நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

KOLANGAL ..PART 2...கோலங்கள்..... பாகம் 2.


இதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்






பண்டிகைக் காலங்களில் போட வேண்டிய கோலங்கள்:

வெள்ளிக் கிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும் காவி இட்டு, கோலம் போட வேண்டும்.மாக்கோலம் போடுவது சிறந்தது. 



பண்டிகை நாட்களில் மணைக்கோலம் போட்டு, காவி இடவேண்டும். நடுவில் உள்ள டிசைன் உட்காரும் மணை போலக் கோலம் அமைந்திருப்பதால், இதற்கு, மணைக்கோலம் எனப் பெயர் வந்தது.இந்தக் கோலத்தின் நான்கு மூலைகளிலும் தாமரைப்பூ அல்லது செண்டு போன்ற டிசைன் போடுவது, அஷ்டதிக் பாலகர்களின் ப்ரீதிக்காக. ஆகவே கட்டாயம் அதைப் போடவேண்டும். கோலத்தின் மத்தி 'பிந்து ஸ்தானம்' எனப் படுகிறது. அங்கே தேவி வாசம் செய்கிறாள் .

ஆகவே எக்காரணம் கொண்டும் எந்தக் கோலத்தின் மத்தியிலும் (பூஜையறைக் கோலங்கள் உட்பட) வெறுமே விடக் கூடாது. செம்மண்பூசி அதன் மேல் பெரியதாக புள்ளி வைக்கலாம்.

நான் இங்கு சம்பிரதாயப்படி,போட வேண்டிய கோலங்களையே சொல்லிக்கொண்டு வருகிறேன்.  சம்பிரதாயங்கள் பெரும்பாலும் அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறையை ஒட்டியதாகவே அமைந்துள்ளன. உதாரணமாக,ஆடிப்பண்டிகை,போகிப்பண்டிகை முதலிய பண்டிகைகளின் போது,எண்ணை குளியல் கட்டாயம்.

Image result for padi kolamஆறு,குளங்களில் மட்டுமே குளிக்கும் வழக்கம் கொண்ட அக்காலத்தில், இம்மாதிரி பண்டிகை நாட்களில் தெப்பக்குளம் கோலம் (மணையைச் சுற்றி, நான்கு புறமும்,குளத்தின் படித்துறை போல் வரும் டிசைன்) போடுவார்கள். இயல்பாகவே, வேலைப்பளு மிகுந்த‌ பெண்களுக்கு, மங்களஸ்நானத்தை நினைவு படுத்தும் ஒரு குறியீடாகவும் கோலங்கள் பயன்பட்டன.

பொங்கல் பண்டிகையின் போது, மணையின் மேல், கோபுரம் வருவது போல் டிசைன் உள்ள கோலம் போட வேண்டும்.எல்லா வீடுகளிலும் அன்றைக்கு பால் பொங்கி,குடும்பம் செழித்து,கோபுரம் போல் வளர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக கோபுரக் கோலம்.

Image result for kanya kolamகனுப்பண்டிகையின் போது,வீட்டில் பிற‌ந்த‌ பெண்க‌ளை அழைத்து,சாப்பிட‌ச் சொல்லி,சீப்பு,க‌ண்ணாடி,முத‌லிய‌ ம‌ங்க‌ல‌ப் பொருட்க‌ளை வைத்துத் தாம்பூல‌ம் த‌ருவ‌து வ‌ழ‌க்க‌ம். நமது சம்பிரதாயப்படி சீப்பு,மங்கலப் பொருட்களில் ஒன்று.தாம்பூலம் கொடுக்கும் போது, சீப்பு,கண்ணாடி,போன்ற மங்கலப் பொருட்கள் வைத்துக் கொடுப்பதால்,கணவனின் ஆயுளும்,ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ஆக‌வே அன்றைக்கு சீப்புக் கோல‌ம் போட‌வேண்டும் நடுவில் 'ஸ்வஸ்திக்' வரைந்து,அதன் நான்கு புறமும்,சீப்பின் பற்கள் போல் கோடுகள் வரைந்து போடப்படுவதால், இதற்கு, சீப்புக்கோலம் என்று பெயர் வந்தது..

பொங்கலுக்கு அடுத்து வரும் ரத சப்தமி நாளில் 'ஏக சக்ர தேர்'க்கோலம் போடவேண்டும்.

சுப காரியங்களின் போது போடவேண்டிய கோலம்


வீட்டில் திருமணம்,வளைகாப்பு,கிரஹப்பிரவேசம் முதலிய சுபகாரியங்கள் நடக்கும்போது,வாசலில் மணைக்கோலமும், வீட்டில், சுபகாரியம் நடைபெறும் இடத்தில்,இரட்டை மணைக் கோலமும் போடவேண்டும்.இந்தக் கோலத்திற்கு மற்றொரு பெயர்,லக்ஷ்மி நாராயணர் கோலமாகும். இரண்டு மணைகள் இருந்தாலும் பார்க்க ஒரே கோலம் போல் தோன்றுகிறது. இது திருமாலையும் அவர் திருமார்பில் உறையும் மஹாலக்ஷ்மியையும் நினைவுபடுத்துகிறது. இருவரும் ஒருவரே எனும் உண்மையை விளக்கும் இக்கோலம், மறைமுகமாக, கணவன் மனைவி ஒற்றுமையையும் விளக்குகிறது.


கோலங்களில் வைக்கப்படும் புள்ளிகள் சிவஸ்வரூபமாகும். அதைச் சுற்றியுள்ள கோடுகள் சக்திஸ்வரூபமாகும்.ஆகவே கூடுமானவரை கோலங்களை காலால் மிதிக்காமல் இருப்பது நலம். பெரிய கோலங்கள் போடும்போது, கட்டாயம் பக்கத்தில் ஒரு மிகச் சிறிய கோலம் போடவேண்டும். இதற்குப் பெயர் 'துணைக் கோலம்'. சில பகுதிகளில் இதை 'மோகினிக் கோலம்' என்றும் கூறுகிறார்கள் .

வாசலில் கோலம் போடும் போது, வீட்டு நிலை வாசல்படியிலும் கோலம் போடவேண்டும். வீட்டு நிலையில் தான் கிருஹ‌லக்ஷ்மி வாசம் செய்கிறாள்.  தினந்தோறும் நிலைப் படிக்கு மஞ்சள் ,குங்குமம், பூ வைப்பது சிறந்தது.

கோலங்கள் மறைமுகமாக யந்திர வடிவங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால்,முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நாட்களில் கோலம் போடுவதில்லை கோலம்,முன்னோர்கள் நம் வீட்டினுள் வருவதைத் தடுக்கும் சக்தி கொண்டது.திதி கொடுத்து முடிந்தபின் கோலம் போடலாம்.எப்போதும் இரண்டு கோடுகளால் தான் கோலம் போடவேண்டும். ஒற்றைப்படை வரிகளால் ஆன‌ கோலம் சுபகாரியங்களின் போது போடக்கூடாது.
  
வட்ட வடிவமாகவோ அல்லது, ஒரு வட்ட வடிவத்திற்குள்ளோ போடப்படும் கோலங்கள், குடும்ப ஒற்றுமையை ஓங்கச் செய்யும்.


கோலம் போட்டு முடித்தபின், கோலத்தின் இருபுறமும், இரட்டை வரிகளில்,சிறு நேர்க்கோடுகள் அல்லது ஏதாவது டிசைன் வரைந்தால், மஹாலக்ஷ்மி நம் வாசற்படி தாண்டாமல் நம்முடனே நித்ய வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை.
                               


கோலம் போடுவதை ஒரு செயலாக மட்டும் பார்க்காமல், அதன் அர்த்தத்தை உணர்ந்து போட்டால், நலம் பல பெறலாம்.


வெற்றி பெறுவோம்!!!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

"பணம் பாசத்தை விலைக்கு வாங்கி ......"



http://classroom2007.blogspot.in/

இது நான் பின் தொடரும் ஒரு வலைப்பூ. ஞாயிறு தோறும் 'மாணவர் மலர்' என்ற பகுதியில் மாணவர்களின் ஆக்கங்கள் வெளிவரும். இன்றைய தினம் எனது கட்டுரை ஒன்று அதில் வெளிவந்துள்ளது. அதன் பிரதி என் நண்பர்களுக்காக இங்கே..............

My sincere thanks to Thiru. SP.VR. SUBBIAH  avl.,

to see this post with feed back SEE here



வம்ச விருத்திக்கு எது முக்கியம்?
கட்டுரையாக்கம்: பார்வதி இராமச்சந்திரன், பெங்க‌ளூரு

அன்பார்ந்த நண்பர்களே,

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த ஒரு நிகழ்வையே இங்கு எழுதுகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு, அருகாமையில் உள்ள ஒரு வீட்டில், குடும்பத் தலைவர் இறைவனடி சேர்ந்தார். வாரிசு இல்லாத அவர்,தன் உடன் பிறந்தவர் மகனை எடுத்து வளர்த்து, நன்கு படிக்கவைத்து, ஆளாக்கினார் .பையன், தற்போது வெளிநாட்டில். செய்தி அறிந்ததும் அவன் ஓடி வந்து கொண்டிருந்தான்.
        
இங்கே பையனின் 'ஒரிஜினல்' தாயார், வளர்ப்புத் தாயிடம் கடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.கணவனை இழந்த வளர்ப்புத் தாயோ மிகுந்த மனத்துயருக்கு ஆளாகி,கண்ணீர் வடித்த வண்ணம் இருந்தார். விஷயம் இதுதான். தன் மகன், வெளிநாட்டில் வசிப்பதால்,அவனை இனிமேல் அடிக்கடி அழைத்து தொல்லை தரக் கூடாதெனவும்,மற்ற மாதந்திர, ஆறாம் மாதச் சடங்குகளை எல்லாம் தன் மகனை செய்யக் கட்டாயப்படுத்தக் கூடா தெனவும் 'ஒரிஜினல்' தாயார் சொல்ல,(கொள்ளி மட்டும் வைக்கலாமாம். இல்லையின்னா சொத்து கிடைக்காதுல்ல)

வளர்ப்புத்தாயோ,'இதை எல்லாம் செய்யாததுனால நாளைக்கு வீடு வாசல தர மாட்டோம்னா சும்மாவிடுவீங்களா?' என,பெற்றவள் 'ஓஹோ, அப்படி ஒரு நினைப்பு இருக்குதா?, அப்ப, இப்பவே என் மகன் பேருக்கு எல்லா சொத்தையும் எழுதித் தரேன்னு வந்திருக்கிற சொந்த பந்தத்துக்கு முன்னாடி சொல்லுங்க, இல்லேன்னா என் மகன் கொள்ளி போட மாட்டான்' எனக் கூச்சலிட,சத்தமும் சண்டையுமாக அரங்கேறின காட்சிகள். வந்த உறவுக்கூட்டமோ வேடிக்கை பார்க்க, வளர்த்தவளின் உறவுகள்,'இப்பவே சொத்தக் குடுத்தா,நாளைக்கு நீ பிச்சை தான் எடுக்கணும்.இப்பவே இப்படிப் பேசுறவ,நாளைக்கு உனக்கு ஒண்ணுன்னா, அவன் வந்து பார்க்க விடுவாளா?.சொத்தை வாங்கின கையோட, உன்னை ஒரு முதியோர் இல்லத்துல சேர்க்கச் சொல்லுவா பாரேன்' என்று 'ஏற்றி'விட, மேடையில்லா நாடகம் ஒன்று அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.
    
பணம் பாசத்தை விலைக்கு வாங்கி உலையில் போட்டு பொங்கித் தின்று கொண்டிருந்த அந்த இடத்தில் நிற்கப் பிடிக்காமல் நான் விரைந்து வீடு வந்தேன்.

குளித்து விட்டு,கொதிக்கும் மனதை அமைதிப்படுத்த, தியானம் செய்ய உட்கார்ந்தேன். ஏனோ,எனக்கு என் தாத்தா சொன்ன,   நான் பிறந்த குடும்பத்தில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவிற்கு வந்தது.
        
இந்த நிகழ்வில் வரும் பெயர்கள்,சம்பவங்கள் யாவும் உண்மையே. இதை,என் தாத்தா சொன்னபடி தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். இந்த நிகழ்வு கி.பி.1890 களில் துவங்குகிறது.

நாட்டரசன் கோட்டை எனும் ஊர், சிவகங்கை அருகே உள்ளது.அங்கே கிருஷ்ண தீக்ஷிதர் என்ற‌ புகழ் பெற்ற ஜோசியர் ஒருவர் இருந்தார். அவருடைய கடைசி மகள் பெயர் பூரணி. பெயருக்கேற்றார் போல் அழகும் அறிவும் பூரணமாக நிரம்பியவள்.ஆனால் தலையெழுத்து?. குழந்தையின் ஜாதகம் பார்த்த தந்தை மனம் உருகினார்.அவர் பாவம், என்ன செய்வார்? 'வகுத்தான் வகுத்த வகையில்'எல்லாம் நடக்கும் என திடம் கொண்டார். இறைவன் மேல் பாரத்தைப் போட்டு, குழந்தைக்கு மணம் செய்து வைத்தார். ஆனால் விதி வலியது. அவருடைய செல்ல மகள் மிகச்சிறு வயதிலேயே, வாழ்விழந்தாள்

பூரணியின் கணவன் வீட்டார்,'கன்னிகாதானம் ஆகி விட்டதால் அவள் எங்கள் வீட்டுப் பெண்,ஆகவே அவள் இங்கேயே இருக்கலாம்' எனக் கூறியும் கேட்காமல், தந்தை அவளைப் பிறந்தகம் அழைத்து வந்தார்.சில  வருடங்கள் கழிந்தபின், மதுரை,திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தலைமை அர்ச்சகராகத் தொண்டுபுரிந்து வந்த தீக்ஷிதரின் மூத்த மகனின் மனைவி,முருகனடி சேர்ந்தார்.  மறு மணத்திற்கு மறுத்துவிட்ட, ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான அவர்,தன் தங்கையை தனக்கு உதவியாக தன்னோடு அனுப்புமாறு தந்தையை வேண்டினார். தீக்ஷிதரும் சம்மதித்தார்.

இதற்கிடையில்,வறுமையில் வாடிய தீக்ஷிதரின் மற்றொரு பெண்ணின் குழந்தைகளை,தீக்ஷிதரின் மகன்கள் ஆளுக்கொருவராக பொறுப்பெடுத்து வளர்த்துக்கொடுப்பது என முடிவாயிற்று.அதன்படி,மூத்த மகனின் பொறுப்பில் வந்த குழந்தையை,பூரணி தன் சொந்த மகனே போல் வளர்த்து வந்தாள். மூத்த மகனின் வீட்டில் சகலமும் பூரணியின் பொறுப்பில் நடந்தது. அவர் குழந்தைகளுக்கு அத்தை ஒரு சொல் சொல்லிவிட்டால் அதுதான் வேதவாக்கு.

பூரணியின் கணவன் வீட்டாரும் பூரணியை அடிக்கடி வந்து பார்த்து நலம் விசாரித்து வந்தனர். குறிப்பாக, பூரணியின் கொழுந்தனாரும் அவர் மனைவியும் மதுரைக்கு வரும் போதெல்லாம், பூரணியை வந்து பார்க்கத் தவறுவதில்லை.

காலம் உருண்டோடியது.கால காலன், தன்னடியில் பூரணியைச் சேர்த்துக் கொண்டான். அவருக்கு யார் இறுதிச் சடங்குகள் செய்வதென்பதில் பிரச்னை ஏற்பட்டது.ஆனால் இது வேறுமாதிரியான பிரச்னை.'அத்தை எங்களைத் தாய்போல் வளர்த்தார். அவர் எங்களுக்காகவே வாழ்ந்தார்.ஆகவே நாங்கள்தான் செய்வோம் ' என்று பூரணியின் அண்ணன் மகன்கள் வாதிட,பூரணியின் சகோதரி மகனோ, 'நான் தான் அபிமான புத்திரன் [முறைப்படி ஒரு குழந்தையைத் தத்து எடுக்காமல் வளர்த்தால் அக்குழந்தை வளர்த்தவரின் அபிமான புத்திரன்],ஆகவே எனக்குத்தான் உரிமை' என்று அடம் பிடித்தான். அத்தையின் கொழுந்தனாரோ,'எங்கள் அண்ணன் சிறு வயதில் மாண்டு போனதால் அவர் உங்கள் வீட்டுக்கு வந்தார். இல்லையென்றால் எங்களுடன் தான் இருந்திருப்பார். திருமணத்திற்குப் பிறகு எங்கள் வீட்டுப் பெண்ணாகி விட்ட அவருக்கு நாங்கள் செய்வதுதான் முறை' என்றார். 

இத்தனைக்கும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும், அத்தை உள்பட ,டாடா,பிர்லா இல்லை. அத்தையில் பெயரில்,மதுரை பண்டாபீசில், அவள் தமையன்,தனக்குப் பின் தங்கைக்கு உதவும் என்று போட்டுவைத்திருந்த சொற்பத் தொகையும் ஓரிரண்டு பவுன் சங்கிலியுமே (அந்தக் காலத்தில் தங்கம் என்ன விலை?) அத்தையின் சொத்து.

கடைசியில் முடிவு என்ன ஆயிற்று?.அத்தையின்அபிமான புத்திரனுக்குத் திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. அக்கால வழக்கப்படி மறுமணம் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருந்த நிலை அப்போது. ஆகவே அவர் கர்மம் செய்தால்,அத்தையின் ஆசீர்வாதத்தில் குழந்தை பாக்கியம் கிட்டும்,ஒரு பெண்ணின் வாழ்வை மனதில் வைத்து மற்றவர்கள் இதற்குச் சம்மதிக்க வேண்டும் என்று வயதில் மூத்த உறவினர் ஒருவர் எடுத்துக்கூற,அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அவர் கூற்றுப்படியே, மறுவருடமே அத்தையின் அபிமான புத்திரனுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.

இதை கூறிவிட்டு எங்கள் தாத்தா கூறிய 'மாரல்ஸ் ஆஃப் தி ஸ்டோரி'.

1. வம்ச விருத்திக்கு முன்னோர்களுக்கு நீத்தார் கடன்களை விடாமல் செய்வது முக்கியம்.

2. ஆதரவில்லாதவர்கள் இறந்தால் அவர்களுக்கு,இறுதிக் காரியங்கள் செய்வது,அச்வமேத யாகப் பலன் தரும். யாரும் செய்ய முன்வராவிட்டால், பிரஜைகளின் தந்தை என்ற முறையில்,ராஜாவே செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம் (இக்கால 'ராஜா' க்கள் ஒரு இனத்துக்கே செஞ்சிருவாங்க).

3.பணத்துக்காக இக்காரியங்கள் செய்யப்பட்டால்,இறந்தவரின் ஏழு தலைமுறைப் பாவம்,கர்மம் செய்தவரைச் சேரும்.

4.தர்ம சிந்தனையுடன், இம்மாதிரி காரியங்கள் நடைபெற பண உதவி செய்வது,சிவலோகப் பிராப்தியைப் பெற்றுத்தரும்.

இந்த விஷயங்களை யார் இந்தக்கால குழந்தைகளுக்கு சொல்வார்கள்?.இதை சொல்லவேண்டிய ஆட்களில் கொஞ்சம்,ஓல்ட் ஏஜ் ஹோமிலும்,கொஞ்சம் வீட்டு டி.வி,முன்னாலும் பழிகிடக்க,கேட்க வேண்டிய குழந்தைகள் 'க்ரச்'ல் உறங்குகின்றன. மீதிப்பேர் சொல்ல ரெடி. யார் கேட்கிறார்கள்?.

ஒரு நீண்ட நெடிய பெருமூச்சு ஒன்றுதான் என்னிடமிருந்து வெளிப்பட்டது.

ஆ, சொல்ல மறந்துட்டேனே. எங்க தாத்தவும் இதில ஒரு சின்ன காரெக்டர் (மெயின் அல்ல). இன்னமும் பூரணியின் அபிமான புத்திரன் உயிரோடு இருக்கிறார். தள்ளாத வயதிலும் தன் சின்னம்மாவிற்கு திதி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

கட்டுரையாக்கம்: அன்புடன், பார்வதி இராமச்சந்திரன், பெங்க‌ளூரு.

சனி, 25 பிப்ரவரி, 2012

KOLANGAL ...KOLANGAL..PART 1....கோலங்கள்..... கோலங்கள்.....பகுதி..1....



கோலங்கள் போடுவது எப்படி? என்பதிலிருந்து கோலங்களின் வகைகள் வரை மனப்பாடமாகத் தெரிந்த 'எக்ஸ்பர்ட்'கள் யாவருக்கும் என் பணிவான வணக்கம். ஆனால் இந்தப் பதிவு கோலங்கள் ஏன் போடவேண்டும் என்று தெரியாத இளம் தலைமுறையினருக்கானது.
கோலங்கள்,பெண்களின் கலா ரசனை மற்றும் அழகுணர்ச்சியை வெளிப்படுத்துவதற்காக மாத்திரம் போடப்படுவது அல்ல.கோலங்களில் சக்தி வாய்ந்த எந்திரங்கள் மறைந்திருக்கின்றன. நாள் தோறும் போடவேண்டியவை, பண்டிகைக்காலங்களில் போடவேண்டியவை, ஹோமம்,பூஜைகளின்போது போடவேண்டியவை,சுப காரியங்களில் போடவேண்டியவை என தனித் தனி கோலங்கள் உள்ளன. நம் முன்னோர்கள்,ஒரு காரியம் தொடங்குமுன்,அதை நிறைவேற்றித் தரும் தேவதைகளின் அருட்சக்தியை ஈர்த்து நமக்குத்தரும் வகையில் அத் தெய்வங்களின் எந்திரங்களை எளிய கோலங்களாக மாற்றி, நமக்குத் தந்திருக்கிறார்கள்.ஆகவே, நிகழ்வுக்குப் பொருத்தமான கோலங்கள்,   நினைத்த காரியம் கைகூட வழி வகுக்கும்.மேலும் கோலங்கள் தெய்வீக சக்தி கொண்டவை. தினம் வாசலில் போடுவதால், துர்சக்திகள் அண்டாது. இனி, கோலங்களைப் பார்ப்போம். 
தினமும் வாசலில் போடும் கோலங்கள்:

சின்ன 'ஸ்டார்' வடிவக் கோலம் முதல் ரங்கோலி வரை இவ்வகைக் கோலங்கள் நம் அனைவருக்கும் தெரியும். ஆகவே அடுத்த வகையைப் பார்க்கலாம்.

பூஜையறைக் கோலங்கள்.

ஸ்ரீபாதக் கோலம்
இந்தக் கோலத்தை வரைந்து, பாதங்களைச்சுற்றி, மஞ்சள் குங்குமத்தால், நலங்கு இட்டு, அம்பிகையப் பூஜித்தால், எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும்.           

ஐஸ்வர்யக்கோலம்                                                           



ஐஸ்வரியக்கோலமும்,ஹ்ருதயக்கமலமும் போடாத வீடுகளே இல்லை. குறிப்பாக, வெள்ளிக்கிழமைகளில் அரிசி மாவால் ஒரு பலகையில் ஐஸ்வர்யக்கோலம் போட்டு, நடுவில் ஐந்து முகக் குத்துவிளக்கு ஏற்றி லலிதா சஹஸ்ரநாமம்,செளந்தர்ய லஹரி பாராயணம் செய்து, சர்க்கரைப் பொங்கல் அல்லது வெல்லப்பாயசம் நிவேதனம் செய்து அம்பிகையை வணங்கி வர திருமணம் கைகூடும். குறிப்பிட்ட வாரங்களுக்கு இப்பூஜையைச் செய்வதாக நேர்ந்து கொண்டு,கடைசி வாரம்,12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, நலங்கு இட்டு, இனிப்பு, உடை, வளையல், பொட்டு, கண்மை, மருதாணி அளித்து,சுமங்கலிகளுக்கு (எண்ணிக்கை அவரவர் வசதியைப் பொறுத்தது),உணவு,மஞ்சள் குங்குமம், தாம்பூலம் வழங்கினால், மனதிற்கிசைந்த மணாளன் அமைவார் என்பது நம்பிக்கை...





48 நாட்கள் ஹ்ருதயக் கமலம் கோலத்தை, மனத்தில் வேண்டும் பிரார்த்தனை நிறைவேற வேண்டி பக்தியுடன் பரமன் திருமுன் போட்டு விளக்கேற்றி வந்தால் எண்ணிய யாவையும் கைகூடும்.


ஹ்ருதயக்கமலகோலம்



(ஹ்ருதயக் கமலம் கோலம், புள்ளிகள் வைத்து இணைக்கும் முறை)

ஒரு சுத்தமான பலகையில்,21 தாமரைப் பூக்களை வரைந்து, கனக தாரா ஸ்தோத்திரம் சொல்லி, ஒரு ஸ்லோகத்துக்கு, ஒரு நாணயம் வீதம்(ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய்)ஒவ்வொரு பூ மீதும் வைத்து, மஞ்சள், குங்குமம்,பூ தூவி, இயன்ற நைவேத்தியம் செய்துவர, பணக்கஷ்டம் அகலும்.

கனக தாரா ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.

Image result for navagraha kolamசஞ்சீவி பர்வதக்கோலம் (ஃ வடிவில் புள்ளிகள் வைத்து, கோடுகளால் இணைத்தால் மலை வடிவம் வரும்.கோலத்தின் அடிப்பகுதியை ஒட்டி ஒரு வால் வரைந்து மஞ்சள் குங்குமம் இட வேண்டும்.). ஆஞ்சநேயர் அருளால் சனிப் ப்ரீதி, ராகுப் ப்ரீதி ஏற்படும் .    

ஒவ்வொரு நாளுக்கும் உரிய நவக்கிரகக் கோலங்களை நாள்தோறும் பூஜையறையில் போடலாம்.  அந்தந்தக் கிரகத்துக்குரிய நிறங்களில் போடுவது சிறப்பு. புதன் கிழமைகளில் பச்சை நிறத்தில் புதக்கிரகத்துக்குரிய கோலம் போட்டு, ஹயக்கிரீவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி, 'ஹயக்கிரீவப் பிண்டி' எனப்படும் கடலைப்பருப்பு பூரணம் நிவேதனம் செய்து விநியோகித்தால்,ஞாபக மறதி அகலும்.குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள்.குருப் ப்ரீதி வேண்டுவோர்,வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிறக் கோலமிட்டு,நெய் விளக்கேற்றி,கொண்டைக்கடலை சுண்டல்,லட்டு நிவேதனம் செய்து விநியோகிக்கலாம். நவராத்திரியில், தினம் ஒன்றாக ஒன்பது கோலங்களையும் போடலாம்.

வெள்ளிக் கிழமைகளில் குபேரக் கோலமிட்டு,காசு வைத்து,  குபேரஸ்துதி, லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லிப் பூஜை செய்து மாதுளம் பழம்,இனிப்பு நிவேதனம் செய்து வர பணக்கஷ்டம் அகலும். காலை ஏழு மணிக்குள் இப்பூஜையைச் செய்வது சிறப்பு. படத்தில் காட்டியபடி காசு வைக்க வேண்டும்.



லக்ஷ்மி அஷ்டோத்திரத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும் .

குபேரன் 108 போற்றிக்கு இங்கு சொடுக்கவும்

பொதுவாக, பூஜையறைக் கோலங்களை கால் மிதி படாத இடத்தில் தான் போடவேண்டும். அரிசி மாவால் தான் போடவேண்டும். செவ்வாய்,வெள்ளி காவி இட வேண்டும்.கோலங்கள் போடும்போது,தெரிந்த ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டே,முழு கவனத்துடன் போடவேண்டும். இது தெய்வீக அலைகளை நமக்குப் பெற்றுத் தரும். கை அல்லது துணி கொண்டு தான் சுத்தம் செய்ய வேண்டும்.
  
மற்றவை அடுத்த பதிவில்....

வெற்றி பெறுவோம்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் : நன்றி, கூகுள் படங்கள்.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

சிவராத்திரி விரதம்


நமது அன்றாட வாழ்வில்,  நாம் அடைய வேண்டிய செல்வங்களுள் முக்கியமானவை உடல் நலனும் மன நலனும் ஆகும். விரதங்களை அனுஷ்டிப்பதன் மூலம் இவை இரண்டையும் நாம் பெறலாம். மேலும் மனிதப் பிறவியின் பலனை அடையவும் விரதங்கள் வழி வகுக்கின்றன.

விரதம் என்றால் 'உணவு உண்ணாமல் இருத்தல்' என்பது மட்டுமே நம்மில் பலர் அறிந்தது. ஆனால் விரதம் என்பது அது மட்டும் அல்ல. விரதம் அனுஷ்டிப்பவர்கள், 

1.அதிகாலையில் குளித்த பின், பூஜையறையில்,இறைவன் திருமுன்,விரதத்தை அனுஷ்டிக்க தனக்கு சக்தியளிக்குமாறு வேண்டி நமஸ்கரிக்கவேண்டும். இது 'சங்கல்பம் செய்வது' எனப்படும். 

2. பெண்கள்,கணவன் அனுமதியுடன் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். 

3. முழுப் பட்டினி இருக்க முடியாதவர்கள், பால், பழம், பயத்தங்கஞ்சி,சத்துமாவு(வெல்லம் கலந்தது) முதலியவற்றை உண்ணலாம். 

4. அடிக்கடி நீர் அருந்தக் கூடாது. 

5.கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

6.அதிகம் பேசாமலும், இறைவன் நாமத்தை மனதுக்குள் உச்சரித்தவாறும் இருக்க வேண்டும். 

7.பகலில் உறங்கக் கூடாது. 

8.உண்மையே பேச வேண்டும். 

சிவராத்திரி விரதமும் பூஜையும், இகபர சுகங்களை வேண்டுவோர் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியதாகும். சிவராத்திரி விரதக்கதை, நம்மில் பலர் அறிந்ததே. அன்று,விரதம் இருப்போர் மேற்கூறிய யாவையும் கடைப்பிடிக்கவேண்டும். மேலும், 

1. சிவாலய தரிசனமும் சிவனுக்கு அபிஷேகப் பொருள்கள் சமர்ப்பித்தலும் மிக முக்கியம். 

2.முடிந்தால் வீட்டில், மாலை வேளையில் சிவபூஜை செய்யலாம். குலதெய்வமாக சிவனை வழிபடுபவர்கள் கட்டாயம் சிவபூஜை செய்யவேண்டும். 

3. நிவேதனத்திற்கு பாசிப்பருப்பு பாயசம்,  வேக வைத்து,வெல்லம் ஏலக்காய் சேர்த்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முதலியவை விசேஷம். வேண்டும் மற்ற நைவேத்தியங்களும் வைத்து வழிபாடு செய்யலாம். 

5. இரவு முழுக்க கண் விழித்து, சிவ ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்ய வேண்டும். டி.வி. பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. 

6. உற்றார்,உறவினர்கள்,நண்பர்களை பூஜையில் பங்கு பெற அழைத்து, பிரசாதம் வழங்கலாம். 

7. சிவபுராணம்,தேவாரம், திருவாசகம், ஸ்ரீருத்ரம், முதலியவற்றை  வீடுகளிலோ, கோவில்களிலோ பலர் சேர்ந்து பாராயணம் செய்வது சிவனருளைப் பலருக்குப் பெற்றுத்தரும். 

8. விரதம் இருக்க முடியாதவர்கள், கூடுமானவரை, உணவு (meals), உண்ணாமல், பலகாரங்கள்(உப்புமா போன்றவை) உண்ணலாம்.

குறிப்பாக, சிறு குழந்தைகளுக்கு, நம் கலாச்சாரத்தைப் பற்றியும், விரதம் அனுஷ்டிப்பதன் காரணங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறுவது, பக்தியையும், பண்பாட்டையும் வளர்க்க உதவும்.

20.2.2012, திங்கள், சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து, சிவனருள் பெறலாம்.

வெற்றி பெறுவோம்!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

தினந்தோறும்



தினந்தோறும் நாம் செய்ய வேண்டிய, செய்யக் கூடிய சில சம்பிரதாயங்களை இங்கே கொடுத்துள்ளேன். பெரும்பாலானவை நம்மில் அநேகம் பேரால் கடைபிடிக்கப்படுபவையே.

1. காலையில் எழுந்ததும்,மனதுக்குப் பிடித்த கடவுளை சில நிமிடம் நினைக்கவேண்டும். இருகரங்களையும் சேர்த்துப் பார்த்து,கர தரிசன ஸ்லோகம் சொல்லலாம்.இதன் காரணம், காலையில் எந்த மனநிலையில் இருக்கிறோமோ அதுவே அன்று முழுவதும் நாம் செய்யும் வேலைகளில் பிரதிபலிக்கும். இது ஒரு ரிலாக்சேஷன் டெக்னிக்.

2.சீக்கிரமே காலைக்கடன்களை முடித்துவிட்டு,குளித்து விடவேண்டும். பிரம்ம முகூர்த்தத்தில் குளிப்பது தேவக்குளியல், 6 மணிக்குள் குளிப்பது மனிதக் குளிய‌ல்,அத‌ற்கு மேல்குளிப்ப‌து அசுர‌க்குளிய‌ல் என்ப‌து சாஸ்திர‌ம்.

3. விள‌க்கேற்றிவிட்டுத்தான் வேலைக‌ளைத்தொட‌ங்க‌வேண்டும்.

4. அடுக்குமாடி வீடானாலும் வாச‌லைத்துடைத்து ஒரு சின்ன‌க் கோல‌மாவ‌து போட‌வேண்டும். ஸ்டிக்க‌ர் கோல‌ம் த‌விர்ப்ப‌து சிற‌ப்பு.

5. சர்க்க‌ரை போட்ட‌ பால், ஏதாவது ஒரு வகைப் பழம்,ஒரு கைப்பிடி சாத‌ம்,( நெய், ப‌ருப்பு க‌ல‌ந்த‌து) என்று ஏதேனும் நிவேத‌ன‌ம் செய்ய‌வேண்டும்

6. நிவேதனம் செய்த அன்னத்தை காக்கைக்குப் போடவேண்டும். இது பித்ரு தோஷம் வராதிருக்க உதவும். இவ்வாறு செய்ய முடியாத வீடுகளில்,பிரட் அல்லது சிறு தானியங்கள் (நெல்.கோதுமை போன்றவை)பறவைகளுக்குக் கொடுக்கலாம்.

7. காலை,மாலை இரு வேளையும் குறித்த நேரத்தில் விளக்கேற்றப் பழக வேண்டும்.

8. வெள்ளிக்கிழமைகளிலும், ப‌ண்டிகை நாட்க‌ளிலும் பூஜை அறையைச் சுத்த‌ம் செய்து, விளக்கேற்ற‌ வேண்டும்.

9. விள‌க்குக‌ள் சுத்த‌ம் செய்ய‌ வியாழக்கிழ‌மை உக‌ந்த‌து.

10. விள‌க்கேற்றிய‌ பின் சிறு ம‌ணை அல்ல‌து பாய் எடுத்து விளக்கிற்கு முன் அல்ல‌து ஹாலில் ஒரு குறிப்பிட்ட‌ சுத்த‌மான‌ இட‌த்தில் தின‌மும் போட‌ வேண்டும். வ‌ருகிற‌ ல‌க்ஷ்மியை வ‌ர‌வேற்று ஆச‌ன‌ம் அளிப்ப‌தாக‌ ஐதீக‌ம்.சிறிது நேர‌த்தில் அக‌ற்றி விட‌லாம்.

11. இர‌வு ப‌டுக்கும் முன் இறைவ‌னை வழிப‌ட்டு,பின் உற‌ங்க‌ வேண்டும்.
                                              
                                                 


வெற்றி பெறுவோம்!