தனு, கரண , புவன , போகங்கள்' என்பனவற்றில் வரும், 'புவனம்' என்பதாகக் கையாளப்படுகின்றது. தேவர்களும், மூவர்களும், உயர்நிலையை அடைந்த ஆன்மாக்களாக இருப்பினும், 'பராமுக்தர்கள்' என்னும் மரணத்தின் மீது முழு ஆதிக்கம் செலுத்தும் உயிர்களாக இருப்பினும் அவர்கள் விருப்பப்படி, பூவுலகில் வந்து பிறத்தல் இயலாது..இறைவனது விருப்பம் இருந்தால் மட்டுமே அவர்களால் பூவுலகு வருதல் இயலும்... திருவுளம் இரங்கும் காலத்தை எதிர்நோக்கியிருக்கும் அவர்கள், தம் காலம் வீணே கழிகிறது என்று எண்ணிக் கவலை கொள்கிறார்கள்..

இதிலிருந்து இன்னொன்றும் புலப்படுகின்றது.. தமது உயர் வாழ்வு குறித்து, அவர்கள் மகிழவில்லை.. பெருமான் திருவடிகள் சேரும் பேரானந்த வாழ்வையே அவர்களும் விரும்புகிறார்கள்.ஆகவே பூமியில் பிறத்தலை விரும்புகிறார்கள்..

ஆணவமலத்தால், 'நாம் இன்னும் பூமியில் பிறக்கவில்லையே..' என்கிறார்கள்.. நடப்பது யாவும் ஈசன் செயலென்னும் 'திரோதான சுத்தி' இவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பது கண்கூடு..

' சிவன் உய்யக் கொள்கின்ற ' என்று சிறப்பாக, 'சிவ' நாமம் சொல்லப்படுவதிலும் ஒரு பொருளுண்டு..

தமிழில் உயிரெழுத்துக்கள் 'சக்தி அக்ஷரங்கள்' என்றும், மெய்யெழுத்துக்கள் 'சிவ அக்ஷரங்கள்' என்றும் குறிக்கப்படும் மரபுண்டு..அதிலும் குறிப்பாக,  'இ', 'ஈ' இரண்டு அக்ஷரங்களும் சக்தி பீஜங்களாகவே குறிக்கப்படுகின்றன.

ஆக, நிர்க்குண பிரம்மமான எம்பெருமான் திருநாமத்தில், சக்தி பீஜம் சேரும் போது, அது 'சிவம்' என்னும் மங்களத்தைத் தரும் திருநாமமாகிறது.. பிரபஞ்சத் தோற்றத்திற்குக் காரணமாகிறது. சிவத்திலிருந்து 'இ'காரத்தைப் பிரிக்க, அது வேறு பொருள் தரும்.

இறைவனும் இறைவியுமாக வந்து, அருள் செய்ய வேண்டும் என்பதையே இங்கு குறிக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்..

திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
  படவும்== 

இங்கு 'திருப்பெருந்துறையுறைவாய்' என்று தம் உள்ளத்தில் கோயில் கொண்ட பெருமானைக் குறிப்பிடுகிறார்.

மிகப் பல பாடல்களில், 'திருமாலும் பிரமனும் காணா' என்கின்ற பயன்பாடு வருவதைப் பார்க்கலாம்.. இதன் பொருள் நுண்மையானது..

பிரமன் என்பது அறிவின் குறியீடு...அறிவின் சிகரமான நாமகள் அவர் நாவில் பொருந்தி இருக்கிறாள்.. பிரமனால் அறிய முடியாது என்பதை அறிவினால் , தர்க்க வாதங்களினால் அறிய முடியாது என்று கொள்ள வேண்டும்..'அறிவரியான்' என்று மாணிக்கவாசகப் பெருமான், முன்பு அருளியதை நினைவில் கொள்ளலாம்.

திருமால்== உலக நிலை பெறுதலுக்கு, காத்தல் தொழிலுக்கு அதிபதி.. உலகாயத வஸ்துக்கள் அவராலேயே நிலை பெறுகின்றன... ஆக, உலகியல் பொருட்களின் நுகர்ச்சியால் இறைவனை அடைய இயலாதென்பது பொருள்..

ஆயினும், சத்வ குண சம்பந்தம் இருப்பதால் , திருமால் விரும்புகிறார்.. பிரமனோ ஆசைப்படுகின்றார். இவ்விரு வார்த்தைகளுக்கும் இருக்கும் வேறுபாடு நாம் அறிந்ததே.. 

ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் என்னும் திருமூலர் வாக்கு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

'வேண்டத்தக்க தறிவோய் நீ' என்றில்லாமல், தன் பால் முதன்மை ஏற்றும் குற்றம்  ஆணவம் கலந்த அறிவுக்கு உண்டென்பது பெரியோர் கருத்து.

ஆகவே, மலரவன்  ஆசைப்படுகின்றான் என்றார்.

அலர்ந்த மெய்க்கருணை== அன்பர்கள் பால், முழுமையாக (மலர்ந்த), மெய்ப்பொருளான தன்னை அறிவிக்கும் கருணை கொள்ளுதலை விவரித்தார். 

நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்== என்று குறித்ததால், எம்பிரானின் கருணாசக்தியாகிய எம்பிராட்டியும் எம்பிரானும், இணைந்து அருள் செய்தலைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
  ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.==== 'புவனி' என்று முதலில் சொல்லி, புவனத்தைக் குறித்தவர், இப்போது, 'அவனி' என்கிறார்... அண்டத்தில் இருப்பது பிண்டத்திலும் என்பதற்கிணங்க.. தம்முள் புகுந்து, தம்மை ஆட்கொண்ட வித்தகத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

'என் உளமே புகுந்த அதனால்' என்று ஆளுடையப் பிள்ளை குறிப்பதையும் இங்கு பொருத்தலாம்.

எம்பெருமான் ஆட்கொண்டால் பிறவா பெருநிலை கிட்டும்.. 'ஆரமுது' என்று பிறவா பெருநிலை அளித்தலைக் குறிப்பிட்டார்..

தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்பதற்கிணங்க..இறைவனின் தொண்டர்களையே இறைவனாகப் பாவித்துத் தொண்டு செய்வோரையும் இறைவன் பெரிதுவந்து ஆட்கொண்டருளுகின்றான்.

பெருமிழலை என்ற ஊரில் வாழ்ந்து வந்த குறும்பர் என்னும் சிவபக்தர்   சுந்தரரைப்  பணிந்து போற்றி வந்தார். தமது யோக சக்தியால், சுந்தரர் திருவஞ்சைக் களத்திலிருந்து கைலாயம் செல்ல இருப்பதைத்  அறிந்து,  தியானத்தில் அமர்ந்து, சுந்தரருக்கு முன்பே   கயிலை போய்ச் சேர்ந்தார்.

சிறைநன் புனல்திரு நாவலூர்
ஆளி செழுங்கயிலைக்(கு)
இறைநன் கழல்நாளை எய்தும்
இவனருள் போற்றஇன்றே
பிறைநன் முடிய அடியடை
வேன்என்(று) உடல்பிரிந்தான்
பிறைநன் மலர்த்தார் மிழலைக்
குறும்பன் எனும்நம்பியே. (திருத்தொண்டர் திருவந்தாதி, நம்பியாண்டார் நம்பி).  

 திங்களூரில் பிறந்தவர் அப்பூதியடிகள். திருநாவுக்கரசரையே தன்  தெய்வமாகக் கொண்டு அவர் பேரிலேயே தண்ணீர்ப் பந்தல் முதலியவற்றை வைத்து நடத்தி வந்தார். அவரை வணங்கியே அப்பூதியபடிகள் நற்கதி பெற்றார்.

தனமா வதுதிரு நாவுக்(கு)
அரசின் சரணம்என்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத்(து)
ஆங்கவன் வண்தமிழ்க்கே
இனமாத் தனது பெயரிடப் 
பெற்றவன் எங்கள்பிரான்
அன்னமார் வயல்திங்கள் ஊரினில்
வேதியன் அப்பூதியே.(திருத்தொண்டர் திருவந்தாதி ,நம்பியாண்டார் நம்பி).

நம்முள் ஆன்ம ஸ்வரூபமாக இறைவன் உறைகிறான். ஆன்மா விழிப்புற்று, உண்மை நிலை அறிதலே 'திரோதான சுத்தி'.. அதனை விழிக்கச் செய்யும் பொருட்டுப் போற்றிப் பாடுதலே 'திருப்பள்ளியெழுச்சி'..

'திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கு உருகார்'. பொன்னார் மேனியன், மின்னார் செஞ்சடையோன் பதம் பாடிப் போற்றுவதும் அவனருளே!!... பெருங்கருணைப் பேராறான இறைவன் கருணை இடையறாது நம் மீது பொழியப் பிரார்த்திக்கிறேன்!!

நினைத்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே 
          நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு 
     நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான 
          நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
     வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர் 
          மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
     புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் 
          பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே. வள்ளலார் பெருமான்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

அன்பர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன் 
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

THIRUPPALLIYEZHUCHI..SONG # 9...திருப்பள்ளியெழுச்சி...பாடல் # 9

Image result for lord bala siva images


பாடல் 9

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

  விழுப்பொரு ளேயுன் தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
  வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
  கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
  எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.


விண்ணகத் தேவரும் - விண்ணில் வாழும் தேவர்களும்

நண்ணவும் மாட்டா - அணுகவும் முடியாத

விழுப்பொருளே - மேலான பொருளே!

உன்தொழுப்பு அடியோங்கள் – உனக்குச் செய்யும் தொண்டையே பெரிதாக நினைக்கின்ற  அடியார்களாகிய எங்களை.  

மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே - மண்ணுலகில்  வந்து வாழச் செய்தவனே.

வண்திருப்பெருந்துறையாய் ‍= வளம் பொருந்திய திருப்பெருந்துறையில்  இருப்பவனே!

வழியடியோம் - பரம்பரை அடியாராகிய எங்களுடைய.

கண்ணகத்தே நின்று களிதரு தேனே - கண்ணில் நின்று களிப்பைத் தருகின்ற தேன் போன்றவனே.

கடல்அமுதே - பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்றவனே.

கரும்பே - கரும்பின் இன்சுவை போன்றவனே!

விரும்புஅடியார் எண்ணகத்தாய் - அன்பு செய்கின்ற அடியவரது எண்ணத்தில் நிறைந்து இருப்பவனே.

உலகுக்கு உயிர்ஆனாய் - உலகமனைத்துக்கும் உயிரானவனே.

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே -  எம்பெருமானே பள்ளி எழுந்தருள்வாயாக!

விளக்கம்:

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா== இதை சற்று விரிவாகப் பார்க்கலாம். 
விண்ணுலகில் வாழும் அமரர்களும் அணுகவும் இயலாதவன் பரமன்.. 

விண்ணவர் என்று எப்போதும் அமரரை உயர்வுபடுத்தி, அவராலும் அறிய முடியாதவர் இறைவன் என்ப‌தற்குக் காரணம் உண்டு. மண்ணுலகத்தோர் போலன்றி ,இறைவனின் சகளத் திருமேனி(வடிவுடன் கூடிய திருமேனி)யைக் காணும் பேறு பெற்றவர்கள் அமரர்கள்..அவர்களுக்காக எம்பிரான் எண்ணற்ற லீலைகள் புரிந்து, அவர்களைக் காத்தருளியிருக்கிறான்..ஆயினும் அவர்களால் பெருமானை அடைவது என்பதல்ல....அணுகுதலும் இயலாது...

இறைவன், தம் திருவுளம் உகந்தாலே அவரை அடைதல் இயலும்..

அகளமாய் யாரும் அறிவு அரிது அப்பொருள்
சகளமாய் வந்தது என்று உந்தீபற
தானாகத் தந்ததுஎன்று உந்தீபற(திரு உந்தியார்).

///மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே ====இறைத்தொண்டை விடாது செய்து அப்பரமனின் திருவடி நிழலை அடைவதற்கு இம்மண்ணுலகினும் பொருத்தமான இடமில்லை என்பதே காரணம்./////

முற்றிலும் உண்மை..ஆன்மீக உயர் நிலையை அடைந்த உயிர்களே தேவர்கள். அமுதம் உண்டதால், பிரளய காலத்தில் அன்றி அவர்களுக்கு அழிவு இல்லை.. ஆயினும அவர்களால் முக்திப் பேறு அடைய இயலாது.. ஆணவ மலம் அவர்களிடமிருந்து முற்றிலும் நீங்காததே அதற்குக் காரணம்.

சித்தாந்த அடிப்படையில், இறைவன், கேவல(தனிமை) நிலையில், ஆணவத்தால் மறைப்புண்ட உயிர்களுக்கு, அது விளக்கம் பெறும் பொருட்டு, மாயையைத் தொழிற்படுத்தி, தனு, கரண புவன போகங்களை உண்டாக்குகிறான்..

தனு= உடல்,

கரணம்=விழி முதலான புறக்கருவிகளும், மனம் முதலான உட்கருவிகளும்.

புவனம்= உலகம்

போகம்=நுகர்தலுக்கு உரிய பொருட்கள்,

மாயையின் காரியங்களாகிய இவற்றின் துணையினால் உயிர்கள் ஆணவமல மறைப்புச் சிறிது நீங்கப் பெற்று, அதற்கேற்பச் சிறிதளவு அறிவும் செயலும் கொண்டு,  உலக வாழ்க்கையை மேற்கொள்ளும்.

கட்டும் உறுப்பும் கரணமும் கொண்டு உள்ளம் 
இட்டதொரு பேர் அழைக்க என் என்றாங்கு-- ஒட்டி 
அவன் உளம் ஆகில்லான் உளம் அவன் ஆ மாட்டாது 
அவன் உளமாய் அல்லனுமாம் அங்கு. (சிவஞான போதம்)

இறையருள் சித்திக்குமாயின்,உயிர்களுக்கு, 'நாம் ஏன் பிறந்தோம், இவ்வாழ்வு ஏன் வந்தது?' என்கிற கேள்விகள் கேட்கும் ஞானம் உண்டாகும். மண்ணுலகில், நமக்கு முன்பாகத் தோன்றி, நமக்கு நல்வழி காட்டியருளிய மஹான்கள், பெரியோர்கள் ஆகியோரின் உபதேச மொழிகளையும் வழிகாட்டுதலையும் கொண்டு, உயிர்கள், நன்னெறியில் சென்று, இறையருளை வேண்டி நிற்கும் போது, பரமன் கருணையினால் திரோதான சுத்தி கிட்டும்..

இது வரை போகாத ஊருக்குப் போகும் போது வழிகாட்டும் பலகைகள் அல்லது நபர்கள் தேவை.. புரியாத வழியில், யாரும் துணையின்றிப் போனால் போகக் கூடாத ஊருக்குத் தான் போவோம்.. நமக்கு முன்பாகச் சென்ற பெரியோர்கள் வழியில், அவர்கள் காட்டிய நெறியில் செல்லும் போது பயணம் சுலபமாகும்.. பாதையும் சுகமாகும்..பெற்ற தாயைப் பெரிதும் நம்புகிறது குழந்தை... இந்த உணவை ஏன் கொடுத்தாய்? என்றெல்லாம் கேள்விகள் கேட்பதில்லை.. தாய் தன் நலம் நாடுபவள் என்று அதற்குப் புரிகிறது.. கொடுத்ததை உண்கிறது. மஹான்களின் உபதேச மொழிகளும் அவ்வாறே.. அவை மன்னுயிர்களின் நலம் வேண்டித் தரப்படுவது.. 

இவ்விதம் மண்ணுலக வாழ்வு, மும்மலங்கள் நீங்குவதற்குக் காரணமாதலின் விண்னவர்களும் மண்ணுலக வாழ்வை விரும்புகின்றனர்

வண்திருப்பெருந்துறையாய் ==உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குத் துணையாக, பெரும் துறையாக இருப்பவனே!..

வழியடியோம்  
 கண்ணகத்தே நின்று களிதரு தேனே ‍ ====அடியார்கள் பார்க்குமொரு இடந்தோறும் நீக்கமற நிறைந்து பரமனே திருக்காட்சி தருகின்றான்.. எங்கெங்கும் பரமன் திருவுருவே காண்கின்றனர் அடியார். ஆன்ம போதக் காட்சி இது.. எல்லாப் பொருட்களிலும், பரமனின் அம்சமே தென்படுகின்றது..

கண்ணகத்தே என்பதை== இதனை அகக் கண் என்றும் மூன்றாவது கண் என்று யோக மார்க்கத்தில் சொல்லுகிற 'ஆஜ்ஞை' என்றும் பொருள் கொள்ளலாம்.

இதை,

ஒண்ணா நயனத்திலுற்ற வொளி தன்னை 
கண்ணாரப் பார்த்து கலந்தங் கிருந்திடில் 
விண்ணாறு வந்து வெளிகண்டிட வோடிப் 
பண்ணாம நின்றது பார்க்கலுமாமே.”(திருமூலர்)

 சிந்தனை நின்றனக்காக்கி நாயினேன்றன் கண்ணினைநின் றிருப்பாதப் 

போதுக்காக்கி 
வந்தனையு மமலர்க்கே யாக்கிவாக்குள்(ஆதத்துடைய - சூரத்துள்) மணி வார்த்தைக் காக்கியும் புலன்களார 
வந்தனை யாடகொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையேயுன்னைத் 
தந்தனை செந்தாமரைக் காடனையமேனித் தனிச் சுடரே யிரண்டுமிலிதனிய னேற்க்கே.” 

[மணிவாசகப்பெருமான்] மொழிகளிலிருந்து அறியலாம்.

விரும்புஅடியார் எண்ணகத்தாய் = இறைவன், தன்னை எண்ணத்தில் நிறைக்கும் அடியாருக்கு அருள்பவன்.. இங்கு வாயிலார் நாயனாரின் புராணத்தைச் சிந்திக்கலாம்...

புறப்பூசை அங்கங்களான கோயில், பஞ்சசுத்தி, தூபம், தீபம், அபிஷேகம், நைவேத்தியம் ஆகியவற்றை, இவை  அனைத்திற்கும் சமதையான ஒவ்வோர் அகச்சூழ்நிலையால் பாவனா ரூபமாக அமைத்துக் கொண்டு சித்தத்தைச் சிவலிங்கமாகக் கண்டு பூசிக்கும் அகப்பூசை முறையைக் கைக்கொண்டு, சிவனடி சேர்ந்து இன்புற்றார் வாயிலார் நாயனார்..

மறவாமையான் அமைத்த மனக்கோயிலுள் இருத்தி   
உறவாதிதனை உணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றி   
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி  
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்(கறைக் கண்டன் சருக்கம், பெரிய புராணம்)

உலகுக்கு உயிர்ஆனாய் ‍ தனு, கரண புவன போகங்களைப் படைத்து, ஐந்தொழில்களைப் புரிந்து, பிரபஞ்ச இயக்கத்தை ஆனந்தத் திருக்கூத்தாக நடத்தும் பரமனன்றி ஓரணுவும் அசையாது.

தில்லையில் கூத்தாடும் சிவபெருமன் பதம் பணிவோம்!!

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

THIRUPPALLIYEZHUCHI.. SONG..# 8...திருப்பள்ளியெழுச்சி....பாடல் # ..8

Image result for lord siva images
பாடல்  #  8

முந்திய முதல்நடு இறுதியு மானாய் 
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்  
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்  
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்  
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.


முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் ‍ ===அனைத்திற்கும் முற்பட்ட காலத்தில், அனைத்துப் பொருட்களின் முதலும் நடுவும் முடிவும் ஆனாய்!


மூவரும் அறிகிலர் - மும்மூர்த்திகளும் உன்னை அறியமாட்டார்கள்.

யாவர்மற்று அறிவார் - வேறு யாவர் அறியக்கூடியவர்?

பந்தணை விரலியும் நீயும் - பந்தினை ஏந்திய விரல்களையுடைய உமையம்மையும் நீயுமாக.

நின்அடியார் பழங்குடில்தொறும் எழுந்தருளிய பரனே - உன்னுடைய அடியார்களுடைய பழமையான‌ வீடுகள் தோறும் எழுந்தருளிய பரமனே!

செந்தழல் புரைதிரு மேனியும் காட்டி - சிவந்த நெருப்பை ஒத்த நினது திருவடிவத்தையுங்காட்டி.

திருப்பெருந்துறையுறை கோயிலும்காட்டி- திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற திருக்கோயிலையும் காட்டி.

அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய் ‍===அருளாளனாதலையுங்காட்டி வந்து ஆட்கொண்டவனே!

ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே ‍ ==அமுதைப் போன்றவனே!..ப‌ள்ளி  எழுந்தருள்வாயாக!

விளக்கம்:

முந்திய முதல்நடு இறுதியு மானாய்
  மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்

முந்திய முதல் என்றது முத்தொழில்களுள் முற்பட்டதாகிய படைத்தலைக் குறித்தது. ந‌டு இறுதி' என்றது  நிலைபேறு(காத்தல்), இறுதி(அழித்தல்) ஆகியவற்றைக் குறிக்கின்றது

மாயை,சுத்த மாயை அசுத்த மாயை மிச்சிரமாயை என  மூவகைப்படும். சுத்தமாயையைத் தொழில் படுத்தும்போது சிவபிரான் தானே அயன் அரி அரன் என மூன்று நிலைகளையும் அடைந்து நிற்பார்.. இதுவே சம்பு பட்சம்..

அசுத்த மாயையின் கீழ் வரும் பிரகிருதி மாயையைத் தொழிற்படுத்தும் போது, பக்குவப்பட்டு, உயர்நிலையை அடைந்த உயிர்களாகிய, அயன், அரி, அரன் என்பவர்கள், எம்பிரானின் ஆணைப்படி, படைத்தல்,காத்தல் அழித்தல் ஆகியவற்றைச் செய்வர்.. இது அணு பட்சம்..

சம்பு பட்சத்தில் முத்தொழில்கள் நடைபெறும் போது, பரமனே முத்தொழிலையும் செய்கிறான்...சம்=இன்பம், பு= உண்டாக்குபவன்.. உலகுக்கு இன்பம் உண்டாகும் பொருட்டு முத்தொழிலையும் பரமன் செய்வதால் இது சம்பு பட்சம்.

ஆனால் அணு பட்சத்தில் அவரது ஆணைப்படி, மும்மூர்த்திகளால் இம்மூன்றும் நடைபெறுகின்றன. பரமன் ஆணைப்படி முத்தொழில்களையும் செய்யும் இவர்களை, மாணிக்கவாசகர், 'சேட்டைத் தேவர்' என்று குறிப்பிடுகிறார்.

ஆட்டுத் தேவர்தம் விதியொழித் தன்பால்
    ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன்
நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே
    நாத னேஉனைப் பிரிவுறா அருளைக்
காட்டித் தேவநின் கழலிணை காட்டிக்
    காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய்
சேட்டைத் தேவர்தந் தேவர் பிரானே
    திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.  (செத்திலாப் பத்து)

இவர்கள் பிறப்பிறப்பிற்கு உட்படுவர் என்பது விதி..

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறு கோடி நாராயண ரங்ஙனே;
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்;
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே” (அப்பர்)

ஆக, இவ்விதம் அணுபட்சத்தில் தொழிற்படும் மூவரே.. ஆணவ மலத்திற்கும் உட்பட்டு, இறைவனை அறியா நிலை எய்துவர்.. 

இங்கு 'மூவரும் அறியார்...' என்று குறிப்பது, சம்பு பட்சத்தில் தொழிற்படுபவரை அல்ல.. அணுபட்சத்தில் தொழிற்படும் மூவரையே..

பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
  பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே///

'பந்தணை விரலி' யின் தத்துவ விளக்கம் ஆழமானது.. உமையவள் திருக்கரத்திருக்கும் பந்து,   உயிர்களே!!.  சைவ சித்தாந்தப்படி, இறைவன் எப்படியோ, அப்படி உயிர்களும் அநாதியானவை.. அவற்றை யாரும் உண்டாக்கவில்லை..ஆனால் அவை அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையன.. இறைவி தம் திருக்கரத்தில், அவற்றைப் பந்தினைப் போல் தாங்கியருளுகிறாள்..இறைவனின் அருள், இறைவியின் மூலமாகவே உயிர்களுக்குக் கிடைக்கிறது.. அந்த அருளை இறைவன் நம் மீது பொழியும் பொருட்டு, உயிர்களை தம் திருக்கரத்தில் ஏந்தி அருளுகிறாள் உமையம்மை..

சீர்காழி குளக்கரையில் 'அழுது அருளிய' குழந்தைக்கு, இறைவன் அருளிய ஞானத்தை, உமையம்மை பாலாக ஊட்டி, ஆளுடைய பிள்ளையாய், ஞானசம்பந்தப் பெருமானாய் ஆக்கியருளிய பான்மை இதற்குச் சான்று.

மேலும் 'பழங்குடில்' என்பது, பழமையான குடிலாகிய உயிர்களோடு உறைதலைச் சுட்டுவதாம்...

அரக்கொடு சேர்த்தி அணைத்தஅக் கற்போல் 
உருக்கி உடங்கியைந்து நின்று - பிரிப்பின்றித் 
தானே உலகாந் தமியேன் உளம்புகுதல் 
யானே உலகென்பன் இன்று.    (சிவஞான போதம்)

இறைவன், ஆதியில் இருந்த நிலை மீண்டும் வருதற்கும், திரோதான சுத்தி கிடைத்தற் பொருட்டும், தம் ஆன்மாவாகிய பழங்குடிலில் இறைவனை எழுந்தருள வேண்டுகிறார்..

முன்னைப் பழம்பொருட்கும் முன்னவனான இறைவனைப் போல், உயிர்களும் அநாதி என்பதால், உயிர்கள் பழங்குடில் ஆயிற்று இங்கு.

செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
  திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி 
 அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய் - இவ்வரிகளில் இறைவன் தன்னைத் திருப்பெருந்துறையில் ஆட்கொண்டருளிய நிகழ்வினைக் குறித்துள்ளார் வாதவூரடிகள். (இறைவன் குருந்த மரத்தடியில் குருமூர்த்தியாக – அந்தணர் வடிவில் வந்து வாதவூரருக்கு ஞானோபதேசம் செய்தான்  

தம்முள் சோதி வடிவாக, அருவுருத் திருமேனியில் இறைவன் அருட்காட்சி தந்ததை, திருவெம்பாவையில் பல இடங்களில் குறித்திருக்கிறார்.. இங்கும் அதையே, 'செந்தழல் புரைதிரு மேனி' என்று குறிக்கிறார். அருவுருவத் திருமேனி, சதாசிவத் திருமேனி என்றே குறிக்கப்படுகின்றது.. உயிர்களின் பாவங்களை நீக்கி நற்பலன்களைத் தருவது சதாசிவமே!!.. ஆலயங்களின் கருவறையில் காணப்படும் இலிங்கத் திருமேனியும் சதாசிவ மூர்த்தம் என்றும் மற்ற திருவடிவங்கள் மகேசுவர மூர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றன..

ஆதலின், ஆன்மாக்களின் குற்றங்களை நீக்கும் தன்மையதான அருவுருவத் திருமேனியும், சிவயோகத்தை அருளிய குரு நாதன் உருவில், தம்மை திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட பான்மையையும் சொல்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்..

ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே ‍ 

சிவ நிந்தனை கேட்டதன் காரணமாக, படாத பாடு பட்ட தேவர்களுக்கும், அமுதமாய் நின்று, அவர்களை மன்னித்து, குமரக் கடவுளை அவர்தம் துயர் தீர்க்க அருளிய காருண்ய மூர்த்தி எம்பிரான்.. அவரை ஆரமுதென்று அழைத்தலே சிறப்பன்றோ!!!..

அரனடி நினைத்தார் அவனருள் பெற்றாரே!!!

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

சனி, 11 ஜனவரி, 2014

THIRUPPALLIYEZHUCHI... SONG..# 7..திருப்பள்ளியெழுச்சி...பாடல் #.. 7

பாடல் 7

அதுபழச் சுவையென அமுதென அறிதற்  
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே 
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச  
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்
 எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

அது பழச்சுவை என – பரம்பொருள் கனியின் சுவை போன்றது எனவும்.

அமுது என - அமுதத்தின் இன் சுவையை ஒத்தது எனவும்.

அறிதற்கு அரிதுஎன - அறிவதற்கு அரிய‌து எனவும்.

எளிது என ‍ இல்லை..அறிவதற்கு எளிமையானது எனவும் 

அமரரும் அறியார் ‍ தமக்குள் வாதம் செய்து கொண்டு, தேவரும் உண்மையை அறியாத நிலையில் இருப்பர்.

இது அவன் திருவுரு - இதுவே அப்பரமனது திருவுரு.

இவன் அவன் எனவே ‍  இவனே நம் பெருமான் என்று நாங்கள் தெளிவாகச் சொல்லும்படியாக‌.

எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும் – இங்கு எழுந்தருளிவந்து எங்களை ஆட்கொண்டருளுகின்ற.

மதுவளர் பொழில் - தேன் நிரம்பி வழியும் மலர்கள் நிறைந்துள்ள‌ சோலைகள் சூழ்ந்த.

திருவுத்தரகோச மங்கை உள்ளாய் - திருவுத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருப்பவனே!

திருப்பெருந்துறை மன்னா – திருப்பெருந்துறைக்கரசனே!

எதுஎமைப் பணிகொளும் ஆறு - எங்களை நீ பணி கொண்டு ஆட்கொள்ளும் விதம் யாது?.

அது கேட்போம் - அதனைக் கேட்டு அதன்படி நடப்போம்.

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே - எமது பெருமானே பள்ளி எழுந்தருள்வாயாக!

விளக்கம்:

அதுபழச் சுவையென அமுதென அறிதற்
  கரிதென எளிதென அமரரும் அறியார்=== பழம் என்பது பொதுவாக வாழைப்பழத்தையே குறிக்கும்..கனியக் கனிய சுவை மிகும் பழம் வாழை..கனிந்து குழைந்து சுவை மிகும் பழம் போல்,  பரிபக்குவ நிலை கூடக் கூட, உள்ளம் முதிர்ந்து குழைகிறது.. பரிபக்குவ நிலை பெற்ற உள்ளத்தின் நிலை இதுவானால், அதனைத் தருகின்ற இறைவனும் இது போலத் தானோ என்று தோன்றுகிறது ஒரு சமயம்..

குதுகுதுப்பு இன்றி நின்று, என் குறிப்பே செய்து, நின் குறிப்பில்
விதுவிதுப்பேனை விடுதி கண்டாய்? விரை ஆர்ந்து, இனிய
மது மதுப் போன்று, என்னை வாழைப் பழத்தின் மனம் கனிவித்து,
எதிர்வது எப்போது? பயில்வி, கயிலைப் பரம்பரனே!(நீத்தல் விண்ணப்பம், (மாணிக்கவாசகப் பெருமான்.))

மாழை மாமணிப் பொதுநடம் 
          புரிகின்ற வள்ளலே அளிகின்ற 
     வாழை வான்பழச் சுவைஎனப் 
          பத்தர்தம் மனத்துளே தித்திப்போய் 
     ஏழை நாயினேன் விண்ணப்பம் 
          திருச்செவிக் கேற்றருள் செயல்வேண்டும் 
     கோழை மானிடப் பிறப்பிதில் 
          உன்னருட் குருஉருக் கொளும்ஆறே. (திருமுன் விண்ணப்பம், வள்ளலார் பெருமான்)

ஆயினும் அவ்வாறு, பழச்சுவையை ஒத்தவனே இறைவன் என்று கூற இயலாது.. அதனையும் மீறிய அமுதத்தின் சுவையாக இருக்கக்கூடுமல்லவா..

பழச்சுவையாவது உண்ண உண்ணத் தெவிட்டும் அமுது என்பது உண்ண உண்ணத் தெவிட்டாதது..
 உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும் 
          ஒருவனே சிற்சபை உடையாய்  என்று வள்ளலார் பெருமானும் , ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே என  சிவபுராணத்தில் மணிவாசகப் பெருமானும் பாடிப் பரவுகிறார்..

இறையனுபவம் என்பது எப்போதும் முழுமையாக உணரப்பட்டதாகச் சொல்ல இயலாது..அது அவனருளால் அமுதுண்ட அமரர்களே ஆனாலும் சரி...ஆம்!.. நஞ்சுண்ட நீலகண்டன் அருளால் அன்றோ நலமாக அமரர்கள் அமுதம் பெற்றனர். ஆலகால விஷம் உண்டு அமுதத்தை அளித்தது போல், அஞ்ஞானம் நீங்கி ஞானம் பெறுதல் வேண்டும் அவனருளால்.

அறிதற்
  கரிதென எளிதென அமரரும் அறியார்=== நாம் அவனை அடைவதற்குண்டான வழி எது?.. அது அரிதா அல்லது எளிமையானதா என ஐயனால் காக்கப்பட்ட அமரரும் அறியார்.. எவ்விதம் எம்பிரானை அணுக, அடைய முடியும் என்பதை யாரும் அறியவியலாது.

இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
  எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்=== இம்மாதிரி, அழுத்தமாக, இது இறைவன்,இது அவன் திருவுருவம் என அறியும் நிலை எப்போது வாய்க்கும் என்றால், சிவசாயுஜ்யம் என்னும் நிலையிலேயே வாய்க்கும்.. முற்றாக இறைவனோடு இணையும் போது, நாம் வேறு அவன் வேறு எனும் நிலை அழியும் போது, திரோதானம் என்னும் மறைப்பு விலகும் போது..இறைவன் உள்ளத்துள்   தோன்றி நிலை பெறும் பொழுது வாய்க்கும்..

அந்நிலை வேண்டி, இறைவனை எழுந்தருள வேண்டுகிறார். இங்கு என்பது அன்பர் தம் உள்ளத்தைக் குறிக்கும்.. 'இறைவனோ தொண்டர் தம் உள்ளத்தொடுக்கம்' என்பது தமிழ் மூதாட்டியின் வாக்கல்லவா..

திருவுரு பற்றி மேலும் ஒரு விளக்கம்.

இறைவன் தம் சக்தியினால் மூவகை உருக் கொள்கிறான். அவை, உருவம், அருவம், அருவுருவம் என்பன அவை..

உருவம் கண்ணுக்குப் புலப்படுவது.. ஆயினும், அது ஞானியருக்கும், யோகியருக்கும் மட்டுமே புலப்படும்..அடியாருக்கு அருள்புரிய இறைவன் திருவுளங் கொள்ளும் போது, உருவத் திருமேனியை ஏற்பான்.

அருவம்== இது கண்ணுக்குப் புலப்படாதது.. ஆயினும் ஒரு வரம்புக்கு உட்பட்டது..

அருவுருவம்..இது ஒளிப்பிழம்பாய் வரை கடந்து தோற்றமாவது.. இதில் இறைவனுக்கு கரங்கள், விழிகள் முதலிய உறுப்புகள் தோற்றமாவதில்லை.. இலிங்கத் திருமேனியும் அருவுருவத் திருமேனியே..

அடியார்களுக்கு அருள்புரியும் பொருட்டு, திருவுருக் கொண்டு எழுந்தருள வேண்டுகிறார் மாணிக்கவாசகப் பெருமான்.

மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
  மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா=== மது என்பது தேனைக் குறிக்கும்...தேன் நிரம்பிய மலர்கள் நிறைந்த பொழில் என்பது விரிவு..தேனிருக்கும் மலர்கள் நிறைந்த பொழில் போல, ஞானத் தேன் நிறைந்த பதமலர்கள் கொண்ட இறைவன் என்பது உட்பொருள்

இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும் 
          இடர்களும் துன்பமும் எல்லாம் 
     பொதுவளர் பொருளே பிறர்பொருட் டல்லால் 
          புலையனேன் பொருட்டல இதுநின் 
     மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய 
          வகுத்தனன் அடியனேன் தனக்கே 
     எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும் 
          இடரும்மற் றிலைஇலை எந்தாய். (வள்ளலார் பெருமான்)

இறைவன் அமர்ந்தருளும் பல திருத்தலங்கள் இருக்க, உத்திரகோச மங்கை இங்கு சொல்லப்பட்டது பொருளுடையது..

உத்திரம்=உபதேசம், கோசம்=ரகசியம். மங்கை என்பது உமாதேவியார். அம்மைக்கு வேதாகம ரகசியங்களை ஐயன் உபதேசித்தருளிய தலம் இது..

சமய தீக்ஷை, நயன தீக்ஷைக்கடுத்து, உபதேசமருளும் மந்திர தீக்ஷை இங்கு குறிப்பால் உணர்த்தப்படுகின்றது..

மேலும் எம்பிரான் திருவுருக் கொண்டு காட்சி கொடுத்தருளல் வேண்டுமென்பதே இப்பாடலில் முதல் நிலைப் பொருள்.. அப்படிப் பார்க்கும் போது, உத்திரகோச மங்கையில், அறுபதினாயிரம் முனிவர்களுக்கும் யோகிகளுக்கும் இறைவன் வேதாகமங்களை உபதேசித்து, தன் ஞான வடிவும் காட்டியருளினான் என்கிறது புராணம்..

உத்திர கோச மங்கையு ளிருந்து
வித்தக வேடங் காட்டிய இயல்பும்(மாணிக்கவாசகப் பெருமான்)

என்பது இதனைப் புலப்படுத்தும்..

அவ்வேலை அன்புடையார் அறுபதினாயிரவர்க்கும் அளித்துப் பாச
வெவ்வேலை கடப்பித்து வீடாத பரானந்த வீடு நல்கி
மைவேலை அனைய அங்கயற்கண் நங்கையடு மதுரை சார்ந்தான்
இவ்வேலை நிலம்புரக்க முடிகவித்துப் பாண்டியன் என்றிருந்த மூர்த்தி 

(திருவிளையாடற்புராணம், வலைவீசிய படலம்)

திருப்பெருந்துறைக் கோயிலில் ஆவுடையார் உண்டு. இலிங்கத் திருமேனி இல்லை.. அவ்விதம் பெருந்துறையில் உறையும் இறைவனானவன், உத்திரகோசமங்கையில் நிகழ்ந்ததைப் போல, ஞான உருவம் கொண்டு அருளல் வேண்டும் என்று வேண்டுகிறார்.

 இறைவனே,நீ எங்களைப் பணி கொள்ளும் வழி எது?'...அதை அறிவித்தருள்க,அதன்படி நடப்போம்' என்று விண்ணப்பம் செய்தார்.

'இறைவா, எமக்கு வேண்டுதல் வேண்டாமை இல்லை.. எது உன் திருவுளமோ அதன்படி' என்னும் ஆன்மானுபூதி வாய்க்கப் பெற்ற மனநிலை இங்கு சொல்லப்படுகிறது... எல்லாம் இறைவன் செயல் என்று முற்றாக உணர்ந்த ஞானியர் நிலை அது...

தமக்கென்று எந்த விருப்பமும் இல்லை.. இறைவனைச் சரணடைந்தாயிற்று....அவனே திருவுளங் கொண்டு, ஆண்டருளுதல் வேண்டும்.. அவன் விரும்பும் விதத்தில், சொல்லும் முறையில்  நடத்தல் வேண்டுமெனும் சரணாகதித் தத்துவமே இங்கு சொல்லப்படுவது என்று தோன்றுகிறது

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

THIRUPPALLIYEZHUCHI...SONG # 6....திருப்பள்ளியெழுச்சி...பாடல் #.. 6


பாடல் 6

பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
  பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
  வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்

  திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
  எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

பப்பற வீட்டிருந்து உணரும்நின்அடியார் - மனவிரிவு ஒடுங்கி, பற்றற்ற நிலையில் உன்னை உணருகின்ற நின் அன்பர்கள்.
 
பந்தனை வந்தறுத்தார் ‍==  பிறவித்தளையை அறுத்தவர்.
 
அவர் பலரும் - அவர்கள் அனைவரும்.
 
மைப்புறு கண்ணியர் - மை பொருந்திய கண்களையுடைய மாதர்களும்.
 
மானுடத்து இயல்பின் வணங்குகின்றார் - மனித இயல்பின் காரணமாக‌ உன்னை வணங்கி நிற்கின்றார்கள்.
 
அணங்கின் மணவாளா - உமையம்மைக்கு மணவாளனே!
 
செப்புறு கமலங்கள் மலரும் -  கிண்ணங்கள் போன்ற தாமரை மலர்கள் விரிந்து மலரும்.
 
தண்வயல் சூழ் - குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த.
 
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே - திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபிரானே!
 
இப்பிறப்பறுத்து - இந்தப் பிறவிப் பெருங்கடல் நீக்கி.
 
எமை ஆண்டருள் புரியும் - எங்களை ஆட்கொண்டு அருளும்
 
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே - எம்பெருமானே பள்ளி எழுந்தருள்வாயாக!

விளக்கம்:

முதல் பாடலை வைத்துப் பார்க்கும் பொழுது, 

வினையால் அசத்து விளைதலான் ஞானம்
வினைதீரின் அன்றி விளையா வினைதீர
ஞானத்தை நாடித் தொழவே அதுநிகழும்
ஆனத்தால் அன்பிற் றொழு.(சிவஞான போதம்)

என்பதற்கிணங்க.. அன்பின் உருவான சிவத்தைத் துதித்து,  முற்றாக இருவினை ஒப்பு நிகழ்ந்து, சத்தி நிபாதத்துக்கு காத்திருக்கும் உயிர்களின் நிலையைக் குறிப்பதாகக் கொள்ளலாம்..

அந்த நிலையில்.. மனித மனதின் குறுகிய பரப்பு நீங்கி,  எல்லையற்ற பரவெளியில் நிறைந்தருளும் இறை தத்துவத்தை அறிகின்றனர் அடியார்..பரப்பு அற்ற,எல்லையில்லா பிரபஞ்ச வெளியாகிய வீட்டிருந்து இறை தத்துவத்தை உணரும்(இது மூன்று காலத்திலும் பொருந்துவதாகக் கையாளப்படுகின்றது) அடியார் எனவும் பொருள் கொள்ளலாம்.

பற்று முற்றாக ஒடுங்கியவராதலின் பந்தனை... அதாவது கர்மவினைக் கட்டுக்கள் அறுபட்டு நின்றார்.

 மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
  வணங்குகின் றார்அணங் கின்மண வாளா 

மைப்புறு கண்ணியர் என்பது ஒரு பரிபாஷை.. கண்களுக்கு அஞ்சனம் தீட்டுவது என்பது 'நயன தீக்ஷை' என்னும் பொருளாகக் கொள்ளப்படுகின்றது...  தக்க நிலையில் இருக்கும் உயிர்களுக்கு, எம்பெருமான் தம் திருவிழி நோக்கால் அருள் செய்யும் பான்மை சுட்டப்படுகின்றது..

திங்கள்சேர் சடையார் தம்மைச்  
   சென்றவர் காணா முன்னே 
அங்கணர் கருணை கூர்ந்த  
   அருள்திரு நோக்க மெய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச்  
   சார்புவிட் டகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல்  
   பொருவில்அன் புருவம் ஆனார்.(பெரிய புராணம், கண்ணப்ப நாயனார் புராணம்)

அருமந்த தேவர் அயன்திருமாற் கரியசிவம்
உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக்
கருவெந்து வீழக் கடைக்கணித்தென் உளம்புகுந்த
திருவந்த வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. (மாணிக்கவாசகப் பெருமான்)

இவ்வாறு அருள் செய்யும் போது, அவர்களின் பக்குவ நிலை மேம்படுத்தப் படுகின்றது.. உயர் ஆன்மீக நிலைக்கு அவர்கள் தகுதி உடையவராகிறார்கள்..

 அணங் கின்மண வாளா ...மாதொரு பாகனைக் குறிப்பதே இது . இருவரும்சேர்ந்து உயிர்கட்கு அருள்பாலித்தாலே ஞானம் கிட்டும்.

 செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் == இங்கு தாமரை, இறைஞானத்தையும், குளிர்ச்சி பொருந்திய வயல், ஞானமாகிய தாமரை மலர்ந்த உள்ளத்துடன் கூடிய‌ ஞானியரின் குளிர்ந்த சுபாவத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம்..
  
 திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
  எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 

மானிடப் பிறவி என்பது ஒரு நிலை. புல்,பூண்டு என்பதான பல பிறவிகளிலிருந்து இந்நிலைக்கு வந்திருக்கிறோம்.. இது கீழ் நோக்கி மீண்டும் போகலாகாது.. மனிதன், தெய்வ நிலைக்கு உயருதல் வேண்டும்... அதன் காரணமாகவே, 'மானிடப் பிறவியை நீக்கி, நின்னருள் கூட்டுக' என்றார். இந்தப் பிறவி மானிடப் பிறவியானது.. இனி வரும் பிறவி, இப்போது செய்யும் கர்மவினைகளால் என்னாக்குமோ என்ற பதைப்பு ஒவ்வொரு உயிருக்கும் இயல்பில் உண்டு..

மாயையின் காரணமாக, அந்தந்தப் பிறவியில் அதுவே சுகம் என்று எண்ணி வாழுமாறு உளப்பாங்கு அமைவது இயற்கை.. மானிடப் பிறவியே, ஆறாம் அறிவோடு, பிறவியின் காரண காரியங்களை எண்ணி செயலாற்றும் வாய்ப்புப் பெறுகிறது.. ஆதலால்,இந்தப் பிறவி வீண் போகாது, எம்மை ஆண்டு கொண்டு உம் நிலையில் எம்மையும் இணைப்பாய் என்று வேண்டுகோள் வைத்தார்.

பொன்னார் மேனியன் பொற்பாதம் தனைப் பணிவோம்!


மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.